மாட்டிக்கொண்டான்....
முதல்முறையாக பார்ப்பதால் மாத்ரீகரும், அவரின் உதவியாளர்களும் செய்வது வரதனுக்கு புதுமையாக இருந்தது... வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரு சுற்று சுற்றி எல்லா மூலைகளிலும் எலுமிச்சம் பழத்தை வைத்த மாந்த்ரீகர் கோலமிடப்பட்டிருந்த நடுக்கூடத்தில் வந்தமர்ந்தார்...
“உங்களோட ப்ரச்சனை எல்லாம் நான் தீர அலசி ஆராய்ந்து பார்த்ததுல கண்டுபிடிச்சது உங்க வீட்டுக்கு யாரோ சூனியம் வச்சிருக்காங்க...”, மாந்த்ரீகர் கூற, நான் அப்போவே சொல்லல, என்ற பார்வையை வரதனை நோக்கி வீசினாள் க்ருஹா...
“இப்போ அதுக்கு என்ன பண்ணலாம் சுவாமிஜி...”
“நீங்க எதுவுமே பண்ண வேண்டாம்... எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்...”,பெருமை பீத்தல் களஞ்சியமான க்ருஹா சென்று தங்கள் வீட்டு பீரோவிலிருந்த வெள்ளி பூஜை சாமான்களை அனைத்தையும் பூஜைக்கு எடுத்து வைத்திருந்தாள்...
கோலத்திற்கு நடுவில் செங்கல்களை அடுக்கி, ஹோம குண்டத்தை தயார் செய்த மாந்த்ரீகர்... அதை சுற்றி தான் வாங்கி வந்த மலர்கள், மற்றும் நவ தானியங்களால் அலங்கரித்தார்... பின்னர் க்ருஹாவையும், வரதனையும் கிழக்கு நோக்கி அமர சொன்னவர் ஹோம குண்டத்தில் அக்கினியை ஏற்றி பூஜையை ஆரம்பித்தார்.... கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் விடாது பூஜை... வரதனுக்கு மந்திரங்களை திருப்பி சொல்லியே நாக்குத் தள்ளிவிட்டது... ஒரு வழியாக முதல் பூஜை முடிந்தது... பத்து நிமிட காப் கொடுத்த மாந்த்ரீகர் அடுத்த பூஜையை ஆரம்பித்தார்...
இம்முறை க்ருஹாவும் சேர்ந்து மந்திரம் சொல்ல, வரதனுக்கு இடையில் சற்று மூச்சுவிட நேரம் கிடைத்தது... இப்படியாக கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் பூஜை நடந்தது...
அனைத்தும் முடிந்து மாந்த்ரீகர் ஒவ்வொரு அறைக்கும் சென்று விசேஷ பூஜை செய்து கற்பூரம் காட்டினார்...
“இங்க பாருங்க என்னால முடிஞ்சவரை எல்லாப் பூஜையும் செய்து துஷ்ட சக்திகள் எல்லாத்தையும் விரட்டி விட்டுட்டேன்... நாளை காலைவரை நீங்க இந்த வீட்டை விட்டு போகக்கூடாது... அதே மாதிரி யார் கூடவும் பேசவும் கூடாது.... அப்பறம் இந்த பூஜை பண்ணின இடத்தை காலை வரை சுத்தம் பண்ணாதீங்க.... மூணாவது நாள் இந்த சாமான், எலுமிச்சம் பழம் எல்லாத்தையும் எடுத்துட்டு போய் கடல்ல போட்டுட்டு வந்துடுங்க....”
“ஸ்வாமிஜி எங்க பசங்களை போய் கூட்டிட்டு வரணுமே...”
“நீங்க வெளிய போகக்கூடாதும்மா... இன்னைக்கு ஒரு நாள் அவங்களை வேற யார் வீட்டுக்கானும் அனுப்ப முடியுமான்னு பாருங்க... பூஜை நடக்கும்போது பசங்க இல்லாததால, நாளை காலை வரை அவங்க இங்க வரக்கூடாது....”