அவங்க நிச்சயமா நல்லவங்களாதான் இருப்பாங்க. இது சின்னப்பையனான எனக்குத் தெரியுது. ஆனால் பாவம் என்னோட அம்மாவுக்குப் புரியலை.”
பரத் வெள்ளை மனதுடன் பேசியது அவளுக்குப் பிடித்திருந்தது.
பரத் தன் தந்தையை ஒத்திருக்கிறான் என்று புரிந்தது. செல்வி ஒருவேளை அவளது அம்மாவைக் கொண்டு பிறந்திருக்கலாம்.
“நீ இத்தனை நாளா ஏன் இங்கே வரலை?” என்றாள்.
“அக்கா. பரிட்சை சமயம். அதான் நான் உங்க கல்யாணத்துக்கு வந்துட்டு உடனே போயிட்டேன். இப்ப பரிட்சை எல்லாம் முடிஞ்சுடுச்சு. அதான் வந்தேன்.”
“தங்கற மாதிரி வந்திருக்கலாமே?”
“தங்கற மாதிரிதான் வந்திருக்கேன்க்கா. ஏதும் கொண்டு வரலைன்னு பார்க்கறீங்களா? எப்போதும் என்னோட டிரஸ் இங்கே இருக்கும். நான் இங்கே எப்ப வந்தாலும் அத்தானோடதான் தங்குவேன். அக்கா என்னை பட்டினி போட்டுடுவா.”
அவன் இயல்பாக அந்த வீட்டில் இருந்த இன்னொரு அறைக்குள் சென்றான்.
வீடு திரும்பிய மாதவனுக்கும் பரத்தைக் கண்டு மகிழ்ச்சிதான். மூவரும் இரவு உணவு சேர்ந்து உண்டார்கள்.
“அக்கா. சூப்பர்க்கா. உங்க கை சமையலை சாப்பிட்டு எப்படி அத்தான் இன்னும் குண்டாகாம இருக்காரு தான் தெரியலை.” என்றான் விளையாட்டாய்.
“போதும்டா. ரொம்ப பேசாமல் சாப்பிடு.” என்றான் அதட்டலாய்.
“அக்கா. அத்தானுக்கு உங்க சமையலை நான் பாராட்டுறேன்னு பொறாமை. அவரை விட நீங்க நல்லா சமைக்கிறீங்கள்ல.” என்று அவளிடம் கிசுகிசுத்தான். அவன் மாதவனை விட்டுவிட்டு தன்னிடம் நெருக்கம் காட்டுவது கண்டு மகாலட்சுமிக்கு அவனை மிகவும் பிடித்துப்போய்விட்டது. அவளுக்கு தம்பி இல்லை. அவனிடம் உடன் பிறந்த தம்பி போன்ற பாசம் அவளுக்கு உருவானது. இரவு அவனுக்கும் பால் கொடுத்துவிட்டு படுக்கச் சென்றாள். ஏனோ அவள் முகம் மலர்ச்சியுடன் இருந்தது. மாதவன் அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தான். அவன் எப்படியாவது பார்க்கட்டும் என்று கண்டு கொள்ளாமல் படுத்துவிட்டாள்.
மறுநாள் அவள் பரத் வந்திருப்பதால் ஹோட்டலுக்குச் செல்லவில்லை. அவன் மட்டும் எப்படியிருப்பான்?
புகுந்த வீட்டு சார்பாய் அவளிடம் நன்றாகப் பழகும் ஒரு உறவினன்.
“அக்கா. நீங்க ஹோட்டலுக்குப் போவீங்கன்னு அத்தான் சொன்னாரே.”
“இல்லை பரத். இன்னிக்கு நான் போகலை. நீ மட்டும் எப்படி தனியா இருப்பே?”
இயல்பாக சிரித்துக்கொண்டே பேசிய அவளை பிரியமுடன் பார்த்தான் பரத்.