2017 போட்டி சிறுகதை 28 - மனைவி ஒரு மந்திரி - மங்கலஷ்மி
This is entry #28 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - மனைவி ஒரு மந்திரி
எழுத்தாளர் - மங்கலஷ்மி
ஜானகி அவள் அம்மா வீடு சென்று இன்றோடு ஐந்து நாட்களாகின்றன. கண்ணன் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்தான். அதற்குமேல் அவனால் அவளை விட்டு இருக்க முடியவில்லை. இந்த ஐந்து நாட்களில் நுறு தடவையாவது இருவரும் கைபேசியிலும் தொலைபேசியிலும் அன்பைப் பறிமாறி கொண்டிருப்பார்கள். கணவன் வீட்டில் பத்து நாட்கள் இருந்தாள் எனில் அம்மா வீட்டில் ஐந்து நாட்கள் இருப்பாள்.
ஒரு வழியாய் ஜானகியை , கண்ணனே நேரில் சென்று அழைத்துவந்துவிட்டான். இப்பொழூதுதான் அவனுக்கு உடலிலும் மனசிலும் ஒரு புதுதெம்பு வந்தமாதிரி இருந்தது. ஆனால் ஜானகிக்கோ போகும்போது இருந்த அந்த ஆர்வமும் துடிப்பும் மாமியார் வீடு வரும்பொழூது இருப்பது இல்லை.
இப்பொழூதும் அவள் முகம் வாட்டமாக இருந்தது. அதைக்கண்டுவிட்ட கண்ணனோ,
“என்ன ஜானு ஒருமாதிரியா இருக்க, உடம்புக்கு ஏதாவது பண்ணுதா” கேட்ட கணவனை,
“இல்லைங்க’’ என்றவாறு அடுத்த வேலையை பார்க்க சென்றாள்.
“ வீட்டீல் எல்லோரும் சௌக்கியமா?’’கேட்ட மாமியார்க்கும் நாத்தனாருக்கும் “நல்லாயிருக்காங்க அத்தை” எனத்தொடங்கியவள், இந்த ஐந்து நாட்களாய் அங்கு நிகழ்ந்தவற்றை இம்மி பிசகாமல் கூறலானாள்.
அவள் கூறும்போது பார்க்கவேண்டுமே! முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி, சந்தோஷம்.இதை தண்ணீர் குடிக்கலாமே என்று அந்த பக்கமாக வந்த கண்ணன் கவனிக்க தவறவில்லை.
இப்படியே நாட்கள் செல்லலாயின.
ஜானகி எப்பொதும்போல் வளைய வந்துகொண்டிருந்தாள்.
கண்ணன் எங்கு அழைத்தாலும் உடனே கிளம்பமாட்டாள்.அவள் தன் அத்தையிடம் ஒருவார்த்தை கேட்டுவிட்டே இவனுக்கு சரிஎன்று பதில் சொல்வாள்.
ஒரு சாம்பார் வைக்கவேண்டும் என்றாலும் என்ன என்ன போட்டுவைக்கிறேன் என்று சின்னபிள்ளைபோல் ஒப்பிப்பாள். எந்த ஒரு வேலை செய்வதாக இருந்தாலும் தன் மாமியாரிடம் ஒருவார்த்தை கூறிவிட்டே செய்வாள்.
என்ன ஜானு “சின்னபிள்ளைதனமா எதற்கெடுத்தாலும் அம்மாவிடம் சொல்லிட்டு செய்யற, இல்லைனா கேட்டுகேட்டு செய்யற” ஒருநாள் கேட்டேவிட்டான் கண்ணன்.
“அது அப்படித்தாங்க” என்றவாறு சிரித்தே மழூப்பினாள் ஜானகி.
அம்மாவிடம் பயப்படுகிறாளா? அல்லது அம்மாவிடம் மரியாதையா? என மனதுக்குள்ளேயே போட்டு அலசலானான்.
ஜானகி அம்மாவீடு சென்றுவந்து பத்து நாட்கள் ஆகவில்லை ”வீட்டில் விஷேசம் வாங்க மாப்பிள்ளை” என மாமனாரே நேரில்வந்து அழைக்க, இவனும் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டுவிட்டு மனைவியுடன் மாமனார் வீடு சென்றான்.
அவள் சென்றதும் அம்மா, தங்கைகள் என எல்லோரும் அவளை சூழ்ந்து கொண்டனர்.
“என்னம்மா ஜானு அப்போதைக்கு இப்ப மெலிந்து இருக்கற…ஒழூங்கா சாப்படறியா இல்லையா?”
“ஆமாம்…ஆமாம்”என தங்கைகள் கூறவும்,
அதெல்லாம் ஒன்றும ;இல்லைம்மா… பத்துநாட்கள் கழித்து பார்க்கறிங்க இல்ல அதனால்தான்” என்றவள் தங்கைகள் பக்கமாக திரும்பி,
“அடிக்கழூதைகளா அம்மாவுக்கு ஒத்து ஊதறிங்களா…உங்களை” எனும்போதே அவர்கள் எழூந்து ஓட, அவர்கள் பின்னால் இவளும் சின்னபிள்ளைபோல் ஓடினாள்.
சின்னபிள்ளையாய் ஓடும் மனைவியை ஆசையுடன் பார்த்துக்கொண்டு இருந்தாலும் கண்ணனின் முகத்தில் சிந்தனைக்கோடுகள் விழலாயின.
என்னதான் தம்பிள்ளைகளுக்கு திருமணம் செய்துகொடுத்தாலும் பெற்றோர் கண்களுக்கு அவர்கள் குழந்தைகளாகவேதான் காட்சியளிப்பர்.
கண்ணனைபோலவே கமலமும் மகள் ஓடுவதை ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்தவள், “பார்த்துடி… பார்த்து…” என குரல் கொடுத்தாள்.
“உனக்கு பிடிக்குமேனு கொண்டைகடலை போட்டு காரக்குழம்பு வைத்திருக்கிறேன், மாப்பிளையை அழைத்துக்கொண்டுபோய் சாப்பிடும்மா என்ற அவளின் அம்மா அவ்விடத்தைவிட்டு சென்றாள்.
அதற்கு அப்புறம் ஜானகிதான் அங்கே எல்லாம்மே. என்ன நினைக்கிறாளோ அதை செய்தாள். என்ன சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறாளோ அதைசெய்து சாப்பிட்டாள். தம்பி, தங்கைகளுடன் சுதந்திரமாக பேசினாள், விளையாடினாள். இதையெல்லாம் சிந்தனை வயப்பட கவனிக்கலானான் கண்ணன்.
“என்னங்க…நாம இப்பவெளியில் போயிட்டு வரலாம் வாங்க”
“அம்மாவிடம் கேட்டுட்டியா” கேட்ட கணவனை பார்த்து விளங்காமல் விழித்தாள்.
“இல்லை உங்க அம்மாவிடம் சொல்லிட்டியானு கேட்டேன்”என்றான்.
“இல்லைங்க… கிளம்பிட்டு போகும்போது சொல்லிட்டு போகலாங்க” என்றவளை குழப்பத்துடன் ஆராய்ந்தான்.