நினைத்தானோ? அவளை விட்டு விலகினான்.
இத்தகைய முரட்டுத்தனத்தை அவள் வீட்டினரிடம் கண்டதில்லை. அனைவரும் அவளிடம் பாசம் காட்டியே அவள் உணர்ந்திருக்கிறாள்.
‘இத்தகைய முரடனுடன் எப்படி வாழ முடியும்? ஏன் ஜாதகம் அது இதென்று என் வாழ்க்கையை இவனுடன் பிணைக்கப் பார்க்கிறார்கள்? ஜாதகம் பொருந்தியிருந்தால் போதுமா? மனப் பொருத்தம் வேண்டாமா?‘
அவளுக்கு நினைக்க நினைக்க மலைப்பாக இருந்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனால் அவன் முன்னால் அழுது அசிங்கப்பட அவள் விரும்பவில்லை. வாழ்க்கையில் முதன் முதலில் தோல்வியை சந்திக்கிறாள். இப்போதைக்கு திருமணத்தை பற்றி யோசிப்பதை விட இவனிடம் இருந்து எப்படி தப்பிச் செல்லலாம் என்று யோசிப்பதுதான் புத்திசாலித்தனம் என்று அவளுக்குப் புரிந்தது.
அவன் அவளை விட்டு விலகினாலும் அவளை முறைத்தவாறுதான் நின்றிருந்தான்.
அவள் பார்வை அப்போது அவன் கைப்பேசியில் அழைப்பு வர அவளை முறைத்தவாறே எடுத்துப் பேசினான்.
அவள் அப்படியே தப்பித்துச் சென்றுவிடலாம் என்று நினைத்து தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து மெல்ல எழுந்தாள்.
“உட்காரு.” என்றான் அதட்டலாய்.
பேசி முடித்துவிட்டான் போலும். மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள்.
இப்படி மிரட்டுகிறவனோடு எப்படி அவளால் மனமொத்து வாழ முடியும்?
மீண்டும் திடத்தை வரவழைத்துக்கொண்டு பேச எண்ணினாள்.
“பிடிக்காமல் இரண்டு பேர் எப்படி வாழ முடியும்?” தைரியத்துடன் பேச எண்ணினாலும் முணுமுணுப்பாகத்தான் குரல் வெளி வந்தது.
“என்ன சொன்னே?” மீண்டும் அதட்டலான குரலில் பேசியவனை நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.
அவள் முணுமுணுப்பாகப் பேசினாலும் அவன் அவள் அருகேதான் இருக்கிறான். அவன் காதில் விழுந்திருக்கத்தான் செய்யும். இருந்தாலும் காதில் விழாதது போலவே கேட்கும் அவனை என்ன செய்தால் தகும்?
“நான் கிளம்பறேன்.” மீண்டும் முணுமுணுத்தாள்.
“நான் உன்னை உட்காருன்னு சொன்னேன். உன்னைப் போக சொல்லலை.”
‘ஓ. மகாராஜா அனுமதி கொடுத்தால்தான் நான் நகர முடியுமோ?’
வரவேற்பறையில் இருந்த பெண் உள்ளே நுழைந்தாள்.