அதன்படி விடுமுறை விட்டதுமே தினமும் காலையில் அவளுக்கு வண்டி ஓட்ட கற்றுக் கொடுத்தான். அந்தநேரத்தில் என்ன வேலையிருந்தாலும் அவளுக்காக அதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்வதாக சொல்லிவிடுவான். அதனால் அவளும் வண்டி ஓட்டுவதை வெகு விரைவில் கற்றுக் கொண்டாள்.
பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தையும் விரைவிலேயே அறிந்துக் கொள்வதற்கும் புரிந்துக் கொள்வதற்குமான திறன் நித்யாவிடம் அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் அவளிடமிருந்த கூச்ச சுபாவம் தான் எதையும் தெரிந்துக் கொள்வதற்கு முடியாமல் ஒரு பெரிய தடைக் கல்லாக இருந்தது. இப்போது அதை அவளிடமிருந்து அகற்றும் முயற்சியில் கார்த்திக் இறங்கியதால் அவள் ஒவ்வொன்றிலும் முன்னேற்றத்தை மட்டுமே வளர்த்துக் கொண்டு வருகிறாள்.
மிக விரைவிலேயே கார் மற்றும் இருச்சக்கர வாகனத்தை ஓட்ட கத்துக் கொண்ட அவளுக்கு கார்த்திக் லைசென்ஸும் வாங்க ஏற்பாடு செய்துவிட்டான். அதுவும் அவள் கைக்கு வந்தபோது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
ஒருநாள் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை, "பாட்டி இன்னைக்கு கோவிலுக்கு நான்தான் கார் ஓட்டிட்டு வரப் போறேன். நீங்களும் அம்மாவும் என்னோட தான் வரணும்," என்று அவள் குறிஞ்சியம்மாளிடம் கூற,
"அய்யய்யோ, நாங்க ட்ரைவரோடவே போறோம், நீ ஒன்னும் கார் ஓட்டிக்கிட்டு வர வேண்டாம் சும்மா இரு." என்று வஞ்சி அவளை தடுக்கப் பார்த்தார்.
"அம்மா இப்படி சொன்னீங்க, அப்புறம் உங்களை ஸ்கூட்டில கூட்டிட்டுப் போவேன் பார்த்துக்கோங்க," என்று மிரட்டினாள். ஏனென்றால் வஞ்சிக்கு இருச்சக்கர வாகனத்தில் செல்வதென்றால் மிகவுமே பயம். நடந்தே செல்வதென்றாலும் செல்வாரே தவிர, இருச்சக்கர வாகனத்தில் மட்டும் செல்லமாட்டார். அதை வைத்து தான் நித்யா அவரை பயமுறுத்தினாள்.
"ஹே வேணாம் நித்தி, அதுக்கே காரே பரவாயில்லை," என்று அவர் பயத்தோடு சொல்ல,
"அத்தை ஏன் பயப்பட்றீங்க, நித்தி இப்போ சூப்பரா வண்டி ஓட்றா தெரியுமா! பேசாம டெய்லி நித்தி கார் ஓட்ட அவக்கூடவே நான் ஆஃபிஸ்ல போய் இறங்கிக்கலாம்னு பார்க்கிறேன். நீங்க என்னடான்னா இப்படி பயப்பட்றீங்க," என்று வஞ்சியிடம் அவன் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில்,
"சூப்பர் மாமா, அப்போ நானே உங்களை கூட்டிட்டுப் போறேன்." என்றவள், "பெரிய மாமா நீங்களும் எங்களோடவே வாங்க," என்று ஞானசெல்வத்தையும் அழைக்க,