தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 19 - மது
இந்த உலகத்தில் மனிதன் தோன்றும் முன் பல கோடி வருடங்களாக எண்ணற்ற உயிரனங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருந்திருக்கின்றன.
ஆக மனிதனை விட மற்ற உயிரனங்களுக்கு இந்த பூமியின் மீதான உரிமை அதிகம்.
ஆனால் பரிணாம வளர்ச்சியில் தனக்கு கிடைத்திருக்கும் அற்புதமான அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதை விட்டு மற்ற உயிர்களை துன்புறுத்த பயன்படுத்துகிறான்.
உணவு, வாழ்வாதாரம் போன்றவற்றுக்காக இல்லாமல் சுகபோகங்களுக்கு, சிற்றின்ப மகிழ்ச்சிக்கு மற்ற உயிர்களின் சுதந்திரத்தைப் பறித்து அவைகளை மிருகக்காட்சி சாலைகளில், பெரிய ஆக்குவாரியம்கள் போன்றவற்றில் கூண்டுக்குள் அடைத்து வைப்பது எவ்வகை நியாயம்.
மனிதன் குற்றம் புரிந்து தண்டனை அனுபவிக்கத் தான் சிறை செல்கிறான்.
ஆனால் அந்த ஜீவன்கள் எந்த குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் கூண்டில், தொட்டிகளில் அடைபட்டு தண்டனை அனுபவிக்கின்றன.
நாகரீக வளர்ச்சியில் தனக்கு உதவி புரியவே விலங்குகளை பழக்கி வைத்தான் மனிதன். அவைகளை தங்களில் ஓர் அங்கமாகவே பாவித்து பாதுகாத்து வந்தான்.
ஆனால் காட்சி பொருளாக்கி வேடிக்கை பார்த்து இன்புறும் வழக்கம் எப்போதிருந்து தோன்றியது.
ஆழ்மனதில் இக்கேள்விகள் தாக்க அவற்றின் தாக்கத்தில் கண்மணிகள் இமைகளுக்குள் மெல்ல அசைந்து கொடுக்க அந்த சிறு அசைவையும் கவனித்து விட்டிருந்தாள் வானதி.
“அத்தை, பாப்பா கண்ணு லேசா அசைந்தது” அவள் கூற கயல்விழி கண்களில் நம்பிக்கையை தேக்கி மகளின் அருகில் வந்து பார்த்தார்.
நிர்மலமான ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் தேன்மொழி.
மயக்க மருந்து குண்டு பாய்ந்ததால் கோமா நிலைக்கு சென்றுவிட்டிருந்த தேன்மொழிக்கு மேலும் சிகிச்சை அளிக்க லண்டனின் தலைசிறந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தேன்மொழிக்கு இவ்வாறு நிகழ்ந்தது டாக்குமன்ட்ரி படக்குழுவினர் மற்றும் கெவினை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடந்ததை அறிந்த இளங்கோ அச்சமயம் அவர்களின் மன்னிப்பை ஏற்கவும் இல்லை, அவர்களை கோபித்துக் கொள்ளவும் இல்லை.
எதற்காக அவள் கடலுக்குள் குதித்தாள் என்று யாருக்குமே புரியாத புதிராகவே இருந்தது.
“உங்கள் மன்னிப்பை தேன்மொழியிடம் கேளுங்கள். அதற்கு அவள் சீக்கிரம் கோமாவில் இருந்து வெளி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறியிருந்தான்.