தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 17 - சகி
அவன் சென்றுவிட்டான்...
எவ்வளவோ வற்புறுத்தியும் இங்கு இருக்கப் போவதில்லை என்று தீர்மானமாய் அங்கிருந்து சென்றுவிட்டான் உடையான். எல்லாம் இந்தப் பாழாய் போன உண்மையை உளறிக் கொட்டிய காரணத்தாலே விளைந்தது. எவ்வளவு மனம் நொடிந்திருந்தால் தாயின் வார்த்தைகளையும் மதியாமல், புறந்தள்ளி சென்றிருப்பான். அவன் மனதில் இந்த அளவு ஆழமான காயம் ஏற்படும் என்பதனை எவருமே எதிர்நோக்கவில்லை. தமையனும் தடுத்துப் பார்த்தான், அவன் வேதனைகளைக்கு முன்பு ஏதுமே பெரிதான ஒன்றாக அவனுக்குத் தோன்றவில்லை போலும்! அவன் சென்றதிலிருந்து சரியாக உணவையும் ஏலாமல் வீற்றிருந்தார் தர்மா. அவரது உடல்நிலை சன்னமாக வீழ தொடங்கி இருந்தது. மூத்தவனுக்கோ என்னச் செய்வது என்றே விளங்காமல் போனது. அவனது கைப்பேசி அழைப்புகளையும் அவன் எடுக்கவில்லை. பொறுமையிழந்தவனாய் உடையானின் மித்திரனுக்கு அவன் அழைப்பு விடுத்தான்.
"சொல்லுங்கண்ணா!" என்றது மறுமுனை.
"ரவி..!உதய்கிட்ட போன் கொடு!" அவன் குரலில் ஒரு விரக்தி தெரிந்தது.
"என்னது? உதய்கிட்ட நான் போன் கொடுக்கணுமா? நான் தான் அதை சொல்லணும்! மூணு நாளா ட்ரை பண்ணிட்டு இருக்கேன்ணா, போனை எடுக்க மாட்றான்." என்றதும் தூக்கிவாரிப் போட்டது ஆதிக்கு!
"என்னடா சொல்ற? அவன் அங்கே இல்லையா?" என்று சந்தேகமாய் அவன் உரைத்த விதம் தர்மாவை பதற வைத்தது.
"ஆமாண்ணா! இரண்டு நாள் முன்னாடி கிளம்ப போறேன்னு சொன்னான். அப்பாடா, ஒரு வழியா வரான்னு நானும் தினமும் போன் போடுறேன். காலையில வீட்டுக்கே போய் பார்த்துட்டு வந்துட்டேன்ணா! அவன் வரவே இல்லைன்னு சொன்னாங்களே!ஐயோ...இரண்டு மூவிக்கு கால் சீட் புக் ஆகியிருக்குண்ணா! அந்த லூசு வந்தவுடனே எனக்குப் போன் பண்ண சொல்லுங்க!" என்று வாதாடினான் ரவி.
"ஆ...சரிப்பா! நான் சொல்றேன்." என்று இணைப்பினைத் துண்டித்தான் ஆதித்யா.
"என்னடா? என்னாச்சு?எங்கே அவன்?" பதறிப்போனார் தர்மா. அவனிடத்தில் பதில் இல்லை, செய்வதறியாது அமர்ந்திருந்தான் பெரியவன்.
"அவன் ஊருக்கே போகலையாம்மா!" அவனது கண்கள் கலங்கியே விட்டன. அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அனைத்து சம்பவங்களும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்க, அனைத்திற்கும் தான் மட்டுந்தான் காரணம் என்றுத் தன்னைத் தானே நொடிந்துக் கொண்டார் தர்மா.
"எல்லாம் என்னால தான்! நான் தான் எல்லாத்துக்கும் காரணம். " என்று கதறி அழுத தாயினைத்