(Reading time: 21 - 41 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

தினம் அவனிடம்தான் மாட்டிக் கொண்டு விழிக்க வேண்டும். தப்பிக்க வழியே இருக்காதே. உள்ளங்கள் ஒன்றுபட்டு திருமணம் நடந்தால்தானே அந்த வாழ்க்கை நன்றாக இருக்கும். இவனுடான வாழ்வு போராட்டமாகத்தானே இருக்கும்.

அவள் காரில் இருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். இன்னும் அவன் கை தன் கன்னத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற அழுத்தத்தை உணர்ந்தாள். கன்னம் சிவந்தது போல் அவளுக்குத் தோன்றியது.

கன்னத்தின் வலியை விட மனதில் அதிகமாய் வலித்தது. அவள் இதுநாள் வரை தன்னுடைய வருங்கால கணவன் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று எந்த கற்பனையையும் வளர்த்துக்கொள்ளவில்லை.

அவளுடைய அன்னையின் வார்த்தையில் உள்ள உண்மையும், அவள் மனதில் உள்ள பயத்தையும் அவள் நன்கு உணர்ந்திருந்தாள். எத்தனையோ தலைமுறையாக பெண் வாரிசு இல்லாமல் அவள் பிறந்திருக்கிறாள் என்று குடும்பமே கொண்டாடுவதை அவள் நன்கு உணர்ந்திருக்கிறாள். தன்னுடைய வாழ்க்கையை பற்றி அவர்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள் என்று அவள் நன்குணர்வாள். அதனால் அவர்களின் மனதை உடைத்துப் போடும் தைரியம் அவளுக்கு வரவில்லை.

அத்துடன் அவள் மனதைக் கவரும் அளவிற்கு அவள் யாரையும் இதுவரைக்கும் பார்த்ததில்லை. ஒருவேளை வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவள் ஆழ்மனம் ஏற்றுக்கொண்டதோ என்னவோ? அவள் மனம் இதுநாள் வரையிலும் தடுமாறியதில்லை.

அவள் இங்கே உள்ளூரில் படிக்கும்போது அவள் யார் வீட்டுப் பெண் என்று எல்லோருக்குமே தெரியும். அதனால் இளைஞர்கள் யாருக்கும் அவளை நெருங்கி வரும் தைரியம் இருந்ததில்லை. அவளும் அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வருமளவிற்கு நடந்துகொண்டதில்லை.

ஆனால் சென்னையில் அவளிடம் சில இளைஞர்கள் காதல் சொல்லிக்கொண்டு நெருங்கத்தான் செய்தனர். ஆனால் அவள் நாசூக்காக அவர்கள் மனம் வருந்தாமல் தனது மறுப்பைத் தெரிவித்துவிட்டாள்.

ஆனால் அவள் காதல் என்ற உணர்வை தான் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் திருமணத்திற்குப் பிறகு கணவனைக் காதலிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள்.

இவனை அவளால் என்றுமே காதலிக்க முடியாது என்றுதான் அவளுக்குத் தோன்றியது.

காரை நேரே வீட்டிற்கு ஓட்டினாள். எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்றே தெரியாது. நேரே தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் இந்த நேரத்தில் வீட்டிற்கு வந்ததை வேறு யாரும் அறியவில்லை. ஆனால் வளர்மதி கவனித்துவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.