தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 17 - மது
‘நன்றியுணர்வு’
மனிதனுக்கு இருப்பதை விட பறவை, விலங்குகளுக்கு இந்த உணர்வு மிகவும் அதிகம் உண்டு.
தன்னை பாசத்தோடும் பிரியத்தோடும் வளர்பவர் மீது பாசம் வைப்பது மட்டுமில்லாமல் உயிர் தியாகமும் செய்யும் பிராணிகளை அறிவோம்.
சிறு குழந்தையாய் இருந்த போது வளர்த்தவரை பல வருடங்கள் கழித்தும் அடையாளம் கண்டு அன்பைப் பொழியும் காட்டில் வசிக்கும் மிருகங்களையும் கேள்வியுற்றுள்ளோம்.
அப்படி ஒரு பாசம் கலந்த நன்றியுணர்வு தான் தேன்மொழி மீது செந்தமிழுக்கும்.
தன் சக உயிரனம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது தன்னுயிரையும் பொருட்படுத்தாதது காப்பாற்றிய தேன்மொழி மீது செந்தமிழ் மிகுந்த அன்பும் நன்றியும் கொண்டிருந்தான்.
அந்த உணர்வே தேன்மொழியை காப்பாற்றவும் அவளை பாதுகாக்கவும் செந்தமிழை உந்தியது.
அந்த உணர்வு இன்னும் ஆழமாக வேரூன்ற தேன்மொழியின் பாசமான பிரதிபலிப்பு காரணம்.
ஏதோ ஓர் கடல் வாழ் உயிரனம் என்று கடந்து விடாமல் அந்த உயிருக்குப் பெயர் சூட்டி தனது உற்றத் தோழனாக துணைவனாக அன்பு செலுத்தினாள்.
அந்த அன்பே தேன்மொழியைத் தேடி அந்த ஆளில்லா தீவிற்கு செந்தமிழை வரச் செய்தது.
அந்த அன்பே செந்தமிழைத் தேடி தீவிற்குத் தேன்மொழியை அழைத்துச் சென்றது.
இந்த அன்பின் ஆழத்தையும் சக்தியையும் சோதிக்கும் தருணம் காத்திருக்கிறது என்று அறியாமல் தேன்மொழியும் செந்தமிழும் கடல் உலகில் ஆனந்தமாக நீந்தி வந்தனர்.
செந்தமிழ் சேவ் தி ஸீ அமைப்பை தேன்மொழி தொடங்கவும் அது போன்ற பல தன்னார்வ அமைப்புகளின் ஆதரவு கிடைக்கப் பெற்ற போதிலும் பொது மக்களிடம் விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை.
தாங்கள் வாழும் நிலத்தையே பாதுகாக்க தவறிய மக்கள் கடலையா கண்டு கொள்ளப் போகிறார்கள் என்று தேன்மொழி எண்ணினாள்.
அதனாலேயே தனது தந்தையும் தமையனும் கடல் உலகம் தொடர்பான திரைப்படம் எடுக்க முன்வந்த போது அது எவ்வளவு தூரம் வெற்றி அடையும் என்று ஐயம் கொண்டு வேண்டாம் என்று மறுத்துக் கூறினாள் அவர்களின் செல்ல இளவரசி.
“அப்பா, அண்ணா இவ்வளவு செலவு செய்து நீங்க படம் எடுத்து அது நஷ்டம் ஆகிவிட்டால் அப்புறம் கஷ்டம்”
“பாப்பா இது வரை நீ ஆரம்பித்து வைத்த அனைத்தும் லாபமாக தான் அமைத்திருக்கு. நீ மகாலக்ஷ்மிடா” முத்துக்குமரன் நெகிழ்ச்சியோடு கூறினார்.