தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 04 - சாகம்பரி குமார்
தாதிபட்டி! அதுதான் அதிதியின் ஊர். அங்கு காலெடுத்து வைத்த அதிரதன் அந்த பூமியை ரசிக்க ஆரம்பித்தான்.
தமிழ் மரபின்படி அது மருத நிலம்… வயலும் வயல் சார்ந்த இடமாக இருந்தது. எங்கும் நெற்பயிர்கள் பச்சை பரப்பி நிற்க, அவை தென்றலுக்கு தலை சாய்த்து வருகை சொல்லும் அழகை காணும் கண்களுக்கு… தொலைவில் ஓங்கி உயர்ந்து அடர்ந்து நின்ற மரங்கள் அங்கிருக்கும் காட்டு பகுதியை சார்ந்தவை என்று தெரிவித்தன. அருகில் இருக்கும் சிறிய மலை, கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருந்தது. அந்த ஊருக்கான சிறிய ஓடைகூட அருகிலிருந்த மலைப்பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்தது. அந்த நீர்தான் வயல்களுக்கு பாய்ந்து கொண்டிருந்தது.
அந்த ஊர் குறிஞ்சி, முல்லை, மருதம் எனப்படும் மூன்று வகை நிலப்பரப்பையும்.. அதாவது மலை, காடு, வயல் என்ற அமைப்பை அருகருகே கொண்டிருந்தது.அதை பார்த்த அதிரதனுக்கு உள்ளுக்குள் ஒரு சந்தேகம் வந்தது.
அந்த கோர்ட் ஆர்டரின் வாசகப்படி பெட்டி படுக்கையுடன் புறப்பட்டு… அதிதியின் ஊரில் பத்து நாட்கள் கழித்தபின்… தென்னிந்தியாவில் இருக்கும் ஏதாவது ஒரு மலை வாசஸ்தலம் சென்று ஜாலியாக இயற்கையை அனுபவித்து விட்டு பிறகு காட்டு வாழ்க்கைக்காக வடஇந்தியாவின் கிர் வனப்பகுதிக்கு சென்று வரலாம் என்று அதீத உற்சாகமான பயணத் திட்டத்தை வைத்திருந்தான். ஆனால்...
இந்த ஊரின் அமைப்பு பற்றி அப்பாவிற்கு தெரியுமோ? தெரிந்தால்… இப்படியே அதிதி ஊரில் பத்து நாட்களை கடத்தி விட்டும் அப்படிக்கா ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று காட்டு பகுதிக்குள் திக்கு திசை தெரியாமல் அன்னம் தண்ணி இல்லாமல் வாழ்ந்து… அங்கிருந்து அறுபது டிகிரி கோணத்தில் உயர்ந்து செல்லும் கரடு முரடான மலைப்பாதையில் சென்று அத்துவானமாக இருக்கும் மலைப்பகுதிக்குள் அதிதியுடன் வாழ்ந்து… என்று டிசைன் செய்து விடுவாரே!
அதிரதனுக்கு ஜியாக்ரபிக் சேனலில் வரும் காட்சிகள் நினைவிற்கு வந்தன. பாம்பை பிடித்து நெருப்பில் வாட்டி… மீனை பச்சையாக தின்று… காட்டுக் கொடிகளை பிடித்து மலைக் குன்றுகளில் ஏறி… ஜில்லுன்னு அருவியில் குதித்து… கேம்ப் ஃபையரில் உறங்கி… ஐயோ… அதெல்லாம் முடியாது.. அதுக்கு வாய்ப்பேயில்லை…
அந்த மாதிரி அட்வென்சர் வாழ்க்கை அவனுக்கு வேண்டாம். அவன் வீர விருதா கேட்டான்.விவாகரத்துதானே கேட்டான்… கொடுத்துட்டு போங்கப்பா!.
அடிப்படையில் அதிரதன் அமைதியான ரகம். அதிலும் ஆராய்ச்சியாளனாக இருப்பதால்