"அய்யோ நித்தி.. இந்த ஊரெல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே நிறைய முறை பார்த்தாச்சு.. அதனால வேற எங்கேயாச்சும் சொல்லு.." என்றான்.
இந்த ஊர்களை அவன் அதிக முறை பார்த்திருக்கலாம், ஆனால் அவள் இன்னும் ஒருமுறை கூட இந்த ஊர்களை சுற்றி பார்த்ததில்லையே,
சின்ன வயதில் எப்படியோ தெரியாது.. அவளுக்கு நன்றாக விவரம் தெரிந்ததிலிருந்து, தந்தை வேலைக்கு செல்வதும், வீட்டிலிருந்தால் குடித்துவிட்டு விழுந்து கிடப்பதும் என்று இருப்பார். வஞ்சிக்கு அவரோடு மல்லுக் கட்டுவதற்கே சரியாக இருக்கும்,
வஞ்சி வேலைக்கு சென்றதற்கு பிறகு இன்னுமே அவருக்கு நேரம் கிடைக்காத காரணத்தால் நித்யாவை எங்கேயும் அவர் வெளியில் அழைத்து சென்றதில்லை,
அவர்களுக்கு அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்களில் சீட்டு பிடிப்பது, வட்டிக்கு பணம் கொடுப்பது என்று ஒரு பெண்மணி இருப்பார். அவர் அங்கிருப்பவர்களில் விருப்பமானவர்களிடம் மாதமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வாங்கி, வருடத்தில் ஒருமுறை சுற்றுலா ஏற்பாடு செய்து, தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், சுற்றுலா தளங்களுக்கு என்று அழைத்துக் கொண்டு செல்வார்.
வஞ்சியால் கணவனை தனியாக விட்டு செல்ல முடியாது, நித்யாவை மட்டும் அனுப்பி வைக்க சொன்னாலும் வயதுக்கு வந்த பெண்ணை தனியாக அனுப்ப பயந்து மறுத்துவிடுவார். அக்கம் பக்கம் உள்ள தன் தோழிகள் சுற்றுலாவிற்கு செல்வதை பார்த்து அவளுக்கு அப்படி செல்வதற்கு மனம் விரும்பினாலும், நித்யாவிற்கு அன்னையிடம் அடம்பிடித்து பழக்கமில்லாததால் அமைதியாக தன் ஆசையை மறைத்துக் கொள்வாள்.
இங்கு வந்த பின்பும் கூட என்னதான் வேலையாட்கள் இருந்தாலும், வஞ்சி வீட்டு பொறுப்பு மொத்தத்தையும் ஏற்றுக் கொண்டதால், வீடே கதி என்று இருப்பார்.
குறிஞ்சியம்மாளுக்கும் மூட்பின் காரணமாக இப்போதெல்லாம் வீட்டிலேயே இருப்பதால், பேத்தியை நான்கு இடத்திற்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்ட வேண்டுமென்பது தோன்றவில்லை, வெறும் அருகில் உள்ள கோவிலுக்கு மட்டும் தான் அழைத்துச் செல்வார். ஆண்கள் இருவருக்கும் அலுவலக வேலையே பெரிதாக இருப்பதால், நித்யாவையோ வஞ்சியை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று அவர்களுக்கும் தோன்றியதில்லை.
மொத்தத்தில் அவள் இருந்த ஊர், இப்போது சென்னையை தவிர, அவள் சென்றது என்றால் அவர்களின் திருமணத்திற்காக பழனி முருகன் கோவிலுக்குச் சென்றது தான்,