அவனுக்கு யோசிக்க நேரம் தேவைபடுகிறது என்பதை புரிந்து கொண்ட ரஞ்சன் அமைதியாக தாத்தா வீட்டை நோக்கி காரை ட்ரைவ் செய்தான்.
கார் வயல்வெளியை கடந்து மலைப்பாதையில் நுழையும் பொழுது சத்தியன் ரஞ்சனிடம் காரை நிறுத்தும்படி சைகை செய்தான். அதை கவனித்த ரஞ்சன் சாலையோரமாக மரத்தின் அடியில் நிறுத்தினான்.
"என்ன செய்யப் போகிறாய்?" என்றான்.
"இந்த இடத்தில் அமைதியாக டிஸ்கஸ் பண்ணலாம்"
ரஞ்சன் எஞ்சினை அணைத்து விட்டு சத்தியன் சொல்வதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.
" ரஞ்சன், இப்பொழுது நமக்கு ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. மீராவின் மெடிக்கல் ரிப்போர்ட் போலியாக தயாரிக்கப்பட்டு உள்ளது. அதில் இருந்த குறிப்புக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லை. அதாவது அவள் நல்ல ஆரோக்கியமாகதான் இருந்திருக்கிறாள். என்னுடைய ஊகப்படி அவள் நலமாக எங்கேயோ இருக்கிறாள் என்பது தெரிகிறது. அதேபோல அந்த ரிப்போர்ட்டை அவளுடைய அம்மாவிடம்தான் தந்திருக்கிறார்கள். எனக்கு மீராவின் அம்மாவிடம் நம்பிக்கை கிடையாது. ஏனெனில் மீரா காணாமல் போன பிறகு அதற்காக அவர்கள் வருத்தப்படவில்லை. அதுபற்றி வெளிக்காட்டவும் இல்லை. ஆனால் அவளுடைய தங்கையை எனக்கு திருமணம் செய்து வைப்பதில் மும்முரமாக இருந்தனர். எனக்கு அது ஒரு சந்தேகமாக உள்ளது மீராவிற்கு பதில் அவள் தங்கையை என்னுடன் சேர்த்து வைக்க நினைத்திருக்கிறார்கள்"
"கரெக்ட்… போலியான மெடிக்கல் ரிப்போர்ட்டை காட்டி மீராவை குழப்பி இருக்கலாம். ஆனால் அவங்க ஏன் இப்படி செய்ய வேண்டும்?. மகளுக்கே துரோகம் செய்வார்களா என்ன?"
"அதைதான் விசாரிக்க வேண்டும். மீராவின் வீட்டில் இதை நேரடியாக சென்று விசாரிப்பதைவிட… மறைமுகமாக உண்மையை கண்டு பிடிக்கலாம் என்று தோன்றுகிறது."
"ஏன்?"
"நாம் யார்… எவ்வளவு பலமான ஆட்கள்… என்று தெரிந்தும் நம்மிடம் ஒரு மோசமான விளையாட்டை விளையாடி இருக்கிறார்கள். அவர்களை தப்பிக்க விடக்கூடாது"
"எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது சத்யன். அந்த பஸ் விபத்து… அதற்கும் மீராவிற்கும் இருக்கும் தொடர்புபற்றி ஆராய வேண்டும். உனக்கு உடல்நிலை சரியில்லாததால் அதை அப்படியே நிறுத்தி வைத்து விட்டேன். போலிஸ் ரெக்கார்ட்படி மீரா இறந்து விட்டாள்.