தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 16 - சித்ரா. வெ
முதல் இரண்டு நாட்கள் தான் கல்லூரி அனுபவம் நித்யாவிற்கு பதட்டத்தையும் படப்படப்பையும் கொடுத்தது. அடுத்து அது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக அவளுக்கு மாறியிருந்தது.
ஆனால் பள்ளி காலத்தில் ஆங்கிலம் அவளுக்கு கஷ்டமான பாடம் என்பதால் படிப்பு மட்டும் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதையும் அவளுக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்க கல்லூரியில் ரமாவும் அவளுடன் உடன்பயின்ற ஷீபாவும் உதவினார்கள். வீட்டில் கார்த்திக் அவளுக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்தான். அதனால் அதுவும் பிறகு அவளுக்கு சிரமமாக தெரியவில்லை. இதில் பேருந்து பயணம் தினம் தினம் அவளுக்கு புது அனுபவமாக இருக்க, அது கூட அவளுக்கு சிரமமாக தெரியவில்லை. அதனால் அவளும் முன்போல் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வந்தாள்.
அன்று கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் குறிஞ்சியம்மாள் அவளை அழைத்தார். அவள் அருகில் வந்து அமர்ந்ததும், "நித்திக் கண்ணு, இனி வீட்டு நிர்வாகத்தையும் நீதான் பார்த்துக்கணும்," என்று அவர் சொல்ல,
"ஏன் பாட்டி, நீங்க தான் சூப்பரா பார்க்கறீங்களே, அப்புறம் நான் எதுக்கு? கொஞ்ச நாள் போகட்டும்," என்று அவள் பதில் கூறினாள்.
"பாட்டிக்கும் வயசாகுதுல்ல, நீயும் உன்னோட அம்மாவும் இந்த வீட்டுக்கு வந்ததும் அவளை தான் வீட்டு நிர்வாகத்தை பார்த்துக்க சொன்னேன். ஆனா அவ கார்த்தி பொண்டாட்டி வந்து எல்லாம் பார்த்துப்பாம்மா, அதுவரை நீங்க பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டா, இப்போ நீதானே கார்த்தியோட பொண்டாட்டி. அதனால நீதான் எல்லாம் பார்த்துக்கணும், என்ன புரிஞ்சுதல்ல," என்று கேட்டதற்கு, அவளும் சரியென்று தலையாட்டிக் கொண்டாள்.
பின் குறிஞ்சியம்மாள் கணக்குகள் எழுதி வைக்கும் நோட்டுப் புத்தகத்தை எடுத்து, "குறிப்பிட்டு இதுக்குள்ள இருந்து இதுக்குள்ள தான் நம்ம வீட்டுக்கான செலவு ஆகும், இது நம்ம வீட்டில் வேலை செய்றவங்களுக்கு கொடுக்கும் சம்பளம், இது பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு ஞானசெல்வமும் ஒரு நிர்வாகி என்பதால், அந்த கோவிலில் விஷேஷ நாளில் செய்யப்படும் பூஜை நம்ம தலைமையில் தான் நடக்கும், அதுக்கு கொடுக்க வேண்டிய தொகை. அப்புறம் இது கரண்ட் பில், வீட்டு வரி, தண்ணி வரி இதுக்கெல்லாம் ஆகும் செலவு." என்று சொல்லிக் கொண்டே வந்தவர்,
"அப்புறம் இதுதான் ரொம்ப முக்கியம், கார்த்தி அவனோட அம்மா பேர்ல ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிச்சு, அது மூலமா நிறைய பேரோட படிப்பு செலவை பார்த்துக்கிறான். ஆரம்பத்தில் பத்து பேரோட படிப்பு செலவுக்கு உதவினோம், இப்போ இந்த வருஷம் 50 பேரோட படிப்புக்கு