இம்சைக்கான ஒரே ரிலீஃப் அவனைப் போய் நேர்ல பார்த்து நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு வர்றதுதான்!” என்று உணர்ச்சி பொங்கச் சொல்ல,
“எங்க இருக்கு...அவன் வேலை பார்க்கற பேங்க்?”
“பஜார் ஸ்டிரீட்டுலதான்!”
“அப்புறமென்ன?...ஒரு மணி நேரம் பர்மிஸன் போட்டுட்டுப் போயிட்டு வந்திடு!” சவிதா அர்ச்சனாவைக் கொம்பு சீவி விட்டாள்.
“யூ ஆர் கரெக்ட் சவிதா!” என்று விரலை ஆட்டிச் சொல்லி விட்டு, மேனேஜர் அறைக்குச் சென்று, ஒரு மணி நேரம் பர்மிஸன் சொல்லி விட்டு, அலுவலகத்தை விட்டு வெளியேறினாள் அர்ச்சனா.
****
அந்த நேரத்தில் வங்கியில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அர்ச்சனாவிற்கு அது சந்தோஷத்தையே கொடுத்தது. “நான் திட்டறதை நாலு பேர் கேட்கறதை விட...நாற்பது பேர் கேட்கறதுதான் எனக்கு வேணும்!”
வெள்ளுடை அணிந்திருந்த வங்கி பியூனிடம் அந்த மாப்பிள்ளைப் பையனின் பெயரைக் குறிப்பிட்டு அர்ச்சனா கேட்க, அவன் சற்றுத் தள்ளியிருந்த ஒரு மேஜையைக் காண்பித்தான். அங்கே, கம்ப்யூட்டர் மானிட்டரில் கண்களைப் பதித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனிடம் நேரே சென்று, அவன் மேஜைக்கு எதிரே நின்றாள்.
நிதானமாக தலையைத் தூக்கிப் பார்த்தவன், எதிரே அர்ச்சனா நிற்பதைக் கண்டு முகம் பிரகாசமாகி, “ஓ...வாங்க! வாங்க!...உட்காருங்க!” என்றான் அவன் எதிரே இருந்த சேரைக் காட்டி,
“நான் உன்கிட்ட உட்கார்ந்து கடலை போட இங்க வரலை!...” என்று உரத்த குரலில் அர்ச்சனா சொன்ன பதில் அவனைத் திக்குமுக்காட வைக்க, தர்ம சங்கடமாய் சுற்றும் முற்றும் பார்த்தான். சக ஊழியர்களும், ஒரு சில வங்கி வாடிக்கையாளர்களும் அவர்களைத் திரும்பிப் பார்ப்பதைக் கண்டு,
“ப்ளீஸ்...கொஞ்சம் மெதுவாய்ப் பேசுங்க!...இது பேங்க்!” என்றான் கெஞ்சல் குரலில்.
“இது “பேங்க்!”ன்னு தெரிஞ்சுதாண்டா வந்திருக்கேன்!...ஏண்டா...பொண்ணு பார்க்க வர்றது ஒருத்தியை!...பார்த்திட்டு வந்து கட்டிக்க சம்மதம் சொல்றது வேறொருத்தியையா?...நீ ஆம்பளைங்கறதுக்காக என்ன வேணாலும் செய்வியா?” அர்ச்சனா தன் கத்தலை அதிகப் படுத்திக் கொண்டு கேட்டாள்.
அந்த வங்கிக்குள் இருந்த அத்தனை பேரும் தங்கள் பார்வையை மொத்தமாய் அர்ச்சனாவின் மீது குவிக்க,
இரண்டு சீனியர் ஆபீஸர்கள் அவசரமாய் அவர்களிடம் வந்து, “என்ன பிரபாகர்?...என்ன பிரச்சினை இங்கே?” பரபரப்புடன் கேட்டனர்.