கோபமில்லை. சில சமயம் அனைத்தும் தெரிந்தவர்களுமே இதுபோல் தடுமாறுபவர்கள் தான், ஆனால் தான் வந்த திசையை சரியாக பார்க்கவில்லை, காத்திருங்கள் இருவரும் சேர்ந்து போகலாம் என்று தன்னிடம் அவள் வெளிப்படையாக சொன்னால் தான் என்னவாம் என்பது தான் அவனது கோபம்,
இதில் அலைபேசியை வேறு அவள் அணைத்து வைத்திருப்பதை அறிந்தவன், "இவளெல்லாம் எதுக்கு மொபைல் யூஸ் செய்றா?" என்று நினைத்து அதற்கும் கோபம் கொண்டான்.
ஆனால் அவள் தன் அன்னையிடமே வெளிப்படையாக எதையும் பகிர்ந்துக் கொண்டதில்லையே, இதில் திருமணம் ஆகி ஒருவாரம் கூட ஆகாத கணவனிடம் எதை வெளிப்படையாக பகிர்ந்துக் கொள்வாள்?
திருமணத்திற்கு முன்னரே, அவனுக்கு தான் பொருத்தமானவள் இல்லை என்ற நினைப்பில் இருந்தவளுக்கு, ஒருமுறை அவளை அவன் குறை கூற, இனி அவன் முன்னர் சரியாக நடந்துக் கொள்ள வேண்டுமென நினைத்தாலும், மனதில் உள்ள பயத்தில் மீண்டும் மீண்டும் ஏதாவது தவறு நடந்துவிடுகிறது. அதில் இன்னும் அவள் பயமும் தாழ்வு மனப்பான்மையும் அதிகமாக, அவள் எங்கிருந்து அவனிடம் வெளிப்படையாக இருப்பாள். அதை அவனும் தான் எப்போது புரிந்துக் கொள்வான்.
இன்னுமே உணவை அளந்துக் கொண்டிருந்தவளிடம், "நமக்காக ட்ரைவர் காத்திருக்கிறார் நித்தி, சீக்கிரம் சாப்பிடு," என்றதும், அவசரமாக உணவை எடுத்து விழுங்கியவளுக்கு விக்கல் எடுத்தது.
"சீக்கிரம் சாப்பிட சொன்னா, எதுக்காக வேகமா சாப்பிட்ற, சாதாராணமாவே சாப்பிடு.." என்று அவன் சொன்னதற்கு தலையை ஆட்டிக் கொண்டாள்.
"ஏன் இந்த டிஷ் உனக்கு பிடிக்கலையா?" என்றுக் கேட்டால், அதற்கும் மறுப்பாக தலையசைத்தாள்.
"இங்கப்பாரு நித்தி, ஏதோ கோபத்தில் திட்டிட்டேன், அதுக்காக சும்மா சும்மா உன்கிட்ட அடுத்து மன்னிப்பு கேட்டு கெஞ்சிக்கிட்டு இருப்பேன்னு நினைக்காத, நீ செஞ்சதும் தப்பு. ஒரு இடத்துக்கு வந்திருக்கோம்னா, எங்க போறோம், எங்க வரோம், அது எந்த இடம் எல்லாம் மனசுல வைக்கணும்,
நான் உன்னை கூட்டிட்டு வந்ததால, குழந்தை மாதிரி நான் கூட்டிட்டு போற இடத்துக்கு சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு வரக் கூடாது. திடீர்னு ஏதாவது இங்க எனக்கு பிரச்சனைன்னா, நீ சமாளிக்கும் அளவுக்கு உனக்கு திறமை வேண்டாமா? இப்படி ஒன்னும் தெரியாம திருதிருன்னு முழிச்சா ஏதாவது நடக்குமா?