என்றுவிட்டான்.
புத்தகங்கள் எதையும் அவள் எடுத்து வரவும் இல்லை. அவள் கொண்டு வருவதற்கான பொருட்களை வீட்டினர்தான் பெட்டியில் வைத்தனர். அதனால் அவள் எதையும் தனக்காக எடுத்து வரவில்லை. இப்போது அவனிடம் இறங்கி படிப்பதற்கு கதை புத்தகம் வேண்டும் என்றாள். வேறு வழி. அவனிடம்தானே கேட்டாக வேண்டும்.
அவள் அப்படி கேட்டபோது அவளை ஏற இறங்கப் பார்த்தான். போய்விட்டான். வீட்டில் தொலைக்காட்சியும் இல்லை. அவள் என்னதான் செய்வாள்?
இப்போது தொலைக்காட்சி என்பது அவசியம் ஆகிவிட்டது. அது கூடவா அவன் வாங்கி வைக்கக்கூடாது.
அவனிடம் கேட்டு பிரயோசனம் இல்லை என்று தன் தந்தைக்கு அழைத்தாள். விவரத்தைக் கூறினாள்.
அதற்கும் எந்த பலனும் இல்லை. அவளுடைய தந்தையால் அவளுக்குப் பதில் கூறமுடியவில்லை போலும். மகளின் விருப்பத்தை அவரால் மறுக்க முடியவில்லை. அதனால் அவளுடைய தாய் வளர்மதிதான் அவளுக்கு அழைத்துப் பேசினாள்.
“மாப்பிள்ளை ஏற்கனவே அவருடைய வசதிக்கு ஏத்த மாதிரிதான் நீ வாழனும்னு சொல்லிட்டார். அதற்கு நாங்களும் மறுப்பு சொல்லலை. நம்மகிட்ட இருந்து அவர் எந்த பொருளையும் எதிர்பார்க்கலை. இப்ப நீ கேட்டேன்னு நாங்க டிவி வாங்கிக் கொடுத்தா நாங்க அவரை மதிக்காத மாதிரி ஆகிடும். கண்டிப்பா டிவி பார்த்தே ஆகனுமா? அப்படின்னா மாப்பிள்ளைக்கிட்ட கேளு. அவர் மனசு கோணாம நடந்துக்க. சொல்லிட்டேன். எந்த பிரச்சினையும் பண்ணிக்கிட்டு இங்கே வரலாம்னு இருக்காதே. அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது.”
வளர்மதி மகளைப் பேச விடாமல் கண்டிப்புடன் பேசிவிட்டு வைத்துவிட்டாள். தந்தையால் இப்படி கண்டிப்புடன் அவளுடன் பேசியிருக்க முடியாது. அதே நேரம் மாப்பிள்ளையை மதிக்காமலும் இருக்க முடியாது. அதனால் தான் தன் அன்னையிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு தப்பித்துக்கொண்டார் என்று புரிந்து கொண்டாள்.
அவளுக்கு தன் அன்னையின் பேச்சைக் கேட்டு வேதனையாக இருந்தது.
அப்படியா அவனுடன் சண்டையிட்டு அவள் வீட்டை விட்டு கிளம்பிவிடுவாள். அப்படி செய்வதற்கு முன்பு தன் வீட்டினரைப் பற்றி யோசிக்கமலா மகள் செயல்படுவாள் என்று தன் அன்னைக்கு தெரியாமல் போயிடுச்சே.
‘அவனிடம் வெட்கத்தை விட்டுப் புத்தகம் கேட்டே கிடைக்காமல் போய்விட்டது. இப்போது டிவி கேட்டால் வாங்கிக்கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான்.’ என்று மனதிற்குள்ளேயே வெதும்பினாள்.