ஒரு காட்டெருமை…!. ஃபுல் சைஸ்… உருண்டு திரண்ட தசைகளை முறுக்கி… அதனுடைய முழு உயரத்திற்கும் நிமிர்ந்து… முழு நீளத்திற்கும் பின்னங்கால்களை பின் நோக்கி நீட்டி… முன்னங்கால்களை 'வெர்டிகளா'க தரையில் பதித்து… ‘வாடா… டேய்’ என்று சவால் விட்டபடி நின்றது.
முதல் பார்வையிலேயே அவனுக்கு புரிந்து விட்டது… அது போன ஜென்மத்து ரிவென்ஜை எடுக்கும் நோக்குடன் வந்திருக்கிறது என்று….
அதனுடைய போன ஜென்மத்தில் அவன் அதனை கொன்றானோ அல்லது அதை கொன்று வைத்ததை தின்றானோ… ! இதுவரை அவன் ஒரு காட்டெருமையுடன் சண்டையிட்டதில்லை! காட்டெருமை கறியை சாப்பிட்டதும் இல்லை… பிறகு எதற்கு இந்த கொலைவெறி!
அவனுக்குள் கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தனவே தவிர…. ஐம்புலன்களும் செயலிழந்து விட்டன. கிட்டதட்ட உறைநிலைக்கு சென்று விட்ட அவனுக்கு மூச்சு மட்டும் வந்து போயிற்று.
உடனடியாக திரும்பி சென்று மரத்தின் மீது ஏறலாம் என்றாலும் அவனுடைய கால்கள் பாறைபோல இறுகி நின்று நகர மறுத்தன. வாட் ஈஸ் நெக்ஸ்ட்?
அவனால் யோசிக்கவும் முடியவில்லை. இந்த அதிதி என்ன செய்கிறாள் என்றும் தெரியவில்லை! அவள் கொஞ்சம் தெளிவாக எச்சரித்திருக்கலாம்…. 'தற்காத்து தற்கொண்டார் பேணி'னு அவளை நம்பியிருக்க கூடாது. திடுதிடுன்னு ஓடி விட்டாளே!
கடவுளே… அவன் இதுவரை காட்டிற்கே வந்ததில்லை! இதற்கு முன் காட்டிற்குள் சென்றதுகூட பாதுகாப்பான ஜீப்பில்தான்… அப்போதும் மிருகங்களை பார்க்கவில்லை…
ஒரே ஒரு சமயம் ஜெனிவாவில் இருக்கும் திறந்தவெளி மிருககாட்சி சாலைக்கு சென்றிருக்கிறான். அப்போது விலங்குகளை பார்த்திருக்கிறான்…. அதிலும் இதுபோல ஒரு காட்டெருமையை நேருக்கு நேர்… இவ்வளவு குளோஸ்-அப்பில் பார்த்ததில்லை!
இப்போது என்ன செய்வது? அவன் மூச்சை பிடித்துக் கொண்டு அசையாமல் நிற்க… இரண்டொரு நொடிகளோ… இரண்டு மணித்துளிகளோ… அவனுக்கு இதயத்தின் 'லப்டப்' மட்டும் காலம் கடந்து கொண்டிருப்பதை உணர்த்திக் கொண்டிருந்தது.
ஏதோ ஒரு நொடியில் அலைபாய்ந்து கொண்டிருந்த அதிரதனுடைய பார்வை நிலைபட்டது. அவனும் எருமையும் கண்ணோடு கண் நோக்கினார்கள்… வாட் எ மிரக்கிள்!
சட்டென அந்த காட்டெருமை திரும்பி நடந்தது.
அவனுடைய தீட்சண்யமான பார்வைக்கு(?) பயந்து அது ஓடி விட்டதா?