சிறுகதை - அப்பா ஒருமாதிரி! - ரவை
" மீரா! இனிமேல் கறிகாய் வாங்க நீ கடைக்குப் போகவேண்டாம். நான் போகிறேன். வீதியிலே ரௌடிங்க, திருடன்கள், பிக்பாக்கெட் செய்கிறவங்க, அதிகமாயிட்டாங்க, சரியா?"
மீரா பதிலே பேசாமல், கணவன் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே, பையுடன் கறிகாய் கடைக்கு கிளம்பினாள்.
சிறிது நேரத்தில் அவள் வீடு திரும்பியதும், கணவன் அவளிடம் சிறிதும் கோபமின்றி, சிரித்து சகஜமாகப் பழகினார்.
இதை கவனித்துக் கொண்டிருந்த அவர்கள் மகன் பிரபுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
" அப்பா! நீ வக்கீல் தொழிலுக்கு முற்றிலும் பொருத்தம்ப்பா!"
" அப்படியா! எதை வைத்து சொல்றே?"
" கோர்ட்டிலே வக்கீல் காரசாரமாக ஒரு கேஸிலே வாதாடுவார், வாதம் முடிந்ததும் அவர் சாதாரணமாக நடந்துகொள்வதைப் பார்த்தால், இவரா அத்தனை உணர்ச்சியுடன் காரசாரமாகப் பேசினாரென ஆச்சரியமாயிருக்கும்...."
" சரி, அதெப்போல...."
" அதைப் போல, நீயும் அம்மாவிடம் ரொம்ப சீரியஸா கறிகாய் கடைக்கு போகாதேன்னு சொன்னே, அம்மா பதில்கூட பேசாமல் தன் இஷ்டப்படி கறிகாய் கடைக்குப் போய் வந்ததும், அம்மாவிடம் நீ கோபத்தின் அடையாளமே இல்லாமல், சகஜமா சிரித்துப் பேசறியே, எப்படிப்பா?"
அப்பா சிரித்துவிட்டு, மகனிடம் விளக்கினார்.
" பிரபு! அம்மாவை எச்சரிக்கணும்னு எனக்கு மனதில் தோன்றியது, எச்சரித்தேன். அதேபோல, அம்மாவுக்கு தான் செய்வதில் தவறில்லை, என உறுதியாக நம்பிக்கை யிருந்ததால், அவள் என்னிடம் வாக்குவாதம் செய்து நேரத்தை வீண் அடுக்காமல், தன் போக்கிலே நடந்துகொண்டாள். அதனாலே அவள் எந்தத் தவறும் செய்யவில்லை, அவள்மீது நான் ஏன் கோபம் அடையவேண்டும்?"
" சரி, இரண்டிலே ஏதோ ஒன்றுதானே சரியாக இருக்கமுடியும், நீ உன் கருத்தை வலியுறுத்தி யிருக்கவேண்டாமா?"
" உன் கேள்வி முற்றிலும் நியாயமானது! இதில், ஒரு வித்தியாசம் என்னன்னா, நானும் அம்மாவும் தம்பதி! எனக்கு எந்த தீங்கும் வரக்கூடாது அவளும், அதேபோல, அவளுக்கு தீங்கும் வரக்கூடாது என நானும் நினைக்கிறோம். அதனால்தான், அம்மா கறிகாய் கடைக்கு நான் சொன்ன எச்சரிக்கையை மனதில் இருத்திக்கொண்டு கவனமாக போய் வந்துவிட்டாள். இது தாம்பத்ய உறவின் ரகசியம்! உனக்கு கல்யாணம் ஆனபிறகு புரியும்....."