யாரு சொன்னா?? செய்தி உண்மையா?? யாராவது... ஏதாவது தவறா சொல்லியிருப்பாங்க?? கேட்டியா நீ... சரியா கேட்டியா வேணு? என்றேன்.
தனு வோட சித்தப்பாவும் அவர் பையனும் வந்திருக்காங்க... என்று அங்கே ரிசப்ஷனில் நின்றிருந்த அவர்களிடம் அழைத்து சென்றான்.
வேணுவிடம் கேட்ட அனைத்து கேள்விகளையும் அவர்களிடம் கேட்டேன் அவளுடைய பொறுப்பு மேற்பார்வையாளராய்!
தனு நேத்தே செத்து போச்சுமா... எப்படி இறந்தானு எங்களுக்கும் இன்னும் புரியல... தற்கொலைனு தாம்மா... சொல்றாங்க! கொலையா... தற்கொலையானு போலீஸ் விசாரிச்சு தான் சொல்லனும்...பாடிய ரிகவர் செய்து போஸ்ட்மார்ட்டம் செய்ய எடுத்துட்டு போய்டாங்க... அனேகமா இன்னைக்கு தருவாங்க... அதுக்குள்ள நாங்க இங்க ஹச் ஆர் பார்க்கலாம்னு வந்தோம்!
அதற்குள் ஹச் ஆர் வந்திருக்க அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களின் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு நடந்தேன். உடலில் அனைத்தும் செயல் இழந்தது போல் பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்தேன்.
பாழாய் போன பத்து வருட நட்பு! எங்கே போய் முட்டிக்கொள்வது என்று புரியவில்லை! ஆனால் அப்படியே இருக்க முடியாதே மேனேஜர்சை அழைத்து விஷயத்தை கூறி முடித்தேன்.
ஹச் ஆர் விசாரனையில் வந்திருந்த அவள் சித்தாப்பாவும் மகனும் பணத்தை... சால்ரி பேனிவிட்ஸை எதிர்ப்பார்த்தே வந்திருந்தனர் என்பது தெரிந்தது! மகளின் ஈம சடங்கும் இறுதி காரியங்களும் முடியாத நிலையில் அவளால் வரும் பண ஆதாயத்தை எதிர் நோக்குவத்தை எந்த பிறப்பில் சேர்ப்பது என்று புரியவில்லை. தகவல் சொல்ல வந்தால்... தகவலை மட்டும் சொல்லிச்சென்றிருக்கலாம்... பணத்தை பற்றி பேச ஏற்ற தருணம் அதுவல்ல! என்ன மனிதர்கள் இவர்கள் என்றே தோன்றியது! இதில் இந்த சித்தப்பா மகனின் திருமணத்திற்கு இரண்டு பவுன் செயின் அணிவித்து விருந்து வைத்தாள் இந்த பேதை பெண்!! அவளை நினைத்து தலையில் அடித்துக்கொண்டேன்!
தற்கொலையா?? அதுவும் தனுவா?? சத்தியமாய் எதுவும் விளங்கவில்லை... இல்லை இருக்காது... நிச்சய்மாய் இருக்காது... அந்த மரண செய்தியையே பொய் என்று தான் நம்பியிருந்தேன் தனுவின் உயிரற்ற உடலை மறுனாள் காணும் வரை!
அப்போதும் அதே சிரித்த முகத்துடன் நிர்மலமாய் உறங்கிக்கொண்டிருந்தாள். தாயின் முகத்தையும் அம்மமாவின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தாத்தாவிடம் சென்று மனோ பாப்பாக்கு பசிக்குது தாத்தா... அம்மா ஏன் தூங்கறா... அம்மாவ மம்மு தர சொல்லு...' என்று தன் பிஞ்சு மொழியில் அங்கிருந்த என்னை கதறவைத்து கொண்டிருந்தாள் இரண்டரை வயதான மனோரஞ்சனி!
தாய் இறுதி ஊர்வலத்திற்கு தயாராக... தந்தையை அப்போதுதான் ஜெயிலில் அடைத்துவிட்டு வந்திருந்தாள் மனோ! அவளின் ஒற்றை கூற்று தந்தை திவாகரனை கம்பிகளுக்கு பின் தள்ளியிருந்தது! 'அம்மாவ அப்பா அடிச்சாரா... அம்மா அப்படியே விலிந்தட்டா... எலுந்து வரவேயில்ல' என்றது.
உன் பொன்னுக்கு நல்லா பேச கத்து கொடித்திருக்கடீ... இப்போவே என்னமா பேசறா பாரு!' என்று சமீபத்தில் அவளை கணவன் சகிதமாய் கோவிலில் சந்தித்தபோது சொன்னது நினைவு வந்தது. மனோவின் பேச்சு தந்தைக்கு தண்டனை வாங்கி தந்தது.
ஆம்! அது தற்கொலை அல்ல என்று முடிவானது! தனுஜாவிற்கும் திவாகரனுக்கும் ஏதோ வாக்குவாதம் நடக்க... வாய்வார்த்தை முற்றி திவாகரன் தனுவை அடித்துவிட... ஏற்கனவே பலகீனமாகவும் மன உளைச்சலுடனும் இருந்த தனுவிற்கு எக்குதப்பாய் அடிப்பட்டுவிட அப்போத்தே உயிர் பிரிந்தது!
ஓன்பது வருட காதலுக்கு... நான்கு வருட திருமண வாழ்விற்கு கிடைத்த பரிசு இதுதானா??
கல்லூரியில் எனது ஜீனியர் தான் தனுஜா! நான் மூன்றாம் ஆண்டு... இவள் முதல் ஆண்டு மாணவி! தொடக்கத்தில் சூப்பர் சீனியர் என்று பயபக்தியோடு இருந்த உறவு... மெல்ல மெல்ல முன்னேறி... ஒருமையில் அழைத்து... சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு வந்தது. அவளின் ஒன்றுவிட்ட அத்தை மகனான திவாகரனுடன் ஏற்பட்ட காதல் முதல் கல்யாணம் வரை அனைத்தும் எனக்கும் தெரியும். கல்லூரி நட்பானது அலுவலகத்திலும் தொடர்ந்திருந்தது இனிமையாய்!
திவாகரனை மட்டுமே நம்பி கைப்பிடித்தவளை வாழ்க்கையின் தொடக்கதிலேயே தொலைத்திருந்தான் அவன்! மாமியார் மாமனார்... மூத்தார்... அவரின் மனைவியினால் ஏற்படும் சச்சரவுகளை பகிர்ந்து கொண்டவள் எந்த நிலையிலும் தன் கணவரை தரம் தாழ்த்தியோ..இழித்தோ பேசியதில்லை...அவன் மதிப்பை இழிவாய் காட்டியதில்லை! 'அவங்க வீட்ல இவ்வளவு டார்சர் பண்றாங்க... ஆனாலும் நான் என் திவாகாக தான் பொறுத்து போறேன்! அவர் அன்பு... காதல் முன்னாடி என்னோட வலி எல்லாம் தோற்றுபோயிடோம்... அவங்க யாரு திவாவோட குடும்பம் தானே... அப்ப என்னோடதும் தானே!' என்று அவள் பேசியது காதில் இன்றும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது!