சிறுகதை - ஜனனம் - ஐ. கிருத்திகா
நாராயணன் அன்று காலையிலிருந்தே பரபரப்பாய் இருந்தார். கட்டளைகள் வாயு வேக, மனோ வேகத்தில் பறந்தன.
" காத்தவராயா....தோப்புலேருந்து இளநீ பறிச்சிட்டு வரச் சொல்லியிருந்தேனே....பறிச்சிட்டு வந்தாச்சா?"
" ஆச்சுங்க...நம்ம செல்லக்கிளியிலேருந்து தாங்க பறிச்சேன். இளநீ சும்மா கல்கண்டு கணக்கா இனிக்கும்ல. பாப்பா குடிச்சு பாத்துட்டு மூக்கு மேல வெரலை வைக்கும் பாருங்க..."
" சரி, சரி...முன்னாடி ரூம்ல லைட் ஒழுங்கா எரியுதான்னு பாரு. பாப்பாவுக்கு இருட்டுன்னா பயம்."
" இதோ போறேங்க...."
அவன் நகர, ரெங்கசாமி வியர்க்க, விறுவிறுக்க வந்தார்.
" என்ன ரெங்கசாமி இது, காலையில வரச்சொன்னதுக்கு இவ்ளோ நேரம் ஆக்கிட்டீரே....வீட்டு வாசல்ல தோரணம் கட்டணும், வரவேற்பு பலமா இருக்கணும் அப்படி, இப்படின்னீரே...."
" மறக்கலீங்களே....அதெல்லாம் ஒரு வினாடியில் செஞ்சுடுவேன். வூட்டுல செண்டுமல்லிப்பூ பூத்து குலுங்குது. எப்பவும் பாக்கறவன்தான். ஆனா இன்னிக்கு பாத்ததும் பாப்பா ஞாபகம் வந்துடுச்சு. பாப்பாவுக்கு செண்டுமல்லின்னா உசிரு. எங்கேருந்தோ ரெண்டு, மூணு செடி வாங்கிட்டு வந்து வச்சு அது பொழைக்காம போனப்ப பாப்பா மொகம் வாடிப்போனது
இன்னிக்கும் நெஞ்சுக்குள்ள பசுமரத்தாணி போல பதிஞ்சு கெடக்குங்க. அதான் அத்தனை பூவையும் வாரிக்கிட்டு வந்துட்டேன்."
ரெங்கசாமி துண்டு மூட்டையை விரித்து காண்பித்தார்.
" இன்னிக்கு சாமி படத்துக்கெல்லாம் இதைத்தான் சாத்தணும். வூடு முழுக்க இந்த வாசம் தான் நெறஞ்சிருக்கணும். பாப்பா உள்ள நொழையறப்ப இந்த வாசம் அதை பழைய நெனைவுகளுக்கு கொண்டு போயிரும் பாருங்க...." என்றவர் உற்சாகத்துடன் பின்கட்டுக்கு விரைந்தார். நாராயணன் நெற்றியில் பொடித்திருந்த வியர்வையை துடைத்தபடி ஈஸி சேரில் அமர்ந்தார். இரவு முழுக்க உறங்காமல் சேவல் கூவியவுடன் எழுந்து பம்பரமாய் சுழன்றது அசதியாய் இருந்தது.
" ஐயா... காபி..."
செருவாமணி பவ்யமாய் காபியை நீட்ட வாங்கிகொண்டவர் சட்டென ஞாபகம் வந்தது போல் நிமிர்ந்தார்.
" காப்பி கொட்டையை இடிச்சு வச்சிட்டியா?"
" வச்சிட்டேங்க..."
" அதை பத்திரமா காத்து போவாத சம்படத்துல கொட்டிவையி..ஏன் சொல்றேன்னா பாப்பாவுக்கு காப்பின்னா உசிரு. ஒரு நாளைக்கு ஏழெட்டு தடவை குடிச்சிடும். நான் அங்கே போயிருந்தப்போ ஒரு காப்பி கொடுத்துச்சு...ஏதோ நெஸ்கபேயாம்..நல்லாதான் இருந்துச்சு. நம்ம ஊரு தூளு சுமாரா இருக்கும்னுட்டு மலையிலேருந்து காபி கொட்டை வரவழைச்சேன். "
அவர் பெருமையாக சொல்ல, செருவாமணி அதை ஆமோதிப்பது போல் தலையசைத்து விட்டு நகர்ந்தாள்.
நாராயணனுக்கு ஒரே மகள் சாருலதா. செல்லப்பெண் என்பதால் அவள் விருப்பத்திற்கேற்ப காலேஜில் ஜர்னலிசம் படிக்க வைத்தார். உயர்கல்விக்கு அவள் லண்டன் போகவேண்டுமென்று அடம் பிடித்த போது அவரால் மறுக்க முடியவில்லை.
படிப்பை முடித்தவளுக்கு அங்கேயே ஒரு வேலை கிடைத்த போதுதான் பிரச்சனை ஆரம்பித்தது. மகளுக்கு திருமணம் செய்துவிட்டால் ஒரு கவலை தீர்ந்து விடும் என்று நாராயணன் நினைக்க, வேலைதான் முக்கியம் என்று சாருலதா ஒற்றைக்காலில் நின்றாள். கடைசியில் அவளது பிடிவாதமே வென்றது. மகளுக்கு கல்யாண ஆசை இல்லையென்று தெரிந்தபோது நாராயணன் நொறுங்கிப்போனார்.
" எனக்கு கல்யாணம் வேண்டாம்ப்பா. நான் பிரீபேர்டா இருக்கதான் ஆசைப்படறேன்" என்றவள்,
"நீங்க ஒருபக்கம், நான் ஒருபக்கம் ...எதுக்கிந்த அவஸ்தை. பேசாம லண்டன் வந்துடுங்கப்பா..." என்று வற்புறுத்தியபோது நாராயணன் மறுத்துவிட்டார். இடையில் இருமுறை போய் பார்த்து விட்டு வந்ததோடு சரி.
ஈஸிசேரில் அமர்ந்தபடியே கண்ணயர்ந்த நாராயணன், ரெங்கசாமியின் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தார்.
" ஒக்காந்த இடத்திலேயே தூங்கிட்டீங்களே. ஒடம்பு முடியலேன்னா இப்படித்தாங்க. அதுக்குதான் பேசாம இருங்கன்னு தலை, தலையா அடிச்சிக்கறேன். சொன்னதை செய்யத்தான் நாங்க இவ்ளோ பேர் இருக்கோம்ல. அப்புறமெதுக்கு நீங்களும் மல்லுக்கட்டிக்கிட்டு நிக்கறீங்க. நீங்க இப்படி சோர்வா இருக்கறதை பாப்பா பாத்தா ரொம்ப வருத்தப்படும். அப்பாவை வேலை செய்ய விட்டுட்டு நீங்க என்ன பண்றீங்கன்னு எங்ககிட்ட சத்தம் போடும்."