தூர எறிந்துவிட்டு, அவனை அணைத்துக்கொண்டு கதறினாள்.
அந்த இடத்துக்கு அவள் கணவனும் வந்தார்.
" சிவா! ஏன்டா இப்படியெல்லாம் நடந்துக்குறே? கார் துடைக்கத்தான், சம்பளம் கொடுத்து க்ளீனர் வைச்சிருக்கோமேடா, உனக்கேன்டா இந்த வேலை? நீ ஒரு கோடீஸ்வரனின் வாரிசுடா! வங்கி துணை மேலாளருடைய ஒரே பிள்ளைடா! வீதியிலே போறவங்க, வரவங்க, நீ கார் துடைக்கறதைப் பார்த்தா, என்னடா நினைப்பாங்க? உன்னை கேவலமா, க்ளீனர்னு நினைப்பாங்களேடா!......"
" நம்மவீட்டு காரை சுத்தமா வைச்சிக்கறது, நம்ம வேலை தானேப்பா! இதிலே என்னப்பா கேவலம்? அப்படி கேவலமா மற்றவங்க நினைச்சா அது அவங்க தப்பு!"
முதன்முறையாக, தங்கள் மகன் இவ்வளவு பேசியதைக் கேட்ட பெற்றோர், ஸ்தம்பித்து நின்றனர்!
காரின் அருகே நின்றிருந்த டிரைவர் முன்னே மேற்கொண்டு பேச்சை வளர்த்த விரும்பாமல், தீட்சதர் காரில் ஏறிக்கொண்டார்.
அந்த விலை உயர்ந்த கார் சத்தமில்லாமல் சாலையிலே வழுக்கிச் சென்றதுபோல், சிவா தாயின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றான்.
"சிவா! நீ பத்தாவது முடிச்சாச்சு, மேற்கொண்டு காலேஜிலே சேர்ந்து படித்து பட்டம் வாங்கி மேற்படிப்புக்கு அமெரிக்கா போய் அங்கே டாக்டரேட் பட்டமும் வாங்கணும்னு எனக்கு ரொம்ப ஆசைடா! செய்வியா?
சிவா வழக்கம்போல சிரித்துவிட்டு நகர்ந்தான்.
" டேய்! நில்லுடா! கேட்டதுக்குப் பதில் சொல்லிட்டுப் போடா!"
சிவா நின்று திரும்பி தாயை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு, சிரித்தான்.
" ஏன்டா! இப்படி சிரித்துச் சிரித்தே வாயைத் திறந்து பேசாமலே காலம் தள்ளிடலாம்னு நினைக்கிறியா? உனக்கு அது சாத்தியமாயிருக்கலாம், ஆனா உன்னைப் பெற்ற எங்களாலே ஊரார் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லாம இருக்க முடியாதுடா!"
" பதில் சொல்லுங்கம்மா!"
" என்னன்னு சொல்றது, என் புள்ளைக்கு படிப்பு வரலேன்னா, உங்கப்பா வேத சிரோன்மணி மட்டுமில்லேடா, சார்டேர்ட் அகௌண்டன்சி பரீட்சையிலே நேஷனல் ஃபர்ஸ்ட் வந்தவர்டா!..."
" வாத்தியார் புள்ளை மக்குன்னு ஒரு பழமொழியே இருக்கே........"
" ஏன்டா இப்படி பிடிவாதம் பிடிக்கிறே? உனக்கிருக்கிற அறிவுக்கு, உன்னாலே நல்லா படித்து பட்டம் வாங்கமுடியும்டா! எனக்காக மனம் இரங்கி உன் போக்கை மாற்றிக்கொள்ளுடா!"