தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 09 - ஸ்ரீ
மாலை நேரம் மருத்துவமனையில் இருந்து கல்யாணியின் தம்பி அழைத்து வரப் பட்டிருக்க அவனைச் சென்று பார்த்து வரலாம் என்று எண்ணியவளாய் ஷியாமா வீட்டிற்குப் பின்னிருந்த கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றாள்.
கதவைத் தட்டிவிட்டு அவள் உள்ளே நுழைய பழைய இரும்புக் கட்டில் ஒன்றில் சுவற்றில் சாய்ந்தவாறு கால்களை நீட்டி அமர்ந்திருந்தவன் இவளைக் கண்டதும் கால்களை மடக்கி அமர்ந்து அவளை ஏறிட்டான்.
அதற்குள் கதவு திறந்த சத்தம் கேட்டு கல்யாணி உள்ளிருந்து வந்திருந்தார்.
“வாங்கம்மா..எதுவும் வேணுமா சொல்லிருந்தா நானே வந்துருப்பேனே..”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல இவருக்கு எப்படி இருக்குனு பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன்.”
“ஐயோ அவனை பார்க்குறதுக்கு நீங்க ஏன்..”
“ஏன் வரக் கூடாதா?!”
“ஐய்யையோ அப்படி சொல்லல மா நீங்க போய் இங்க எல்லாம் வந்துகிட்டுனு கேட்க வந்தேன்..பாருங்க உக்காரக் கூட ஒழுங்கா இடம் இல்லை..”
“பரவால்லக்கா பார்த்துட்டு நான் கிளம்புறேன்..”,என்றவள் அவனை ஏறிட மற்ற தினங்களைப் போல் அல்லாது இன்று அவன் முகத்தில் ஒருவிததயக்கம் இருந்தது.இருந்தும் என்னவென்பதை சரியாய் கணிக்க முடியவில்லை ஷியாமாவால்.
கல்யாணியை ஒரு நொடிப் பார்த்தவன் அமைதியாகி விட அவளே பேச்சை ஆரம்பித்தாள்.
“இப்போ எப்படியிருக்கு பரவால்லையா?”
“ம்ம்..”
“ஏன்டா உன்னை பார்க்கணும்னு அந்த பொண்ணு வந்துருக்கு வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டியா?”
“அக்கா பரவால்யில்லை விடுங்க நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும்..
டேக் கேர்..நான் வரேன்..”,என்றவள் எழுந்து கொள்ள அவசரமாய் அவளிடம்,
“ரொம்ப நன்றி உடனே வந்து உதவினதுக்கு..”
“இட்ஸ் மை ட்யூட்டி..வரேன்..”,என்ள் அங்கிருந்து கிளம்பி போர்டிகோ அருகில் வர மகிழனின் கார் சரியாய் உள் நுழைந்தது.
அத்தனை களைப்பையும் தாண்டிய கம்பீரமான முகத்தில் இவளை கண்டு இலகுவான சிநேகப் புன்னகை அவனிடத்தில்.
“ஹாய்..”