“எதுக்காக அறிவு வீட்ல இப்படி ஒரு முடிவெடுத்தாங்க.. அமுதனை ஏன் அருள்க்காக முடிவு செஞ்சாங்க.. நான் நேத்து அத்தைக்கிட்ட பேசினப்போ கூட அவங்க அருள் கல்யாணத்துல அவசரப்படமாட்டேன்னு சொன்னாங்களே..” என்று குழப்பிக் கொண்டவன்,
இத்தனை நாள் அருள்மொழியிடம் பேச முடியாமல் குற்ற உணர்வில் தவித்தவன், இப்போது அவனே அவளுக்கு அழைத்து,
“எதுக்கு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட அருள்.. அமுதன் பேசினதெல்லாம் மறந்து போயிட்டியா? அவங்க அம்மா வந்து கேட்டாங்கன்னு நடந்ததெல்லாம் மறந்துட்டியா? என்ன?” என்றுக் கேட்க,
“என்ன செய்ய முடியும் மகி.. நான் பொண்ணா பிறந்துட்டேன்.. நாலு விஷயங்களையும் நான் யோசிச்சு பார்த்து தான் முடிவு செய்யணும்.. ஒருப்பக்கம் அம்மாக்காக பார்க்க வேண்டியிருக்கு, இன்னொரு பக்கம் ரெண்டு முறை தான் பார்த்திருக்கோம், ஆனா என்மேல அன்புக் காட்டும் ஆனந்தி ஆன்ட்டிக்காக பார்க்க வேண்டியிருக்கு..
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
என்னோட அம்மாவோட அதிகமா என்மேல அன்பு வச்சிருக்க என்னோட மாமாவும் அத்தையும் எனக்காக அவங்க பிள்ளையை பிரிஞ்சிருக்காங்க.. அவங்க மனசையும் நான் புரிஞ்சிக்கணும் இல்ல.. இதில் எழில் சித்தியும் கதிர் சித்தப்பாவும் சங்கடத்தில் இருக்காங்க.. இப்படி எல்லோரையும் பத்தி நான் யோசிச்சு பார்க்காம, உன்னை போல எடுத்தோம் கவுத்தோம்னு ஏர்போர்ட்ல தாலி கட்டிட்டு வந்தீயே அப்படி என்னையும் சுயநலமா யோசிக்க சொல்றீயா?” என்று கேட்டாள்.
அலைபேசியை இருவரும் கேட்கும்படி அமைத்து மகி அருளிடம் பேசிக் கொண்டிருந்ததால், அவள் பேசியதை அறிவும் கேட்டான்.
“அருள் நடந்தது நடந்து போச்சு.. மகி செஞ்சது தப்பு தான், அதுக்காக அவனை கஷ்டப்படுத்துறது போல பேசணுமா? இப்போ இப்படி நீ பேசறது அவனோட மனசை கஷ்டப்படுத்தாதா? இப்படி ஒரு கல்யாணம் நடக்க அவன் தான் காரணம்னு நினைக்க மாட்டானா? அவனை கஷ்டப்படுத்தி பார்க்கிறது தான் உனக்கு சந்தோஷமா?” என்று கோபமாக கேட்டான்.
“நான் மகியை கஷ்டப்படுத்தனும்னு மட்டும் அப்படி பேசல.. அதுதான் உண்மையும் கூட, நிறைய சங்கடங்கள் நடந்து முடிஞ்சிடுச்சு.. இப்போ அதெல்லாம் சரியாகணும்னா நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகணும்..
அதுக்காக யாரோட கட்டாயத்துக்காகவும் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கல.. ஆரம்பத்தில் மேல படிக்கணும்னு நினைச்ச நான் அம்மா சொன்னதுக்காக தான் இப்போ கல்யாணம் செஞ்சுக்க சம்மதம் சொன்னேன்.. ஆனா மனசுக்குள்ள ஒரு வருத்தம் இருந்துக்கிட்டே இருந்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
ஆனா அடுத்து அமுதனை தான் நான் கல்யாணம் செய்துக்கணும்னு அம்மா சொன்னப்போ முதலில் இருந்த மனவருத்தம் எனக்கில்லை. யாரோ ஒருத்தரை கல்யாணம் செய்துக்கிறதுக்கு அமுதன் பரவாயில்லைன்னு முடிவெடுத்தேன்.. ஆனா நான் நினைச்சது போல் அமுதனும் நினைக்கணும்னு அவசியமில்ல இல்லையா? அதனால அப்போ அவங்க மறுப்பு என்னை பெருசா பாதிக்கல.. இப்போ அவங்க அம்மாக்காக தானே அவங்களும் ஒத்துக்கிட்டாங்க.. இப்போதும் மாப்பிள்ளை அமுதன்னு சொல்றப்போ என்னால வேண்டாம்னு சொல்ல முடியல..” என்றாள்.
அவள் என்ன சொல்ல வருகிறாள்? அவளுக்கு அமுதனை பிடித்திருக்கிறது என்கிறாளா? இல்லை யாரோ ஒருத்தருக்கு அமுதன் பரவாயில்லை என்பது போல் சொல்கிறாளா? என்பது இருவருக்கும் புரியவில்லை. அதிலும் மகி மனதிற்கு இன்னும் அது சங்கடத்தை தான் கொடுத்தது.
“அருள் இருந்தும் திரும்ப நல்லா யோசிச்சுக்க.. நான் செஞ்ச தப்புக்கு உன்னோட வாழ்க்கையை நீ பணயம் வைக்க வேண்டாம்.. அப்புறம் என்னால அதை தாங்கிக்கவே முடியாது.. நான் நாலு விஷயங்களையும் யோசிக்காம பெரிய தப்பு செஞ்சுருக்கேன்.. ஆனா அதுக்காக நீ எனக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுக்காத அருள்..” என்று அவன் பேசும்போதே உணர்ச்சிவசப்படுவது அருள்மொழி நன்றாகவே உணர்ந்துக் கொண்டாள்.
“நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்தேன் மகி.. கண்டிப்பா இது தப்பா போய்டாது.. அமுதன் அந்த அளவுக்கு மோசம் ஒன்னுமில்லையே, அதனால நீ வருத்தப்படாத.. சாரி ஏதோ ஒரு கோபத்தில் உன்னோட மனசை கஷ்டப்படுத்திட்டேன்.. எதையும் போட்டு மனசை குழப்பிக்காத.. என்னோட நிச்சயதார்த்ததுக்கு நீ வரணும்.. நான் உன்னை எதிர்பார்ப்பேன் சரியா?” என்று அவள் கேட்க,
மனதில் உள்ள பாரம் இன்னும் முழுமையாக தீரவில்லையென்றாலும், “நான் வராமலா கண்டிப்பா வருவேன்..” என்று கூறி அலைபேசி அழைப்பை அணைத்தான்.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}