"கேலி செய்றேனா? உண்மையாகவே நீ பாடினது சூப்பரா இருந்துச்சு நித்தி. அழகா பாட்ற, பாட்டு கத்துக்கிட்டீயா என்ன?"
"நான் எங்க பாட்டெல்லாம் கத்திகிறது. ஸ்கூல் படிக்கும் போது வாரத்தில் ஒரு பீரியட் மியூசிக் கிளாஸ் இருக்கும், அதில் பாட்டு மிஸ் கத்துக் கொடுத்ததை வச்சு எப்போதாவது பாடுவேன் அவ்வளவு தான்,"
"ஆனா நீ பாடிக் கேட்டதே இல்லையே நித்தி?"
"அது யாராச்சும் ஆள் இருந்தா நான் பாடமாட்டேன், குரலை கேலி செய்வாங்களோன்னு நினைச்சு தான் பாட மாட்டேன். ஆனா தனியா இருக்கும் போது இப்படி சும்மா ஏதாவது சினிமா பாட்டு பாடுவேன்."
"இன்னும் நீ முழுசா சரியாகவே இல்ல போல, சாதாரணமா முனுமுனுக்கும் பாட்டை கூட ஆளில்லன்னா தான் செய்வீயா?"
"ம்ம் அது சில விஷயத்தில் அப்படித்தான், மாறணும்னு நினைச்சாலும் மாற முடியறதில்ல, ஆனா இனி மாத்திக்கிறேன் மாமா."
"இனி நைட்ல நீ பாட்டு பாடணும், நான் கேட்டுட்டே தூங்கணும் சரியா?" என்று அவன் கேட்க,
"அய்யோ மாமா, அதெல்லாம் என்னால முடியாது." என்று அவள் அவசரமாக மறுத்தாள்.
"ம்ஹூம் அதெல்லாம் கிடையாது, நீ டெய்லி பாடணும், அப்போ தான் கொஞ்ச நஞ்ச தயக்கம் கூட உன்னை விட்டுப் போகும்," என்று சொல்ல, அவளோ அவனை காதலாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன மாமாக்கிட்ட ஐ லவ் யூ சொல்லப் போறீயா? சொல்ல தயக்கமாக இருந்தால், பேசாம பாட்டாவே படிச்சிடு." என்று அவன் கேலி செய்ய,
"ம்ம் நீங்க ஏதாவது பெருசா செய்ங்கன்னு சொல்லியிருக்கேன் இல்ல, அப்போ நீங்க கேட்டதை சொல்றேன்." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியே சென்றுவிட்டாள்.
இருவரின் வாழ்க்கையும் இனிமையாக சென்றுக் கொண்டிருந்தது. அவளின் சின்ன சின்ன ஆசைகளை கூட அவன் நிறைவேற்றினான். இரண்டாம் வருட இறுதி விடுமுறையில் ஊட்டிக்கு அழைத்துச் சென்றான். மூன்றாம் வருட படிப்பு முடிந்ததும் கொடைக்கானல் கூட்டிக் கொண்டு போவதாக சொல்லியிருந்தான்.
ஒருபக்கம் அவள் படிப்பிலும் அவன் வேலையிலும் கவனம் செலுத்த, இருவருக்குமான ஓய்வு நேரங்களில் தம்பதியாராக காதலித்துக் கொண்டிருக்க, நித்யா இறுதி ஆண்டின் பாதியில் வந்துவிட்டிருந்தாக். அவள் பட்டம் வாங்குவதற்கு இன்னும் ஆறுமாசம் மட்டுமே இருக்க, அந்தநேரம் இருவருமே எதிர்பார்க்காதது போல் நித்யா கருவுற்றாள்.
இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்தியாயங்களில் கதை முடிவுறும்.
தொடரும்..