சம்மதிக்கவில்லை.
அவனை அங்கிருந்து போலீஸ் அழைத்து செல்லும் போது எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று எண்ணி எண்ணி அவமானத்தில் குறுகி போனான். அந்த காபி ஷாப் செல்வதையே அவன் நிறுத்தி விட்டிருந்தான். அவன் அம்மாவிடம் சொல்லி ஒரு முறை அவன் அழுத போது லட்சுமி தான் அவனை சமாதானம் செய்து அந்த பெங்களூரு கம்பெனியில் சென்று சேர வைத்தார்.
அப்போதும் அவர் சொன்னது இது தான், "சத்யா நீ தப்பானவன் இல்லை. நீ தப்பான நோக்கத்துல பேசவும் போகல. இதெல்லாம் எனக்கு புரியுது. ஆனா அந்த பெண்ணின் சூழ்நிலையில் இருந்து பார்த்தால் மட்டும் தான் அந்த பெண் அப்படி ஏன் நடந்துக்கிட்டானு தெரியும். அவளோட சூழ்நிலை என்னனு தெரியாம கோவப்படாத சத்யா. உன் அவமானத்துக்கு நீயோ அந்த பெண்ணோ காரணமில்லை. விதி. இந்த விஷயத்தை இதோட விட்டுட்டு உன் எதிர்காலத்தை பத்தி யோசி. அதுல கவனம் செலுத்து".ஆனாலும் அவனால் பவித்ரா செய்ததற்கு எந்த ஒரு நியாயமான காரணத்தையும் கற்பிக்க முடியவில்லை. அவன் மனதில் பவித்ராவின் மேல் கோபம் மட்டும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
அவள் ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இந்த அவமானம் அடி இதெல்லாம் அவனுக்கு கிடைத்திருக்காது. இது மட்டுமே அவன் மனதில் பதிந்து போனது. அவன் சாதாரணமாகத்தான் பேச முயன்றான். அப்படி என்ன கீழ்த்தரமாக நான் பேசினேன், எதுவுமே இல்லையே, இதை அவள் அந்த போலீஸிடம் சொல்லியிருந்தால் போதுமாயிருக்கும் ஆனால் அவள் செய்தது?
பெங்களூரில் வேலையில் சென்று சேர்ந்தாலும் இவளை பற்றி நண்பர்கள் மூலம் விசாரித்து கொண்டே இருந்தான். அவள் இந்த ஆடிட்டிங் கம்பெனியில் வேலையில் சேர்ந்ததை அறிந்தான்.
சில மாதங்களுக்கு முன் அவனது தந்தை சுந்தரம் மாரடைப்பால் காலமானார்.அவன் லக்ஷ்மியை பெங்களூருக்கே அழைத்து சென்றிருக்க முடியும் ஆனால் அவன் சென்னையிலே அவன் தாயுடன் தங்குவதற்காக அந்த வேலையை விடுவதாக சொல்லி அந்த பெங்களூர் வேலையை உதறிவிட்டு இந்த கம்பனிக்கு வந்தான்.
"சத்யா சத்யா" அவன் அம்மாவின் அழைப்பில் அந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தான் சத்யா.
"சாரி மா. கால் வலிக்குதா? "என்றவன் எழுந்து அமர, "அதெல்லாம் இல்ல. இந்த பாலை குடிச்சிட்டு போயி படு. வெறும் வயித்தோட படுக்க வேண்டாம்' என்றவர் அந்த பாலை எடுத்து அவன் கைகளில் கொடுத்தார்.
"சத்யா எதுவும் யோசிக்காத. போயி படு. காலைல எழுந்ததும் மனசு கொஞ்சம் தெளிவாகும், எதுவா இருந்தாலும் அதுக்கு அப்பறம் முடிவு பண்ணிக்கலாம்." லட்சுமி சொல்ல தலையசைத்தவன் கட்டிலில் சென்று விழுந்தான். ஆனால் உறக்கம் தான் அவனிடம் இருந்து தூர விலகி சென்று கொண்டிருந்தது.
தொடரும்