நடந்ததை சொன்னதும் நாங்க துடிச்சுப்போயிட்டோம். இன்னிக்கு நீ எங்களுக்கு முழுசா கிடைச்சிருக்கேன்னா அதுக்கு அவர்தான் காரணம். அப்போதே அவர் உன்னைக் காப்பாற்றியிருக்கார். அவர் உன்னை நல்லா கவனிச்சுக்குவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் அவர் உங்கள் மகள் என்னோட சம்பாத்தியத்தில் வாழனும்னு மாப்பிள்ளை சொன்னதும் எங்களால் அதை ஒத்துக்க முடிந்தது.”
‘ஓ. அதுவேறு நடந்திருக்கா?’
“அம்மா. அவர் சொன்னதை மட்டும் நம்பி நீங்க அந்த டிரைவரை சந்தேகப்படறீங்களா?” என்றாள் கவனமாய்.
‘அவனுக்குத்தான் தன்னைப் பிடிக்கவில்லையே. அவன் ஏன் தன்னைக் காப்பாற்ற வேண்டும்? ஒருவேளை அவன் அந்த ஓட்டுநர் மீது அப்போதே பழியைப் போட்டு தன்னை நல்லவனாகக் காட்டிக்கொண்டானா?’
“அவர் எதற்காக அப்படி நடந்துகொள்ளப்போகிறார்? அவனை மாப்பிள்ளை அடித்துவிட்டேன் என்று சொன்னாலும் உன் அப்பாவும், சித்தப்பாவுக்கும் அது போதவில்லை. அப்போதே அவனைத் தேடிப்போய்விட்டனர். அவன் மருத்துவமனை போகுமளவிற்குத்தான் மாப்பிள்ளை அடித்து நொறுக்கிவிட்டார். அவன் ஹாஸ்பிட்டலில் இவங்களை எல்லாம் பார்த்த உடனே காலில் விழுந்து கதறிவிட்டானாம். தெரியாமல் தப்பு செஞ்சுட்டதா சொல்லி கெஞ்சியிருக்கிறான். இனி இந்த ஊரில் இருக்கக்கூடாதுன்னு மிரட்டிட்டு வந்திருக்காங்க. அவனும் ஊரைவிட்டுப் போயிட்டான்.”
அவள் அமைதியாக இருந்தாள்.
“போடாம்மா. போய் அமைதியா யோசிச்சுப் பாரு. மாப்பிள்ளை ரொம்ப நல்லவரு. அவர் வளர்ந்த விதத்தால் பார்க்க கொஞ்சம் கடுமையா இருக்கார். பலாப்பழம் கூட பார்க்க கரடுமுரடாதான் இருக்கும். ஆனால் அதன் சுளை இனிப்பா இருக்கிற மாதிரி மாப்பிள்ளை நல்லவர். நீ தேவையில்லாமல் குழப்பிக்காமல் போய் நிம்மதியா இரு.” என்றாள்.
மகளின் தலையை தடவிக்கொடுத்தவள் அவள் யோசிக்கட்டும் என்று சென்றுவிட்டாள்.
மகாலட்சுமியும் யோசனைக்குள்ளானாள்.
“லட்சுமிம்மா.”
வேலைக்காரப் பெண் அவளை அழைத்துக்கொண்டே கதவைத் தட்டினாள்.
கதவைத்திறந்தவள் “என்னக்கா?” என்றாள்.
“மாப்பிள்ளையோட மாமா வந்திருக்காங்க. அம்மா உங்களை அழைச்சுட்டு வரச் சொன்னாங்கம்மா.”
“சரி வர்றேன்க்கா.” என்றவள் குளியல் அறைக்குள் சென்று முகத்தைக் கழுவித்துடைத்துக்கொண்டு கிளம்பினாள்.
“வாங்க சித்தப்பா.”