வளர்மதிக்கு மகளின் கண்களில் கண்ணீரைக் கண்டதும் மனம் துடித்தது. ஆனால் கொஞ்சம் இரங்கினாலும் அவள் தலை மேல் ஏறி விடுவாளோ? அவளுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். அதற்காகத்தானே அவர்கள் போராடுகிறார்கள். தவமாய் தவமிருந்த பெற்ற மகள். அவள் வாழ்வு பாழாக விடுவதற்கு அவர்களால் எப்படி முடியும்?
மகள் திருமணத்தை மறுக்கிறாள் என்றால் அவள் யாரையும் காதலிக்கிறாளா? தான் இத்தனை சொல்லியும் அவள் தடம் மாறிவிட்டாளா?
மகளை கட்டிலில் அமர வைத்துத் தான் அருகில் அமர்ந்தாள்.
“இதப்பாரு லட்சுமி. உனக்கு மாப்பிள்ளையை ஏன் பிடிக்கலை? வேறு யாரையும் மனசில் வச்சிருக்கியா?” மனதில் பதட்டத்தை மறைத்துக்கொண்டு குரலில் நிதானத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள்.
“இல்லைம்மா. அப்படி யாரையும் என் மனசுக்குப் பிடிக்கலை.” மகள் அப்படி கூறவும்தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. மற்ற காரணம் எதுவாக இருந்தாலும் மகளை சமாதானப்படுத்திவிடலாம்.
“அப்புறம் இந்தக் கல்யாணம் வேணாம் என்பதற்கு வேறு என்ன காரணம்?”
“அவருக்கு என்னைப் பிடிக்காதும்மா.” என்றாள்.
அதைக் கேட்டதும் வளர்மதிக்கு சிரிப்பு வந்தது.
“அவருக்கு உன்னைப் பிடிக்காதுன்னு உனக்கு எப்படி தெரியும்?”
“எப்படியோ தெரியும்மா? இந்தக் கல்யாணம் வேண்டாம்மா.”
“அச்சாணியமா இப்படி பேசாதே லட்சுமி. நான் என்னவோ ஏதோன்னு நினைத்து பயந்துட்டேன். மாப்பிள்ளைக்கு உன்னைப் பிடிக்கலைன்னு உன்கிட்ட சொன்னாரா?”
அவள் மௌனமாக இருந்தாள்.
“உனக்கு ஏன் மாப்பிள்ளையைப் பிடிக்கலை?”
“அம்மா. நான்… இல்லை… என்னை.” என்று இழுத்தாள்.
“சொல்லு.”
“அம்மா உனக்கு ஞாபகம் இருக்கா? நான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறப்போ ஒரு நாள் அவன் காரை ஓட்டிட்டு வந்து விட்டானே அது நினைவிருக்கா? அவன் அப்ப என்னைப் பத்தி என்ன சொன்னான்? அவனுக்கு அப்பயிருந்தே என்னைப் பிடிக்காதும்மா. அவன் உங்ககிட்ட ஏதோ சொன்னதுனால்தானே நீங்க என்னை நம்பாமல் என்கூட பள்ளிக்கூடம் வரைக்கும் வந்து விட்டுட்டு வந்தீங்க.” என்றாள் கண்ணீருடன்.
அவள் அப்படிப் பேசியதும் ஒருகணம் வளர்மதியின் முகம் மாறியது. கோபம் போல் தோன்றி மறைந்தது.