இத்தனை வருடங்களில் நிறையவே மாற்றம் பெற்றிருந்த பள்ளியை பார்த்து வியந்து போனாள் பார்கவி. “நான் படித்த பள்ளியா இது?” என்று அவளது மனம் ஒரு பக்கம் பயணிக்க, கால்களோ சரியாய் தமிழின் வகுப்பை வந்தடைந்தன.
“காவியா .. அம்மா வந்தாச்சு .. அம்மா வந்தாச்சு.. நான் சொன்னேன்ல ? உன் ட்ராயிங்கை நான் தொலைக்கவே இல்ல.. பாரு அம்மா கொண்டு வந்துட்டாங்க” என்று ஆர்ப்பரித்த தமிழ்ரஞ்சன் ஓடி வந்து பார்கவியை கட்டிக் கொள்ள அனைவரின் பார்வையும் பார்கவியின் மீது மொய்த்தது.
“ தமிழ்.. என்ன பழக்கம் இது ? க்லாஸ்ல டீச்சர் இருக்காங்கல ? அவங்க கிட்ட பெர்மிஷன் கேட்காமல் நீங்க அம்மா கிட்ட ஓடி வரலாமா? டீச்சர் கிட்ட சாரி கேளுங்க!” என்று கண்டிப்பு கலந்த குரலில் பார்கவி சொல்லவும், அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியரின் பார்வையில் மரியாதை கூடியது.ஸ்னேகமான புன்னகையுடன் அவளை நெருங்கி வந்தார் அந்த ஆசிரியர்.
“வணக்கம் டீச்சர்… நான் தமிழ்ரஞ்சனின் அம்மா. இன்னைக்கு அவர் புக்கை மறந்திட்டார்..அதை கொடுக்க வந்தேன்..” என்று பார்கவி விளக்கம் அளிக்கவும்,
“ ஓ.. இட்ஸ் ஓகே மேடம்.. ரஞ்சன் எங்களுடைய அபிமான மாணவன்.. சோ நோ கோபம்”.
“ இஃப் யூ டோண்ட் மைண்ட்.. நான் காவியா ரவீன் கிட்டயும் பேசலாமா ?” என்று பார்கவி கேட்கவும்,
“க்லாஸ் நடந்துட்டு இருக்கு .. கொஞ்சம் சீக்கிரம் அனுப்பி வெச்சிடுங்க!” என்றார் அவர்.
தமிழ்ரஞ்சனை அழைத்துக் கொண்டு வகுப்பு வெளியே பார்கவி நிற்க, ஆசிரியரின் பேச்சைக் கேட்டு காவியாவும் வாசலுக்கு ஓடி வந்து எதிர்பாராத நேரத்தில் பார்கவியைக் கட்டிக் கொண்டாள்.
“ அம்மா.. ரொம்ப தேங்க்ஸ் அம்மா.. அடுத்து ட்ராயிங்க் க்லாஸ் டீச்சர் வருவாங்க.. மத்த பசங்க மறந்துட்டேன்னு பொய் சொல்லுறதுனால நாங்க உண்மை சொன்னாலும் டீச்சர் நம்ப மாட்டாங்க.. அதான் பயந்துட்டேன்.. தமிழ் கூடவும் சண்டை போட்டுட்டேன்!” என்று காவியா விளக்கவும், அவளை வாரி அணைத்துக் கொண்டாள் பார்கவி.
எங்கிருந்து வந்தது இத்தனை பாசமும் பிணைப்பும்? இவள் ரவீனின் மகள் என்பதினாலா? ஒருவேளை காவியா வேறு ரவீனின் மகளாக இருந்தால்? என்று பார்கவியின் உள்மனம் இடக்காய் கேட்கவும்,
“ச்ச ச்ச இந்த துரு துரு கண்ணு.. ஓயாத வாய்ப்பேச்சு.. கண்டிப்பா என் ரவீனோட மகள் இவள்” என்று மனதிற்கு பதில் அளித்தாள் பார்கவி.
“ நல்லா படிக்கணும் காவியா..” என்று பார்கவி சொல்லவும்,
“ கண்டிப்பாம்மா .. மேத்ஸ்ல நான்தான் ஃபர்ஸ்ட்டு “ என்று காவியா சிலாகித்து கொள்ளவும்,
“ அது சரி புலிக்கு பிறந்தது பூனையாகுமா?” என்று மனதிற்குள் சொல்லி கொண்டவள்,
“ ஆனா தமிழ் தான் கஷ்டமா இருக்கு!” என்று காவியா சொல்லவும்
“ உனக்குமா?” என்று வாய்விட்டே கேட்டிருந்தாள் பார்கவி. அவளுக்கு தானே தெரியும், ரவீனுக்கும் தமிழ் என்றால் ஆகாதென்று! தந்தைப் போலவே மகள் என்று பார்கவி நினைக்கும்போதே,
“ தமிழ் கஷ்டமா ? நான் எப்போ உனக்கு கஷ்டம் ஆனேன்?” என்று கேட்டு வைத்தான் தமிழ்ரஞ்சன்.
“ தமிழ், காவியா.. இப்படியே ரொம்ப நேரம் பேச முடியாது இல்லையா? க்லாஸ் நடக்குதுல ? அப்பறம் பேசலாம்… இப்போ டாட்டா சொல்லிக்கலாமா?” என்று கூறி இருவருக்கும் முத்தமிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
இதுவரை அவள் மனதில் சைலண்ட் மோடில் (silent mode) இருந்த நினைவுகள், வைபரேஷன் (vibration mode) மோடுக்கு தாவி இதயத்தையே அதற வைத்தது. நினைவலைகள் பின்னோக்கி பயணிக்க, 2005 –இல் நிகழ்ந்தவற்றை அசைப்போட ஆரம்பித்தாள் பார்கவி.
“ரவீன்- சதிஷ் உங்க ரெண்டு பேரு மேல எல்லா டீச்சர்சும் கம்ப்லைண்ட் பண்ணுறாங்க..!” என்று அவர்களின் வகுப்பு ஆசிரியை திருமதி ரேணுகா அதிருப்தியான குரலில் சொல்ல, அதற்கு சதிஷ் முகம் போன போக்கை பார்த்த ரவீன், பக்கென சிரித்துவிட்டான்.
“ ரவீன்!! நான் சொல்லிட்டே இருக்கேன்.. நீ சிரிக்கிற? நீங்க ரெண்டு பேரும் ஸ்மார்ட் ஸ்டூடண்ட்ஸ்தான்! அதுக்காக இப்படி வம்பு பண்ணுறதை அலோவ் பண்ண முடியாது.. உங்க ரெண்டு பேரையும் ஒரே இடத்தில் உட்கார வைச்சது தப்பா போச்சு!.. இப்போவே இடத்தை மாத்துறேன்!” என்று அந்த ஆசிரியை சொன்னதும் அனைவரின் முகத்திலும் பீதி தெரிந்தது.
அந்த வகுப்பை பொருத்தமட்டிலும் இது அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பகுதியில் அவர்களது வகுப்புதான் முதல் வகுப்பு. அதனால் மாணவர்கள் படிப்பில் கெட்டியாகவும் மற்ற நேரத்தில் சுட்டியாகவும் இருந்தனர். இதனால் அடிக்கடி ரேணுகா ஆசிரியை அவர்கள் அமரும் இடத்தை மாற்றி விடுவார்.
அவரின் பார்வை அனைவரின் மீதும் அலைப்பாய்ந்திட சில மாணவர்கள் இடம் மாறி அமர்வதற்கு தயாராகி கொண்டிருந்தனர். சலசலப்பான அந்த வகுப்பில் தன் பாடபுத்தகத்தில் எதையோ படித்துக் கொண்டிருந்தாள் பார்கவி.