"அவளின் அந்த அக்கறையான கேள்வி அவனது உயிர் வரை சென்று இனித்தது.
" ம்ம் சாப்பிட்டேன்.. நீ சாப்பிட்டியா?" என்று திருப்பிக் கேட்டான்.
"ம்ம் சாப்பிட்டேன்.." என்றவள், "ரொம்ப டயர்டா தெரியறீங்க.. காபி போட்டு தரவா?" என்றுக் கேட்டாள்.
அவ்வளவு தான் அவன் மனம் அவளிடம் சரணாகதி அடைந்து, தன் காதல் மொத்தத்தையும் அவளிடம் சமர்ப்பிக்க தயாராக இருந்தது. இருந்தாலும் அதற்கான தருணம் இது இல்லை என்று தன்னை அடக்கிக் கொண்டவன், சரி என்று தலையாட்டினான்.
அன்று அவள் போட்டுக் கொடுத்த காபியின் சுவை வேறு இன்னும் அவன் நாக்கில் இருப்பது போலவே உணர்வு, அவள் காபி போடும் அழகை ரசித்துப் பார்த்தப்படியே அமர்ந்து, அவள் கொண்டு வந்து கொடுக்கும் காபியை அவளோடு சேர்ந்து அமர்ந்து பருக வேண்டுமென்றெல்லாம் அவன் மனம் ஆசைக் கொண்டது தான், ஆனால் இப்போது அவனுக்கு அதற்கு நேரமுமில்லை, அப்படியே இருந்தாலும் அவளுக்கு அது பிடிக்குமோ, பிடிக்காதோ என்று நினைத்தவன்,
"ம்ம் டயர்டா தான் ஃபீல் பண்றேன்.. காபி குடிச்சா நல்லா இருக்கும்.. போட்டு ரூம்க்கு எடுத்துட்டு வர்றீயா.. கொஞ்சம் அவசர வேலை இருக்கு அதான்.." என்று சொல்லிவிட்டு அவன் செல்ல,
அவனது அறைக்கு செல்ல வேண்டுமென்றதும் யாதவிக்கு திரும்ப அச்சம் சூழ்ந்துக் கொண்டது. அவன் அப்படி அத்துமீறி எதுவும் செய்யமாட்டான் என்று தெரியும் தான், ஆனால் அவன் அறைக்கு செல்வதற்கு வேறு அர்ச்சனா என்ன சொல்வார்களோ என்ற நினைப்போடு அவனுக்கு காபி போட்டாள்.
அன்று போலவே இன்றும் கை நடுக்கத்தோடு காபி கோப்பையை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சத்துடனே கையில் எடுத்துக் கொண்டு மேலே உள்ள அறைக்கு எடுத்து செல்லும் வரை அய்யோ என்றிருந்தது அவளுக்கு, ஆனாலும் கைகளில் அந்த நடுக்கம் குறைவேனா என்றிருந்தது. அவன் முன் சாதாரணமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் முடியவில்லையே, அவன் அதை கண்டுகொண்டால் என்ன நினைப்பான்? என்பதில் இன்னுமே அவள் பதட்டமானாள்.
ஆனால் அவளின் உடல்மொழிகளை அவனும் தான் புரிந்துக் கொள்கிறானே, கை நடுக்கத்துடன் அவள் கோப்பையை எடுத்து வருவதை பார்த்து, "இவக்கிட்ட காபி கேட்காமலேயே இருந்திருக்கலாம்.." என்று நினைத்தவன்,
எங்கே அவள் தவற விட்டுவிடுவாளோ என பயந்து, அவளிடம் இருந்து காபி கோப்பையை வாங்கி அங்கு அவன் வேலை செய்வதெற்கென போடப்பட்ட மேஜை மீது வைத்தான். பின் அவளின் இரு கைகளையும் பிடித்து அங்கு போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர வைத்தான்.