தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 05 - முகில் தினகரன்
கோவிலிலிருந்து திரும்பியதும் அர்ச்சனா தன் பேக்கை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாய் அலுவலகம் கிளம்பிச் சென்று விட, தனித்திருந்த சுலோச்சனாவிடம் வந்த பார்வதி, “என்னம்மா கோயில்ல இன்னிக்கு கூட்டம் குறைச்சலாய்த்தான் இருந்திருக்கும் போலிருக்கே!”
“ஆமாம்...எப்படிக் கண்டுபிடிச்சே?”
“இதென்ன பெரிய வித்தையா?...வழக்கமா பிரதோஷத்துக்குப் போனீங்கன்னா...வர ஒரு மணி நேரத்துக்கும் மேலாகும் இன்னிக்கு அரை மணி நேரம் கூட ஆகலே...அதுக்குள்ளார வந்துட்டீங்களே?...சரி...இப்பவே சாப்பிட வர்றியா...இல்லை லேட்டாகுமா?”
“ம்ம்ம்...கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேம்மா...என்னமோ தெரியலை பசியே ஆகமாட்டேங்குது!” என்று சுலோச்சனா சங்கடத்துடன் சொல்ல,
“என்னடி ராசாத்தி இப்படிச் சொல்லுறே?...நான் வேணா இங்கியே கொண்டு வர்றேன்...இப்படியே சாப்பிட்டுக்கறியா?”
அம்மாவிடமிருந்து வந்த அந்தக் கரிசனம் சுலோச்சனாவிற்குப் புதிதாகத் தெரிய, “என்னம்மா...திடீர்ன்னு “கரிசனம் கட்டிட்டு அழுகுது...கண்ணாடி சுவரு புட்டுக்கிட்டு விழுகுது” கிண்டலாய்க் கேட்டாள் சுலோச்சனா.
”ஏண்டி அப்படிச் சொல்றே?...எம்மகள் மேல நான் கரிசனம் காட்டாம வேற யார் காட்டுவாங்களாம்?” என்றபடி சுலோச்சனாவின் அருகில் வந்து அமர்ந்து, அந்த விஷயத்தை மெல்ல ஆரம்பித்து, நிதானமாய்...நாசூக்காய் வார்த்தைகளைக் கோர்த்து, சுலோச்சனாவின் மனதில் எந்த விதமான தாழ்வு மனப்பான்மையும் தோன்றி விடாதபடி பக்குவமாய்ச் சொல்லி முடித்தாள் பார்வதி.
“குபீர்”என்று உள்ளுக்குள் கனன்ற வேதனைத் தீயை ஒரு விரக்திச் சிரிப்பில் அணைத்த சுலோச்சனா, “அம்மா!...அப்பாவும் நீயும் எனக்கு இந்த “சுலோச்சனா”ங்கற பெயரை தெரிஞ்சு வெச்சீங்களோ?...இல்லை தெரியாம வெச்சீங்களோ எனக்குத் தெரியலை!...ஆனா எல்லாமே அந்தப் பேருக்குத் தகுந்த மாதிரி “சுலோ”வாகவே நடக்குது!...யோசிச்சுப் பாரு...ஒன்றரை வயசுல நடக்க வேண்டிய நான் நாலரை வயசுலதான் நடக்கவே பழகினேன்!னு நீயே சொல்லியிருக்கே!...அதே மாதிரி...பனிரெண்டு...பதிமூணு வயசுல மத்த பொண்ணுங்கெல்லாம் சடங்காகிடுவாங்க!...ஆனா நான்?...பதினஞ்சு வயசுலதான் ஆனேன்!...பதினேழு வயசுல முடிக்க வேண்டிய ப்ளஸ்டூவை பெயிலாகிப் பெயிலாகி இருபது வயசுலதான் முடிச்சேன்!...இப்பக் கல்யாணமும் அந்த லிஸ்டுல ஒண்ணா சேர்ந்திடுச்சு...அவ்வளவுதான்!” என்று சோகப் புன்னகையுடன் சொல்லி விட்டு,
“பரவாயில்லைம்மா...எனக்கு அமையாத அந்த நல்ல வாழ்க்கை அர்ச்சனாவுக்காவது