" குழந்தே! அப்படியா! அப்பா மற்றவங்களுக்கு சொல்லித் தருவதை நீ கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறாயா? நம்பமுடியலைடா..."
" இதையெல்லாம் நம்பாவிட்டால், பரவாயில்லை! 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவனடி சேராதார்!'னு குறள் அழுத்தந் திருத்தமா சொல்கிறது, நான் நம்பறேன், ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொருவனையும், படைக்கப்பட்ட அனைத்தையும் அந்தப் படைத்தவன், பகவான், ஆக்கி, காத்து வளர்க்கிறான் என்பதை நான் திடமாக நம்புகிறேன், எது நடந்தாலும் அதை ஆண்டவன் செய்கிறான்னு நம்பறேன், நாம் அனைவரும் அவனுடைய குழந்தைகள், நமக்கு ஒருநாளும் அவன் தீங்கு நினைக்கவே மாட்டான், நல்லதையே தருவான்னு நான் நம்பறேன், நீங்க நம்பலை! என்னை நாளையே அந்த ஆண்டவன் முற்றிலும் மாற்றி, உங்கள் ஆசைப்படியே நானும் அமெரிக்கா சென்று கௌரவமாக வாழ்ந்தாலும், நான் அதை என்னுடைய சாதனையா நினைத்து கர்வப்படமாட்டேன், ஆனா நீங்க ரெண்டு பேரும் உங்களாலேதான் நான் அந்த நிலைக்கு வந்ததாக பெருமைப் படுவீங்க! நானோ, அந்த ஆண்டவன் தன் குழந்தைகளை விளையாடவிட்டு அதைப் பார்த்து ஆனந்தப்படுகிறான்னு நம்புவேன்! அம்மா! எது நடந்தாலும் அது அவன் செயல், அவன் நல்லதே செய்வான்னு நம்புவதால், நான் எப்போதும் சந்தோஷமாக, இல்லை இல்லை, அமைதியாக இருக்கிறேன், நீங்கள் மாறாக குறைப்பட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்! அப்பாவையும் உன்னையும் இப்படி வாழவைப்பதும் என்னை நேர்மாறாக நடந்துகொள்ள வைப்பதும், அவன்தான்! அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். நம்பவேண்டும். நான் நம்புகிறேன், நீங்களும் நம்புங்களம்மா!"