தொடர்கதை - காதலான நேசமோ - 02 - தேவி
ஷ்யாம் மித்ராவிடம் பேசி முடித்த உடனே, தன் காலை வேலைகளை முடித்துக் கொண்டு , டைனிங் டேபிள் வர, வீட்டில் எல்லோருமே சரியாக அந்த நேரத்தில் வந்து அமர்ந்தனர்.
ராம் இப்போதும் சுயகட்டுப்பாட்டுடன் தான் இருக்கிறான். இடையில் மைதிலியோடான பிரிவின் பின் , அவளிடம் மட்டுமே அவன் தன் கட்டுப்பாடுகளை தளர்த்தி இருக்கிறான். மற்றபடி மற்றவர்களுக்கு அதிலும் சிறியவர்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகி விடக் கூடாது என்பதில் அவனின் கவனம் இன்னும் அதிகம் தான் இருந்தது.
அவ்வப்போது தன் மகள் சுமித்ராவிற்காக இளகினாலும், வேறு சில விஷயங்களில் அவளை தன் கட்டுபாட்டுக்குள் தான் வைத்து இருந்தான். அதனால் தான் இளைய தலைமுறை அவனுக்கு வைத்த பெயர் ரூல்ஸ் ராமனுஜம்..
காலையில் எல்லோரும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பது ராம் போட்ட ரூல்ஸ்.. ஷ்யாம் அதை பிரேக் தி ரூல்ஸ்ன்னு ஆக்க எத்தனையோ முயற்சி செய்தான்.. ஹ்ம்ம்.. ஒன்னும் ராமிடம் நடக்கவில்லை. ஆனால் ஷ்யாமிற்கே அந்த நேரத்தின் பலன் தெரிய ஆரம்பித்த பின் அதை தவிர்க்க முயற்சி செய்வதில்லை.
டைனிங் ஹால் அவன் போகும்போதே அனைவரும் அமர்ந்து இருக்க சுமியின் மண்டையில் தட்டியபடி
“ஹேய்.. என்னடி அதுக்குள்ள சாப்பிட உக்காந்துட்ட ... தண்ணியிலே முகத்த காண்பிச்சுட்டு ஓடி வந்துட்டியா?” என்று சுமியின் பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்தான்.
“ஆமாடா தடியா.. நான் கொஞ்சம் லேட்டா வந்தாலும் என் பங்கு பூரியையும் சேர்த்து மொக்கிடுவ.. அப்புறம் எனக்கு அம்மா வெறும் இட்லிய போட்டு அனுப்பிடுவாங்க.. அதான் பந்திக்கு முந்திகிட்டேன்..”
“அடியேய்.. நீ டாக்டர்க்கு படிக்கிற.. நியாபகம் இருக்கா...ஆயில் புட் சாப்பிடக் கூடாதுன்னு தானே லெக்சர் எடுக்கணும். .அதை விட்டுட்டு.. பந்திக்கு முந்துன்னு கொட்டிகிட்டு இருக்க..”
“அட்வைஸ் எல்லாம் அடுத்தவங்களுக்கு தான்.. காலையில் நல்லா சாப்பிட்டு போனாதான்.. கிளாஸ் கவனிக்க முடியும்.. இல்லாட்டா கண்ணு மங்கலாகி எலும்பு கூடு எல்லாம் என்னை நோக்கி வர மாதிரி ஆடிட்டு இருக்கு.. இது தேவையா?”
“நீ அரை தூக்கதுலேயே காலேஜ் போனா அப்படிதான்.. இருக்கும்.. சென்ட் அடிக்கும் முன்னாடி கொஞ்சம் முகத்த கழுவிட்டாவது போ”
“சீ.. போ..” என்றபடி சுமித்ரா பூரியில் கவனமாக,
இருவரின் வம்பையும் கேட்டுக் கொண்டே, மற்றவர்கள் சாப்பிட்டுக் கொண்டனர்.
தாத்தாவும் பாட்டியும் ஊருக்கு போவதை பற்றி பேசிக் கொண்டு இருக்க, இடையில் கேள்வி கேட்டுக் கொண்டு அவர்கள் பேசியதையே மறக்கடிதுக் கொண்டு இருந்தார்கள் சுமியும், ஷ்யாமும்..
அவர்கள் மீண்டும் ஆரம்பிக்க, இப்போதும் அவர்கள் இருவரும் அடுத்த சண்டைக்கு தயாராக, ராம்
“சுமி, ஷ்யாம்.. கொஞ்சம் இருங்க.. தாத்தா ஏதோ பேச வராங்க.. உங்க சண்டையில் அவங்க பேச முடியல பாருங்க” என்று கொஞ்சம் கடினமாக கேட்க,
கௌசல்யாவோ “ஏண்டா.. ராம்.. இப்போ அவங்களை திட்டறே.. ? ஏதோ பசங்க பேசி சிரிச்சிகிட்டு இருக்காங்க.. உனக்கு என்ன?”
“ஹ்ம்ம் .. உங்களுக்கு சப்போர்ட் பண்ணினேனே .. எனக்கு வேணும்” என்றபடி அவர்களை விட்டுவிட்டு மைதிலியிடம் பேச ஆரம்பித்தான்.
இப்போது ஷ்யாம் “ஹேய்.. ஓல்ட் மேன்.. என்ன விஷயம்.. இப்போ ஊருக்கு போறீங்க?”
“இந்த வருஷம் அந்த பக்கம் மழை கம்மியா இருக்கு.. சோ எந்தளவுக்கு விவசாயம் நடந்து இருக்குன்னு தெரியல.. இப்போ போனா தண்ணிக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு, வேற ஏதாவது வேணுமான்னு பார்த்துட்டு வந்தா, வழக்கம் போல் அறுவடை சமயம் போயிட்டு வரலாம்.”
“ஓகே.. தாத்தா.. செகண்ட் ஏசிலே புக் பண்றேன்.. ரெண்டு பேரும் போயிட்டு வாங்க.. அங்கே நம்ம வேலன வீட்டை சுத்தமா வச்சிருக்க சொல்றேன்.. “ என
“சரிபா “ என்றார்.
எல்லோரும் சாப்பிட்டு விட்டு , வெளியில் கிளம்ப தயாராக வர,
ராம் “ஷ்யாம்.. ஆபீஸ் தானே.. ஒரே காரில் போயிடலாமா?”
“இல்லைப்பா.. மித்ரா கூப்பிட்டா... அவளை காலேஜ்ஜில் டிராப் பண்ணிட்டு வரேன்” என
“ஓகே “ என்றபடி ராம் கிளம்பினான்.
சுமித்ரா ஏற்கனவே டிரைவரோடு காலேஜ் சென்று இருக்க, மைதிலியும் அலுவலகம் கிளம்ப தயாராகி வந்தவள் ஷ்யாமின் சொல் கேட்டு,
“என்னாச்சு ஷ்யாம்.. ? எதுவும் பிரச்சினையா?”
“அப்படி ஒன்னும் தெரியலம்மா.. சாதரணமாதான் பேசினாள்” என்றான்.
“அப்போ சரி.. “ என்றபடி டிரைவருக்காக காத்து இருந்தாள். சுமி பிறந்த பின், அவளின் ஐந்து வயது வரை, வீட்டில் இருந்த மைதிலி, அவளும் பள்ளிக்கு சென்ற பின் போரடிக்க ஆரம்பிக்க, ராமிடம் என்ன செய்யலாம் என்று வினவினாள்.