(Reading time: 18 - 35 minutes)

அவனது செய்கைகளை புரிந்தவளாக அவன் என்ன சொல்வானோ? என்பது போல் கொஞ்சம் அச்சத்தோடு பார்க்க,

"என்னைப் பார்த்து இப்படி எதுக்கு பயப்பட்ற யது.. நான் அப்படி உன்னை என்னை சொல்லிடுவேன்னு உனக்கு இந்த பயம்.. இல்ல உனக்கு பிடிக்காததை ஏதாவது செஞ்சுடுவேன்னு பயமா? இதுநாள் வரைக்கும் என்னை உன்னால புரிஞ்சிக்கவே முடியலையா? இல்லை என்னோட இருப்பதே உனக்கு பிடிக்கலையா? கட்டாயத்தின் பேரில் தான் இங்க இருக்கியா?" என்றுக் கேட்டான்.

"அய்யோ அப்படியெல்லாம் இல்லை.. உங்களை பார்த்து எனக்கு பயம் கிடையாது.. இத்தனை நடந்த பிறகும் நான் இந்த வீட்டில் இருக்கேன்னா, அதுக்கு நீங்க தான் காரணம், அதை கூட என்னால புரிஞ்சிக்க முடியாதா? ஆனாலும் நான் தப்பு செஞ்சவ இல்லையா? அது தான் என்னை சகஜமா இருக்க விட மாட்டேங்குது.." என்று சொல்லி தலை குனிந்துக் கொண்டாள்.

அர்ச்சனா பேசுவதை பற்றி சொல்ல வேண்டுமென்று அவள் நினைக்கவில்லை, முன்பானால் முதலில் அதை தான் சொல்லியிருப்பாள். ஆனால் தனம், புவனா என்று பண்பட்டவர்களோடு இருந்து அவளும் பக்குவப்பட்டுக் கொண்டாள். இதில் அர்ச்சனா போன்று ஏற்கனவே ரூபினியையும் அவள் பார்த்திருக்கிறாளே, அதனால் அர்ச்சனா பேசுவதை பற்றி அவனிடம் சொல்லி, அண்ணன் தங்கைக்குள்ளே பிரச்சனையை உருவாக்க கூடாது என்று நினைத்து அதைப்பற்றி சொல்லாமல் விட்டுவிட்டாள்.

அவன் நினைத்த அளவுக்கு அவளுக்கு தன்னை பிடிக்காமலெல்லாம் இல்லை, வெறும் தயக்கம் மட்டும் தான் அவளின் விலகலுக்கு காரணம் என்பதை உணர்ந்து நிம்மதி அடைந்தவன்,

"யது.. உன்னோட நிலைமை எனக்கு புரியாம இல்ல.. ஆனா நாம மனசு வச்சா எதுவும் நடக்கும்.. தப்பை எப்போது உணர்ந்திடுகிறோமோ, அப்பவே அது மன்னிக்கப்பட்றதா ஆகுது.. நீ உன்னோட தப்பை உணர்ந்துட்டல்ல.. அப்போ அதை மன்னிக்க தானே வேணும், நான் மன்னிக்கன்னு இல்ல மறந்துட்டேன்னே சொல்லலாம், அதேபோல் நீயும் அதை மறந்து இயல்பு நிலைக்கு வர்றது உன்கையில் தான் இருக்கு..

இங்கப்பார் யது.. உன்கிட்ட நிறைய பேசணும்னு இருக்கு.. ஆனா இப்போ ஒரு முக்கியமான வேலையா தான் வந்தேன்.. அதனால இன்னொரு நாள் நிறைய பேசுவோம்.. இப்போதைக்கு உனக்கு சொல்றது என்னன்னா..  நீ இயல்பா இரு.. இது உன்னோட வீடு புரிஞ்சுதா.. அதேபோல முதலில் என்னை ஒரு நல்ல ப்ரண்டா பாரு.. அப்போ என்னை பார்க்கும் போது இந்த பதட்டம், பயம், நடுக்கம் இதெல்லாம் தானா போயிடும் சரியா.."  என்று புன்னகையுடன் அவன் மனம் திறந்து பேசவும்,

"புரியுது.. இனி உங்களை பார்த்து பேசும்போது எனக்கு எந்த பயமும் இருக்காது.. நீங்க முக்கியமான வேலையா வந்துருக்கீங்க.. அதை பாருங்க.. நீங்க சொல்றது போல நாம இன்னொரு நாள் பேசுவோம்.. சரி முதலில் காபியை குடிங்க.. சூடா இருக்கா பாருங்க, இல்லன்னா வேற காபி போட்டு கொண்டு வரவா.." என்றுக் கேட்டாள்.

"இல்ல இதுவே போதும்.." என்று அவன் சொல்லவும்,

"சரி வேலையை பாருங்க.." என்றவள், அவனிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

அறையிலிருந்து வெளியே வரும்போது பார்த்தால், மஞ்சுளாவும் அர்ச்சனாவும் படியேறிக் கொண்டிருந்தார்கள். இருவரையும் எதிர்பார்க்காதவள், உடனே அர்ச்சனாவை பார்க்க, அவள் இவளை முறைத்து பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.