இருவரும் அருகருகே மேடையில்...ஆனால் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொள்ளவில்லை. “ஏதாவது நடந்து இத்திருமணம் நின்றுவிடாதா..?..” என்ற எண்ண ஓட்டங்கள் மட்டும்தான் இருவரிடமும் இருந்தது. ஏற்கனவே வெறுப்புடன் இருந்தவர்களை மேலும் வெறுப்படையச்செய்தனர் போட்டோகிராபர்கள்.
அவர்கள்,திருமணம் முடிந்த உடனேயே சிங்கப்பூர் செல்வதாக இருந்ததால் வரவேற்பு நிகழ்ச்சியை அன்று மாலையே ஏற்பாடு செய்திருந்தனர். மாலை முதல் இரவு 9 மணி வரை அவர்களால் மேடையைவிட்டு நகரக்கூட முடியவில்லை.
மறுநாள் விடிந்தது. திருமண நாள். ஒவ்வொருவரும் பெரிய பெரிய கனவுகளோடு வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய முக்கியமான சம்பவம். ஆனால், ஆகாஷ் – நிர்மலாவிற்கோ அது மிகவும் வேதனை தரும் நிகழ்வாக இருந்தது.இருவரும் இதோ மணமேடையில் அமர்ந்திருக்கிரர்கள். விதி இவர்களை இணைக்கப்போகிறது. விதியின் விளையாட்டிலிருந்து தப்பித்தவர் இவ்வுலகில் எவர் தான் உள்ளார்?...
இன்னும் சிறிது நேரத்தில் ஆகாஷ் நிர்மலாவிற்குத் தாலி அணிவிக்கப் போகிறான். நினைக்கும்போதே இருவரின் மனமும் பதைபதைத்தது. அருகிலிருந்தோர் “கெட்டிமேளம்....கெட்டிமேளம்...” என்று குரல் எழுப்ப இனிதே முடிந்தது திருமணம். “ இன்று முதல் நரக வாழ்வு ஆரம்பம் ..” இருவரும் மனதில் நினைத்துக்கொண்டனர்.
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாதே..
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை..
ஆகாஷ் சென்னைக்கு அவசர அவசரமாகக் கிளம்பி வந்திருந்ததால் திருமணம் முடிந்த மறுநாளே அவன் சிங்கப்பூர் திரும்ப வேண்டியதாக இருந்தது. இப்போது கூடவே இம்சையாக நினைக்கும் அவனது மனைவி நிர்மலாவையும் உடன் அழைத்துச்செல்ல வேண்டும். இது பெற்றோரின் கட்டளை. நினைக்கும்போதே கோபம் கொப்பளித்தது அவனுக்கு.
நிர்மலா ஆகாஷ் வீட்டில் யாரிடமும் ஒட்டாமல் தனி அறையில் தன் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தாள். ஊருக்குப்புறப்படத் தயாராயினர் இருவரும். நேரத்திற்கு டாக்ஸி வர இருவரும் அதில் ஏறி அமர்ந்தனர். நிர்மலா தன் பெற்றோரிடமிருந்து கண்ணீருடன் விடைபெற்றாள்.
இருவரும் கடைசியாகப் பேசிக்கொண்டது அந்தத் துணிக்கடையில் தான். பெண்பார்த்ததிலிருந்து இத்தருணம் வரை இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. நான்கு நாட்களாக நிர்மலா சரியாக உறங்கவில்லை என்பதால் அவளுக்கு உறக்கம் விழிகளைத் தழுவியது.
டாக்ஸி விமான நிலையம் வந்தடைந்தது. நிர்மலா விமானத்தில் செல்வது இதுவே முதல்முறை. “ஐயோ..இந்த சிடுமூஞ்சியோட விமானத்துல பஸ்ட்டைம் போறதுக்குப்பதில் அதுலேர்ந்து கீழே குதிச்சு செந்துடுலாம்...” என்று யோசித்தபடியே அவனுடன் நடந்தாள். விமான நிலையத்தில் வழக்கமாக செய்யப்படும் சோதனைகளை முடித்துக்கொண்டு இருவரும் தங்கள் கேட்டில் வந்து அமர்ந்தனர்.
பிளைட் ஏறும் முன்னர் தேனீர் அருந்துவது ஆகாஷின் வழக்கம். இவளிடமும் வேண்டுமா என்று கேட்க விழைந்தது அவன் மனம்.ஆனால், ஏதோ ஒன்று அவனைத் தடுக்க தான் மட்டும் வாங்கிவந்து அவள் அருகில் அமர்ந்து அதை சுவைக்கத்துவங்கினான்.
இதுவரை அவனை சிடுமூஞ்சி என்று நினைத்தவளின் மனம் தற்போது அவன் சரியான சுயநலவாதி என்றும் நினைத்தாள். இவனுடன் இனி சேர்ந்து இருக்கப்போகும் நாட்களை எண்ணி தன் மனதுக்குள் துக்கித்துக்கொண்டாள்.விமானம் சரியான நேரத்திற்கு வரவே இருவரும் அதில் புறப்பட்டனர்.
ஆகாஷ் தன் மியூசிக்பிளேயரை உயிர்ப்பித்து ஹெட்செட்டை காதில் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டபடியே தன் இருக்கையில் தலை சாய்த்து விழிகள் மூடினான். நிர்மலா ஏதோ புத்தகத்தை எடுத்து அதை புரட்டிக்கொண்டிருந்தாள். ஒருநொடி கூட வாய் மூடாமல் பேசிக்கொண்டிருப்பவளுக்கு அந்த நிசப்தம் வலியை ஏற்படுத்தியது. தான் தன் சுயத்தை இழந்ததாக மிகவும் வருந்தினாள். இவ்வாறு யோசித்தபடியே ஆழ்ந்து உறங்கி அவளையும் அறியாமல் அருகிலிருந்த ஆகாஷின் தோளில் சாய, கோபம் தலைக்கேறியது அவனுக்கு.ஆனால் ஏனோ அவளை அவன் எழுப்பவில்லை. மனதில் அவளை திட்டிவிட்டு மீண்டும் தன் இருக்கையில் சாய்ந்துகொண்டான்.
சிறிது நேரத்திற்குப் பின் கண் விழித்த நிர்மலா தன்னிலை பெற்றவளாய் ஆகாஷின் தோளில் சாய்ந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். படாரென எழுந்து அவனிடம், ”ஐ ஆம் ரியல்லி வெரி சாரி..தெரி...தெரியாமத்தான்....” என்று அவள் இழுக்க ஆகாஷ் “ இட்ஸ் ஓகே..” என்றான். விமானம் சிங்கப்பூர் வந்தடைந்தது. இருவரும் வெளியேறி டாக்ஸியில் பயணித்தனர்.