இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் உணவை முடித்துக் கொண்டு பரணிற்கு சென்றார்கள். சூரியன் மேற்கு வானில் மறைய, சந்திரன் கிழக்கு வானில் தோன்ற ஆரம்பித்தது. வானம் வர்ணகோலங்கள் வரைந்திருந்திருந்தது.
“ம்… இத்தோட சூரியனுக்கு ஓய்வு… அது தூங்க போயிடும். இனிமே நிலாதான் ட்யூட்டி பார்க்கும்”
“ஓகே! நீ கவிதையாக சொல்றேன்னு நினைக்கிறேன். அதனால் பூமிக்கு அந்த பக்கம் சூரியன் உதிக்க ஆரம்பிக்குமே என்று கேட்க தோன்றுவதை விட்டு விடுகிறேன்.. சூரியனுக்கு ஓய்வு இருக்கிறதோ இல்லையோ பகலெல்லாம் உழைத்தவர்களுக்கு ஓய்வு தரும் இரவு வந்து விட்டது. சூழ இருக்கும் மெல்லிய ஒளி கலந்த இருள் கண்களை வருடி உறக்கம் வர செய்யும்.”
“ஆஹஹ்ஹா.. ஒரே ஒரு கிழங்கை பிடுங்கி… ஒரு குடம் தண்ணீரை எடுத்து… கொஞ்சம் மரக்கட்டையை சேகரித்து… எவ்ளோ வேலைகள் பார்த்தோம். களைச்சு போயிட்டோம்ல தூங்க வேண்டியதுதான்.” அதிதி சிரித்தாள்.
“எப்படிப்பட்ட சொர்க்கத்தில் இருக்கிறோம்…. நடுகாடு… அதுக்கு நடுவில ஒரு பெரிய மரம்… மரத்தில ஒரு பரண்.. கொஞ்சம்போல எரியும் தீப்பந்தம்… அப்படியே ‘லாலான்னு’ பாடிட்டே தூங்க வேண்டியதுதான்.”
“பாட தேவையில்லை சார். இன்னும் கொஞ்ச நேரத்துல காட்டின் ஓசைகள் கேட்க ஆரம்பித்து விடும். தவளைகள் கத்தும்… சில்வண்டு ரீங்கரிக்கும்… ஓநாய்கள் உறுமும்… சமயத்தில் யானைகூட பிளிறும்… புலி…”
“என்னது இங்கே புலி இருக்கா?.”
“சும்மா சொன்னேன். புலி கிடையாது. பயப்படத்தான் இந்த இடம் என்று இல்லை. கூட்டமாக மின்மினி பூச்சிகள் பறக்கும்போது வெளிச்சம் போடும். பார்க்க அழகாக இருக்கும்”
“நம்புறேம்மா… நல்லா இருப்போம்” என்றபடி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
“அதிதி அந்த அடுப்பு நெருப்பு இரவுவரை வருமா?”
“கரெக்டா அளவு பார்த்து போட்டிருக்கேன். இடையில் ஒருமுறை இந்த கட்டைகளையும் போட்டு விடுகிறேன். நெருப்பு இல்லைனா பூச்சிகள் பறந்து வந்துடும். கரடி… காட்டெருமைகூட வரலாம்.”
“நீ கீழே போகாதே. நான் நெருப்பு அணையாமல் பார்த்துக்கறேன்”
“உங்களுக்கு உறக்கம் கெட்டு விடும் சார்”