அடுத்ததாய் அரசவை அதிகாரிகளின் பணியிடங்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்யவிருக்கிறேன்.இன்று முதல் இஸ்லாமை சேர்ந்த அமைச்சர்களோடு மூன்று புது அமைச்சர்கள் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.
அவர்கள் மூவரும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.அவர்களின் மக்களுக்கு தேவையானவற்றை என் பார்வைக்குக் கொண்டு வருவதற்காககவே இந்த ஏற்பாடு.அத்தோடு இந்த நஸீமின் ஆட்சி எப்போதுமே மக்களுக்கு நிறைவை அளிப்பதாகவே இருக்க வேண்டும்.
மதத்தால் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துபவர்களுக்கு நிச்சயமாய் இந்த ராஜ்ஜியத்தில் இடமில்லை.அல்லாஹ்ஹின் பிள்ளைகள் எப்போதும் எக்காரணம் கொண்டும் மற்றவர்களைத் துன்புறுத்த எண்ண மாட்டார்கள்.
அத்தோடு இவள் “சிவகங்காவதி” இந்த இஷான் நஸீமின் மனைவி.இந்த ராஜ்ஜியத்தின் அரசி.பிறப்பால் இவள் ஒரு இந்து.அதை அறிந்தே அவளைக் கரம் பற்றியிருக்கிறேன்.எனவே அவளின் மதத்தையும் பழக்க வழக்கங்களையும் வாழ்வு முழுமைக்கும் பின்பற்றும் உரிமையை அவளுக்கு எப்போதும் அளிப்பேன்.
அதுமட்டுமன்றி எந்த ஒரு காலத்திலும் மதத்தை மட்டும் வைத்து தனி மனிதனின் மகிழ்ச்சியை நம்மால் நிர்ணயிக்க முடியாது. மதங்களிடேயே சகிப்புத்தன்மையும் மக்களிடையே தியாக சிந்தனையும் இருந்துவிட்டால் நாட்டின் அமைதிக்கு ஒருபோதும் குறைவு ஏற்படாது.
மதங்கள் மனிதனை நெறிப்படுத்துவதற்கே அன்றி கடவுளின் பெயரைக் கூறி சக மனிதனை அழிப்பதற்கு அல்ல. என் மக்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியும் நிம்மதியும் எந்த இடையூறுமின்றி கிடைக்கட்டும்.”,என்றவனோடு சிவகங்காவதியும் இரு கரம் கூப்பி நின்றாள்.
“உசூர் இஷான் நஸீம் வாழ்க வாழ்க!!!!
அரசி சிவகங்காவதி வாழ்க வாழ்க!!!”,என்ற கோஷங்களை கடந்து அரசவையிலிருந்து வெளியே வந்தபோது சிவகங்காவதி அவனையே பார்த்திருக்க என்ன என்பதாய் அவளைப் பார்த்து நின்றான் நஸீம்.
“யாரோ என் முழுப்பெயர் கூறி அழைத்ததாய் நியாபகம்!!”
“மக்களின் அரசியின் பெயர் சிவகங்காவதி தான்.இந்த நஸீமின் மகாராணியின் பெயர் தான் கங்கா.அதை யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்.அது நம் வாரிசு என்றாலும் சரி”,என்று கூறியவனின் தோள்களில் காதலாய் சாய்ந்துகொண்டாள் சிவகங்காவதி.
அன்றைய தினம் பூஜையில் இருந்தவளுக்கு ஆனந்தத்தில் கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டிருந்தது.அந்த ஈசனின் மீது அசைக்க முடியா நம்பிக்கை கொண்டிருந்தவளுக்கு அந்த ஈசன் அவள் மனம் போலே மாங்கல்யத்தை அளித்திருந்தார்.
எந்தமதம் எந்த கடவுளாக இருந்தாலும் உண்மையான பக்தி மட்டுமே என்றும் பிரதானமாய் இருக்க வேண்டும் என்பதை மனமாற உணர்ந்திருந்தாள் சிவகங்காவதி.
*******முற்றும்**********
இந்த கதைக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த அத்துனை வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.சரித்திர நாவல் என்று ஆரம்பித்த போது வெகுவான தயக்கமும் பயமும் அதிகமாகவே இருந்தது.ஆனால் இறுதி அத்தியாயத்தின் இந்த நொடியில் மனம் நிறைந்திருக்கின்றது.ஒவ்வொரு முறை உங்கள் அனைவரின் கருத்துக்களையும் படிக்கும் போது அப்படியாய் ஒரு நிறைவு இருந்தது.
இந்த கதையின் அடித்தளம் காதலும் மத பாகுபாடின்மையும் என்பதால் தான் வேறு எவ்வித போர்களோ அரச கால வழக்கங்களோ இங்கு குறிப்பிடபடவில்லை.வழக்கமான என் பாணியில் சட்டென முடிந்துவிட்டாலும் படித்ததன் நிறைவு உங்களை அடைந்திருக்கும் என்ற நம்பிக்கையில் கதைக்களத்தை முடித்திருக்கிறேன்.நட்புகள் அனைவருக்கும் மற்றுமொரு முறை மனமார்ந்த நன்றிகள்.