மகிழின் பதிலைப் பொறுத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சுடர் ஏற்கனவே முடிவெடுத்திருந்ததால், அவன் பதிலைக் கேட்டதும் அலைபேசியை அணைத்தவள், ஒரு பேப்பர், பேனாவை எடுத்து ஏதோ எழுதினாள்.. அடுத்து திரும்ப அலைபேசியில் எழிலரசிக்கு அழைப்பு விடுத்தாள். உடனே அழைப்பு ஏற்கப்பட்டு அவள் இரண்டாவது தம்பி புவியரசுவின் குரல் கேட்டது.. அவளும் அதைத்தான் எதித்பார்த்தாள்.. ஏனென்றால் எழிலின் அலைபேசி, புவி வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவனிடம் தான் இருக்கும்.. படிக்கும் நேரம் போக, மீதி நேரங்களில் அலைபேசியில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பான்.. அதனால் எழிலிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பான், இப்போதும் எழிலுக்கு வீட்டில் ஏதாவது வேலை இருக்க, புவி அழைப்பை ஏற்றால், நன்றாக இருக்கும் என்று சுடர் நினைக்க, அதுபோல் அவனே அழைப்பை ஏற்றிருந்தான்.. அவனை யாருக்கும் தெரியாமல், அவளிருந்த இடத்திற்கு வரச் சொன்னாள்.
சில நிமிடங்களில் அவன், அவள் நின்றிருந்த இடத்திற்கு வந்தான்.. “அக்கா.. இங்க ஏன் இருக்க.. வீட்டுக்கு வரலாம்ல்ல..” என்றவன், பிறகு தான் அக்கா வீட்டிற்குள் வந்தால், அனைவரும் கோபப்படுவார்கள் என்று புரிந்துக் கொண்டான்..
“இருக்கட்டும் புவி.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல தான் கூப்பிட்டேன்.. இந்த லெட்டரை அம்மாக்கிட்ட கொடுத்திடு..” என்று கொடுத்தவள், அவனது முன் மண்டியிட்டு, அவனது கைகளை பிடித்துக் கொண்டவள், “புவி நீ நல்லா படிக்கனும்.. அப்பா, அம்மாக்கு டென்ஷன் கொடுக்கக் கூடாது.. அண்ணாக் கூட சண்டை போடக் கூடாது.. எல்லோரிடமும் நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கனும்.. சரியா?” என்றுக் கேட்க, அவளை புரியாத பார்வை பார்த்தவன்,
“எதுக்குக்கா இப்போ இதெல்லாம் சொல்ற? இது என்ன லெட்டர்?” என்று கேட்டான்.
“புவி.. நான் திரும்ப லண்டனுக்கே போகப் போறேன்.. அதுதான் எல்லோருக்கும் நல்லது.. அதை தான் இந்த லெட்டர்ல எழுதி இருக்கேன்..”
“அக்கா.. நீ லண்டன்க்கு போகாத க்கா.. அம்மா ஏதோ கோபத்துல சொல்லிட்டாங்க.. அம்மாக்கிட்ட சொல்லி உனக்கு சாரி சொல்ல சொல்றேன்.. அப்பாவை உன்கூட பேச சொல்றேன்.. நீ இங்கேயே இரு க்கா.. உன்னை இங்க வர வேண்டான்னு சொன்னா பரவாயில்ல க்கா.. நீ வீட்லேயே இருக்கா.. நானும் உன்கூட வீட்லேயே இருக்கேன்.. நீ லண்டன்னு போக வேண்டாம்.. ப்ளீஸ் க்கா..”
“புவி.. இங்கப்பாரு சித்தி சொன்னதுக்காக நான் போகல.. இங்க யாரும் என்னை வர வேணான்னு சொல்ல.. வந்தாலும் ஏன் வந்தன்னு கேட்க மாட்டாங்க.. எல்லோருக்கும் என் மேல கோபம் இருக்கு.. அதுக்காக நான் இங்க இருக்கக் கூடாதுன்னு யாரும் நினைக்க மாட்டாங்க.. நானா தான் திரும்ப லண்டனுக்கு போக போறேன்.. உங்கக் கூட கொஞ்ச நாள் இருக்கனும்னு நினைச்சு தான் நான் இங்க வந்தேன்.. நான் அங்கேயே இருந்தவ இல்லையா? எனக்கு அங்க தான் செட்டாகும்.. அதான் அங்கேயே போய்டலாம்னு முடிவு செஞ்சேன்..”
“அப்போ இனி நீ இங்க வர மாட்டியா க்கா?” புவி கேட்டதற்கு,
“ஆமாம் புவி.. இனி நான் வரவே மாட்டேன்.. நான் இங்க வர முடியாத தூரத்துக்கு போகப் போறேன்” என்று விரக்தியாக சிரித்தாள். அதை அவன் புரிந்துக் கொள்ளாதவனாக,
“அக்கா.. நீ இங்க வரலன்னா என்ன? நான் லண்டன்க்கு வருவேன்..” என்றதும் அவள் ஆச்சர்யமாய் பார்க்க,
“நான் ஸ்கூல் முடிச்சதும், மேலப் படிக்க, லண்டனுக்கு வருவேன்.. உன்கூட தான் இருப்பேன்.. அப்போ நான் நல்லா ட்ராயிங் கூட வரைய கத்துக்குவேன்..” என்றதும், அவன் நெற்றியில் முத்தமிட்டவள், அவனது அன்பில் நெகிழ்ந்துப் போனாள். கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டவள்,
“போகும்போது, உன் ஒருத்தனோட அன்பையாவது நான் சம்பாதிச்சிருக்கேனே அதுபோதும் புவி.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. சரி நீ வீட்டுக்குள்ள போ.. யாராச்சும் உன்னை தேடப் போறாங்க..” என்று அவள் சொன்னதும், அவனும் அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தான். அவன் வீட்டு வாசலை நெருங்கிய போது, அப்போதுதான் புகழேந்தி தன் பைக்கை வாசலில் வந்து நிறுத்தினார். நிச்சயதார்த்த நிகழ்விற்கான சாப்பாட்டை ஹோட்டலில் வாங்க சென்றவர், அவர் பின்னோடு வந்த டெம்போவிற்கு வழிக்காட்டியப்படி வாசலுக்கு வந்தவர், அங்கு புவியை பார்த்தார்..
“புவி.. என்ன இங்கு நின்னுக்கிட்டு இருக்க?” அவனிடம் அவர் விசாரிக்க, அவனோ சுடரொளியை திரும்பி பார்த்தான்.. அவனையடுத்து புகழும் அங்கு பார்ப்பதற்கு முன், அவனிடம் சொல்லாதே என்று கை அசைத்தவள், அவர் பார்ப்பதற்கு முன் ஒளிந்துக் கொண்டாள். “சாக்லேட் வாங்கப் போனேன் மாமா..” என்று அவன் சமாளித்துவிட்டு உள்ளேச் சென்றான். புகழேந்தியும் டெம்போவில் இருந்த உணவுகளை இறக்கியவர்களை கண்காணித்தப்படி இருக்க, திரும்ப ஒருமுறை அவ்வில்லத்தை ஏக்கத்தோடு பார்த்தவள், பின் தனக்காக காத்திருந்த ஆட்டோவில் ஏறி விமான நிலையத்திற்குச் சென்றாள்.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}