அல்லவா? அப்புறம் சாப்பிட ஏதாவது இருக்கானு பார்க்கணும்”
“நான் நான்வெஜ் சாப்பிட மாட்டேன்…”
“அப்புறம் என்னத்தை சாப்பிட போறீங்க…? பாம்பு கறி… வௌவால் கறி… முயல் கறி…” அவன் முகம்போன போக்கை பார்த்து விட்டு,
“சும்மா சொன்னேன் சார். நானும் அதெல்லாம் சாப்பிட மாட்டேன். சைவம்தான்.. நமக்கு ஏற்றாற்போல பழங்கள்… கிழங்குகள்… கிடைக்குமான்னு பார்க்கலாம்” என்றபடி இறங்கினாள்.
அவனும் பரணிலிருந்து இறங்கினான். கையில் அரிவாளுடன் அவளும் இறங்கினாள். அரிவாளை மரத்தில் ஓங்கி அடித்து பதித்துவிட்டு திரும்பியவளை பார்க்கும்போது புலியை முறத்தால் விரட்டிய தமிழ் பெண் நினைவிற்கு வந்தாள்.
“இதுபோல மூணு கல்லுங்கள் வேண்டும். அடுப்பு வைக்க இதுதான் சரி.” என்றபடி தேடினாள். அவள் சொன்ன அளவில் மேலும் இரண்டு கற்களை அருகிலேயே தேடி எடுத்து விட்டான்.
“இது போதுமா அதிதி…”
“போதும். இங்கே வைத்து விடுங்கள்.”
“அதிதி… இங்கே பார் நமக்கு தேவையான குச்சிகள் இங்கேயே இருக்கு” என்றவன் பொறுக்க ஆரம்பித்தான்.
தரையில் குத்து காலிட்டபடி நகர்ந்து அவற்றை சேகரித்தவன்… தன்னிலையை எண்ணி பார்த்தான்.
' அவன் இருந்த நிலை என்ன? பார்த்த வேலை என்ன? இந்த அப்பா இப்படி குச்சி பொறுக்க விட்டு விட்டாரே…?'
“ப்ச்… சார் நீங்க இதை செய்யாதீர்கள். நான் பார்த்துக்கறேன். நீங்க அந்த அரிவாளை எடுத்துட்டு போய் அதோ அந்த மரத்தோட கிளைகளை வெட்டுங்க. அது காய்ஞ்சுபோய்தான் இருக்கு” என்றாள்.
'இது நல்லா இருக்கே… தன்மானத்திற்கு இழுக்கில்லாத வேலை…' என்று ஆர்வமாக அவன் மரத்தின் பதிய வைத்திருந்த அரிவாளை எடுக்க சென்றான்.
அப்போது….
“சார்…” என்று அவனை தாண்டிக் கொண்டு விரைந்த அதிதி அவனிடம் எதையோ சொல்லியபடி மூங்கில் படிகளில் விரைவாக ஏறினாள்.
“பாத்திரம் எடுக்கவா போகிறாய்..? என்று அவன் கேட்கும் முன் மரத்தில் ஏறி விட்டாள்.
குழப்பமாக அவளை பார்க்க…. அவளுடைய திகிலான பார்வையோ அவனையும் தாண்டி செல்ல.. திடுக்கிட்டு திரும்பினான். அங்கே…!