(Reading time: 15 - 29 minutes)

தேவி உங்கக் கூட வரலையா” என்று விபாகரன் கேட்டதும், புவனா ரூபினியை பார்த்தார்.

காலையில் கிளம்பும் போது தேவி வர மாட்டேன் என்று சொல்லும் போதே அவருக்கு ரூபினி மீது தான் சந்தேகம் வந்தது. இருந்தாலும் எவ்வளவோ எடுத்து சொல்லி அவளை அழைத்து வரத்தான் பார்த்தார். அவளும் அஜயை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால் அவள் எதற்குமே அசராமல் வரவே முடியாது என்று மறுத்து விட்டாள்.  ஒரு அம்மா என்ற முறையில் தன் பேச்சை விட, ரூபினியின் சொல்லுக்கு அவள் மதிப்பு கொடுத்தது, புவனாவிற்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தாலும், தேவிக்கு திருமணம் முடிந்து செல்லும் வரை, ரூபினியும் தேவியும் ஒரே வீட்டில் இருக்க வேண்டுமே, அவள் பேச்சை மீறி ஒருவேளை தேவி இங்கே வந்தால், அதனால் ரூபினியின் கோபத்திற்கு ஆளாக வேண்டும், அதனால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள்  வரும் என்பதால், புவனா அதோடு அமைதியாகிவிட்டார்.

தன் அன்னை ரூபினியை பார்த்த பார்வையிலேயே தேவி இங்கு வராததற்கு அவள் தான் காரணமாக இருக்க வேண்டும் என்பது பாலாவிற்கு புரிந்தது. காலையில் தேவி மறுத்த போதே, அந்த சந்தேகம் இருந்தாலும், இப்போது அது உறுதியாகிற்று, இருந்தாலும் ரூபினியின் இந்த செயலை வளர விடக் கூடாது என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டவன், விபாவை பார்த்து,

“தேவிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை விபா, அதான் அவ இங்க வரல..” என்று ஒரு பொய்யான காரணத்தை கூறினான்.

அதன்பின் அர்ச்சனா வரவும் பேச்சுக்கள் திசை மாறியது, அர்ச்சனா விரும்பியது போல் மதுரிமாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டாள். இப்போது அர்ச்சனா விபாவின் தங்கை என்பதால், அவளது ஆர்ப்பாட்டமான அனுகுமுறையும் மதுரிமாவிற்கு பிடித்து தான் இருந்தது. அர்ச்சனாவுடன் நட்பு ரீதியாக பேசினாள். மதுரிமாவுடன் மட்டுமல்ல, அர்ச்சனாவும் ரூபினியும் கூட இந்த கொஞ்ச நேரத்தில் நல்ல தோழிகளாக மாறியிருந்தனர்.

பின் மதிய உணவு சாப்பிட்டதும் நால்வரும் கிளம்ப தயாரான போது, “அப்புறம் விபா நம்ம ப்ராஜக்ட்டை ஆரம்பிக்கிறத்துக்கு முன்ன, ஒரு பெரிய பார்ட்டி வைக்கணும்னு நானும் அஜயும் நேத்து பேசிக்கிட்டு இருந்தோம்.. அஜய் உங்கிட்ட சொன்னானா?” என்று பாலா விபாகரனை பார்த்து கேட்க,

“எதுக்குடா இப்போ இதெல்லாம்..” என்று அவன் திருப்பி கேட்டான்.

“இது பெரிய அளவு ப்ராஜக்ட் டா.. அதை நல்ல பெரிய பார்ட்டியா வச்சு செலப்ரேஷனோட ஆரம்பிக்கணும், பார்ட்டி என்னோட வீட்ல வைக்கலாம்னு தான் ப்ளான் செஞ்சுருக்கேன்.. இதோட ஏற்பாடெல்லாம் நானும் அஜயும் பார்த்துகிறோம், நீ பார்ட்டி அன்னைக்கு வந்தா மட்டும் போதும்..” என்று கூறவும் விபாவால் மறுக்க முடியவில்லை. பின்  நால்வரும் விபா குடும்பத்தினரிடம் விடைப்பெற்று சென்றனர்.

பாலா குடும்பத்தினர் சென்றதும், அஜய் அவன் வீட்டுக்கு சென்றுவிட்டான். விபாகரனும் வேலை விஷயமாக வெளியில் சென்று விட, வீட்டில் அர்ச்சனாவும் மஞ்சுளாவும் மட்டும் இருந்தனர்.

தனது அறையில் அம்ர்ந்திருந்த மஞ்சுளாவை தேடி அர்ச்சனா வரவும், “அச்சு மாப்பிள்ளைக்கிட்ட பேசினியா? பேசாம அவரும் நம்மக்கூட சென்னைக்கு வந்திருக்கலாம், மாப்பிள்ளையோட அம்மா என்ன நினைப்பாங்க, அவங்களும் அஜயும் இங்க இருக்காங்க.. நீ இங்க வந்திருக்கிறது எப்படியோ அஜய் மூலமா அவங்களுக்கு தெரிய வந்திருக்கும், நம்ம பையன் நம்மல பார்க்க வந்தானா பாருன்னு நினைக்க மாட்டாங்களா..” என்று கேட்க,

“நான் அவரை கூப்பிட்டு பார்த்தேன் ம்மா.. இப்போ கொஞ்சம் நிறைய வேலை இருக்கு, எப்படியோ புது ப்ராஜக்ட் சம்பந்தமா விபு கூட பேச சென்னைக்கு வர வேண்டியிருக்கும், ஆனா இப்போ இல்ல, அப்புறம் வரேன்னு சொன்னாரு.. எப்படியோ பார்ட்டி அப்போ வருவார்னு நினைக்கிறேன்.. அவங்க அம்மாக்கிட்டேயும் அவரே பேசிப்பாரு..” என்று பதில் கூறினாள்.

“சரி மாப்பிள்ளை வர வரைக்கும் காத்திருக்காம நீ ஒரு முறை உன்னோட மாமியாரை பார்த்துட்டு வந்துடு சரியா..” என்று கேட்க,

“அதெல்லாம் பார்த்துக்கலாம்மா.. இப்போ நான் பேச வந்தது வேற விஷயம், அம்மா  மதுரிமாவை பத்தி நீ என்ன நினைக்கிற, விபு அண்ணாக்கும் மதுரிமாக்கும் நல்லா பொருத்தமா இருக்கும் இல்லம்மா..” என்றதும்,

“என்ன அச்சு சொல்ற?” என்று அதிர்ச்சியாக கேட்டார்.

“என்னவோ தெரியல மதுரிமாவை பார்த்ததும் எனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்துச்சு,  அதுமட்டுமில்ல மதுரிமா அண்ணனை வச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருந்தா, கூடவே பாலா அண்ணா அம்மாவும் நம்ம அண்ணனையே பார்த்துக்கிட்டு இருந்தாங்க.. இதெல்லாம் வச்சு பார்த்தா என் மனசுல தோனிய விஷயம் தான் அவங்களுக்கும் தோனியிருக்கும்னு நினைக்கிறேன், நீ என்னம்மா சொல்ற?” என்று கேட்க,

“எனக்கென்னமோ இது சரியா படல, ஏற்கனவே ஒரு சினிமாக்காரனால என்னோட பையன் வாழ்க்கை நாசமானது பத்தாதா?” என்றார் அவர்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.