தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 03 - சாகம்பரி குமார்
அதிரதனின் கையிலிருந்த கோர்ட் ஆர்டரை மீண்டும் மீண்டும் படித்த வினய் சிரித்துக் கொண்டே கேட்டான்.
“பாஸ், இப்படியெல்லாமா ஆர்டர் போடுவாங்க?. இதுவரை நான் கேள்விபட்டதேயில்லை”
“நானும்தான், ஏதாவது கேள்வி கேட்பார்கள். தேறுமா தேறாதான்னு பார்த்துட்டு, விவாகரத்திற்கு பரிந்துரைப்பார்கள். இப்படி ரெக்கமண்ட் செய்ய மாட்டார்கள். இதுவரை இப்படி நடந்தேயில்லை.”
“ஆமாம் பாஸ்… இப்படி எழுத மாட்டார்கள். உடுப்பி ஹோட்டல் கேரியர் மீல்ஸை திறந்த மாதிரி, செக்மெண்ட் செக்மெண்டா எழுதி இருக்கார்.” என்றவன், அந்த பேப்பரில் இருந்ததை விளக்கினான்.
“பத்து நாட்கள் அதிதி மேடம் ஊரில் இருக்கணும், ஐந்து நாட்கள் காட்டு பகுதியில் வசிக்கணும்… ஐந்து நாட்கள் மலைபிரதேசத்திற்கு சுற்றுலா போயிட்டு வரணும். அப்புறம் பத்து நாட்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் தனித்தனியே அவர் அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் இதுல ஏதாவது அர்த்தம் இருக்கா என்ன?”
“இருக்கு…. அவர் தந்திருக்கும் முறைப்படி நான் செய்ய செய்ய அதிதியுடன் பழகும் வாய்ப்பும் அவளை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும். அவளோட ஊரில் தங்கும்போது அவளுடைய விருப்பங்களை தெரிந்து கொள்ள முடியும். டிரிப் போகும்போது மனம் விட்டு பேச முடியும். காட்டு பகுதியில் இருக்கும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டிய அவசியம் வரும்.”
“கரெக்ட், மலைப்பகுதியில் இருக்கும்போது மனம் தெளிவாகும்…. எப்படின்னா கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஒரே நிறத்தை பார்க்கும்போது குழம்பிய மனம் தெளிவாகும்.”
“ஆமாம், இத்தனையும் முடித்து இருவரும் தனித்து வாழும் பத்து நாட்களில் ஒருவர் பற்றி ஒருவர் பாஸிட்டிவாக நினைத்து பார்க்கும் சூழல் வரும்”
“ப்ச்… எல்லா டெக்னிக்கையும் ஒரே போடாக போட்டு விட்டார். நிறைய திரைப்படங்கள் பார்ப்பாரோ?”
“அத்தனையும் தமிழ் படமாக இருந்திருக்கும்.”
“நல்லவேளை பாஸ் அவர் இங்கிலீஸ் படம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் உங்க ரெண்டு பேரையும் செவ்வாய் கிரகத்திற்கு ட்ரிப் போயிட்டு வர சொல்லி இருப்பார்.”
”அடுத்த ஹியரிங்ல இதைபற்றி நீ சொல்லி கொடுப்பா. இத்தனையும் முடித்த பின் அவருக்கு முன் பாஸிட்டிவ் முடிவோட ஆஜராகணும்ல.”
“சரி சார், இந்த ட்ரையல் எல்லாம் உங்களுக்கா அதிதி மேடமிற்கா?”