தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 18 - சகி
எதற்காக இங்கு வந்தோம்? எதற்காக சிறைப்படுத்தப் பட்டோம் என்று ஏதுமே விளங்கிடாமல் சாளரத்தின் வழி அகண்ட பிரம்மாண்டத்தினைக் கண்ணீரோடு தரிசித்தவண்ணம் அமர்ந்திருந்தார் தர்மா. அழுதழுது கண்ணீரே தீர்ந்துப் போனது என்று விழிகள் இரண்டு யாசிக்கும் அளவிற்குத் தனது சோகங்களை அழுதுப் புலம்பினார் அவர். அவரை சமாதானம் புனைய அகிலாண்டேஷ்வரி எவ்வளவோ முயன்ற போதும் அவர் ஒருவரிடமும் எவ்வித வார்த்தையும் உரைக்கவில்லை. அந்த ஒரே அறைக்குள் மட்டுமே சிறைப்பறவையாய் வீற்றிருந்தார் அவர். பொழுதும் சாய்ந்தது; வானின் தீர்க்கரேகையில் சந்திரனானவன் உதித்தும்விட்டாகிவிட்டது. மனம் முழுதும் புதல்வனின் எண்ணம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது! தன்னையும் துறந்தானா அவன் என்ற எண்ணமுமே தாய்மனப் பாரத்தினை இரட்டிப்பாக்கியது. மறுபக்கம், அவன் நிச்சயம் வருவான் என்றுத் திண்ணமாகி இருந்தது உள்ளுணர்வு! எவ்வளவுப் பவித்ரமான அன்பு! எவரால் கூறிவிட இயலும், தாய்மைக்கு நிகர் ஒன்று உண்டு என்பதனை? கருவில் பிறந்தாலும், இல்லையெனினும் தாய்மை என்றுமே தாய்மை அல்லவா! அதனை வெல்லத்தான் ஒரு சக்தி வையத்தில் இருந்துவிட முடியுமா?ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தவரின் அறைக்கதவுத் திறவப்பட, திடுக்கிட்டவராய் வாயிலை நோக்கினார்.அவர் தனிமையில் இருக்கும் வேளை, அப்பவனத்தில் பிரவேசிக்கும் அதிகாரம் எவரிடத்தில் உண்டோ அச்சமயமும் அவரே அவ்வறைக்குள் நுழைந்தார். அவர் அறிவார் எண்ணிலடங்கா வேதனையை தன்னவளுக்கு வழங்கிக் கொண்டிருப்பதனை நிச்சயம் அவர் அறியாமல் இல்லை. அவருக்கென உண்ண உணவினை எடுத்துக் கொண்டு வந்தார் இராகவன்.ஏனோ அவரது முகமும் காண விரும்பாதவராய் தன் கவனத்தினை வேறுத் திசைக்கு மாற்றிக் கொண்டார் அவர். தன் மகன் தன்னைப் பிரிந்ததன் காரணம் அவர்தான் என்ற நம்பிக்கை அவருக்கு! தயக்கத்துடன் அவர் அருகே வந்து அமர்ந்தார் இராகவன்.
"நீ சாப்பிட்டு இருக்க மாட்டேன்னு தெரியும். சாப்பிடு!" என்றுக் கொணர்ந்த பண்டத்தினைச் சிறிதளவு பிய்த்து அவருக்கு ஊட்டிவிட அவர் முயல, எரிச்சலுடன் முகம் சுழித்தார் அவர்.
"தர்மா என்னைப் பாரு!" மனைவியின் இந்த விலகல் அவரை பெரிதாய் ஆட்படுத்த அவரது கண்கள் கலங்கிப் போயின.
"என் மேலே இருக்கிற கோபத்தை சாப்பாடு மேலே காட்டாதே!ப்ளீஸ்..." எவ்வளவு மன்றாடியும் அவரிடத்திலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. அவர்தம் மனம் முழுதிலும் புதல்வனைப் பற்றிய எண்ணம் மட்டுமே வியாபித்திருந்தது. அவனது நினைவுகள் எழுந்த மாத்திரமே அவரது கண்கள் கலங்கிப் போயின. வானிர் எழுந்த சந்திரன் அவர்படும் வேதனைகள்