ஆலம் விழுதுகள் போல உறவுகளை தரப்போகும் வேராக இருக்கப் போகிறவளா? அவன் குழம்பினான்.
அவனாக ஏன் குழம்பிக் கொள்ள வேண்டும்? அவனுடைய ப்ரெண்ட்…. ப்ளாஸஃபர்… கைடுன்னு பெருமை அடித்து கொள்ளும் அப்பாவிடமே கேட்டு விடலாமே? குழப்பத்தை நேருக்கு நேர் கேட்டு விடுவதால் தெளிவாகி விடுமே!
அவன் அவரை தேடி போனான். பால்கனியில் அமர்ந்து மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதிரில் மோடாவை இழுத்துபோட்டு அமர்ந்தான். அவனை பார்க்கவும்,
“வாப்பா… காபி குடிச்சிட்டியா?”
“இன்னும் இல்லைப்பா?”
“இந்த மகி பொண்ணு மாசமானதில் இருந்து நம்ம யாரையும் கவனிக்கிறதேயில்லை”
“ஹாங்… நாமதான் அவளை கவனிக்கணும்ப்பா”
“கரெக்ட்… ஆனால் அண்ணனுக்கு காபி தந்தியான்னு காமாட்சியிடம் கேட்கிறதில் என்ன பிரச்சினை?”
அவன் பதில் பேசும் முன்…
“அய்யா இதோ கொண்டு வந்திட்டேன்… தம்பி வந்ததே தெரியாதுங்கைய்யா. இப்பதான் பாப்பா சொல்லுச்சு. மன்னிச்சுகங்க” என்றபடி காபி கோப்பையை சுப்பு வைத்தாள்.
“ஒண்ணும் பிரச்சினையிலக்கா, நீங்க போங்க” என்று அவளை அனுப்பி வைத்து விட்டு காபியை அருந்த ஆரம்பித்தான்.
“அப்புறம் கோர்ட்டில் இன்னைக்கு என்னவானது?” அப்பா கேட்டார்.
அதிரதன் நிதானமாக காபியை பருகி விட்டு, ஒரு மூச்செடுத்து அவரை நேராக பார்த்து கேட்டான்.
“ஏன் உங்களுடைய நண்பர் உங்களுக்கு சொல்லவில்லையா?”
“எந்த நண்பர்…”
“ம்… இன்று மாலை பார்க்கில் வைத்து பேசிக் கொண்டிருந்தீர்களே. அவரைத்தான் சொல்கிறேன்”
அவன் சொன்னதை கேட்டு அப்பா அதிர்ச்சியடைவில்லை. உனக்கு தெரிந்து விட்டதா என்ற பார்வை மட்டும் பார்த்தார்.
“ஏன்ப்பா, இந்த அண்டர்கவர் ஆப்ரேஷன்…? அதுவும் எனக்கு எதிராக?”
“நோ…நோ… உனக்கு எதிராக இல்லை ரத்தன்… அதிதிக்கு சப்போர்ட்டாக செய்கிறேன்”