தொடர்கதை - சிவகங்காவதி - 09 - ஸ்ரீ
“நெய்தல் திணை- தோழிக்கு உரைத்த பத்து
தலைவி தனது நிலை குறித்தோ, களவு வாழ்க்கை இல்லத்தாருக்குத் தெரிந்தமை குறித்தோ தோழியிடம் எடுத்துக் கூறுவாள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தோழிக்கு உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப் படுகிறது. இப்பகுப்பின் ஒரு பாடல் மட்டும் கற்புக் காலப் பாடலாக உள்ளது.
அம்ம வாழி தோழி பாணன்
சூழ்கழி மருங்கின் நாண் இரை கொளீஇச்
சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
அருந்தவம் முயறல் ஆற்றா தேமே.- (111)
(கழி = உப்பங்கழி; நாண் = தூண்டில்; முயறல் = முயலுதல்; சினைக்கயல் = சினையாக உள்ள கயல்மீன்கள்; ஆற்றாதேம் = இயலாதவர்களாகிய நாங்கள்)
என்ற பாடலில் தலைவன் பிரியாமல் இருக்கத் தவம் இயற்றவில்லை என்றாலும் பிரிவை ஆற்றியிருக்கும் திறம் பெற்றிருக்கிறேன் எனத் தலைவி தோழியிடம் உரைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.”
நாட்கள் புரவி வேகத்தில் நகர ஆரம்பித்திருந்தது.சில மாற்றங்களைத் தவிர சிவகங்காவதியின் சிறை வாசத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.
அதே நேர உழைப்பு இருந்தாலும் அவளுக்கு முன்பு வழங்கப்பட்ட தரமற்ற உணவிற்குப் பதில் புலால் சேர்க்காத சாதாரண உணவு வழங்கப்பட்டது.சிவகங்காவதியுமே பெரிதாய் எதையும் கண்டுகொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை.
தந்தையின் பிரிவை ஏற்பதற்கே அவள் மனம் படாதபாடு பட்டது.எதார்த்தம் புரிந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் எப்போதுமே வருத்தம் இருக்கும் அல்லவா!
நஸீமிற்கும் பெரிதாய் எந்த குழப்பமும் இருக்கவில்லை.சமீராவுடனான அன்றைய உரையாடலுக்குப் பின் வலுக்கட்டாயமாய் சிவகங்காவதியைப் பற்றிய எண்ணங்களை மனதில் இருந்து அகற்ற முயன்று சிறிதளவு வெற்றியும் கண்டான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிரேமாவின் " எதிர் எதிரே நீயும் நானும்..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
அப்படியான ஒரு நாளில் அவனைக் கொல்வதற்காக சதி திட்டம் தீட்டிய பக்கத்து சிற்றரசரின் மீது போர் தொடுத்து அவனை பிணைக் கைதியாகவும் ஆக்கினான்.
“இதோ பார் நஸீம் எனைக் கொல்வதால் உன் உயிர்க்கான உத்திரவாதம் அதிகரிக்கப் போவதில்லை.நான் இல்லையெனினும் எனைப் போல் இன்னொருவன் நிச்சயம் உனைக் கொல்வதற்கு வருவான்.
உனக்கான எதிரிகள் நீ நினைப்பதை விடவும் அதிகம்.என் மரணம் இன்னும் சில நிமிடங்களில் எனத் தெரிந்து கொண்டு தான் நான் உயிர் நீக்கப் போகிறேன்.ஆனால் நீயோ எப்போது என்ன நடக்குமோவென்ற பயத்தோடே வாழ வேண்டும்.மரண பயத்தை விட கொடிய தண்டனை ஏதேனும் இருக்கிறதா என்ன?”
“அஸ்லாம்லேக்கும் பஷீர். அரசரனாய் இருப்பதில் ஒன்றும் பெரிய சாதனை இல்லை.அதைவிட அதிகமாய் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை இருக்க வேண்டும்.உன்னுடைய இந்த ஊன் உடல் அனைத்தும் உனக்கு கிடைத்தது இறைவனால் அன்றி உன் விருப்பத்தால் அல்ல.
அப்படியிருக்கும் போது இந்த உயிர் மீதான பயமென்பது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையின்மையைத் தான் அறிவுறுத்தும்.ஆகவே அப்படிப்பட்ட பயம் எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு ஏற்படப் போவதில்லை.
நீ முன்செல்லும் அல்லாஹ்வின் இடத்திற்கு உன் நண்பர்களும் கூடிய விரைவில் வருவார்கள்.அதுவரை எந்த வன்மமும் வஞ்சனையுமின்றி உன் ஆன்மா ஓய்வு கொள்ளட்டும்.”,என்றவனின் கண்ணசைவில் அவனின் சிரசைத் துண்டித்தனர் வீரர்கள்.
அதைத் தொடர்ந்து வந்த ஒரு நன்னாளில் பேரரசரின் தலைமையில் இந்துஸ்தானத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றான் நஸீம்.அவனது சிற்றரசுப் பகுதியில் அதனை விழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர்.
ராஜ்ஜியத்தின் அனைத்து மக்களும் பாடல் நடனம் என கலை நிகழ்ச்சிகளின் ஆரவாரத்தோடு அரண்மனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளையும் உணவு பரிமாறப்பட்டது.
புலால் சேர்த்த உணவு ஒருபுறமும் சைவ உணவு ஒருபுறமுமென வரும் அனைவருக்கும் வயிறாற உணவு பரிமாறப்பட வேண்டும் என்பதாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தலைமை சமையல்காரரின் கீழ் வழக்கமாய் வேலை செய்பவர்கள் தவிர உதவிக்காக சிறைக் கைதிகளும் அனுப்பப்பட்டனர்.சிவகங்காவதி இன்னும் சிலரோடு சைவப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்தாள்.
பல வகையான காய்கறிகள் பெரிய பெரிய தாழிகள் பெரிய பெரிய அடுப்புகள் கொண்டு அத்தனை வேலைகளும் துரிதமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன.சிவகங்காவதிக்கு ஆச்சரியம் தாளவில்லை.சிற்றரசான அந்த அரண்மனையே அத்துனை பெரிதாய் பிரம்மாண்டமாய் ராஜ்யத்தின் தலைமையகம் போல இருப்பதை வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் அவள் உடல்நிலை குன்றியிருந்த நேரத்தில் அவளோடு துணையிருந்த பணிப்பெண் ஆயிஷா அங்கு வந்தாள்.