“பரவாயில்லையே...இந்தக் கதை டீ.வி.சீரியல்ல வர்ற மாதிரியே இருக்குதே!” சீரியல் அடிமையான ஒரு பெண் தன்னுடன் வந்திருந்தவளிடம் கிசுகிசுத்தாள்.
நிலைமையைச் சீராக்கும் பொருட்டு சீனியர் ஆபீஸர் ஒருவர் அர்ச்சனாவின் அருகே வந்து, “சரிம்மா...நீ இப்ப இவரு என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கறே?” சற்றுத் தணிவான குரலில் கேட்டார்.
“இவருக்கு என்னைத்தான் பிடிச்சிருக்காம்!...எங்க அக்காவைப் பிடிக்கலையாம்!...அதனால என்னைக் கட்டிக்க சம்மதமா?ன்னு கேட்டு தரகரைத் தூது அனுப்பியிருக்கார்!...இப்ப நான் சொல்றேன்!...எனக்கு இவரைப் பிடிக்கலை!...இவரு கூட வந்திருந்த இவரோட தம்பியைத்தான் பிடிச்சிருக்கு!...அவருக்கு என்னைக் கட்டி வைக்க சம்மதமா?ன்னு கேட்டு நானே நேர்ல வந்திருக்கேன்!...பதில் சொல்லச் சொல்லுங்க!...கேட்டுட்டு நான் போறேன்!” என்றாள் விறைப்பாய்.
அவளது அந்தக் குதர்க்கமான கேள்விக்கு யாராலுமே பதில் சொல்ல முடியாததால் எல்லோருமே அமைதி காக்க,
அர்ச்சனாவே தொடர்ந்தாள், “எங்க அக்காவோட போட்டோவைப் பார்த்துப் பிடிக்குதுன்னு சொல்லி நேர்ல பொண்ணுப் பார்க்க வந்தவன், அவ கூட நின்னுட்டிருந்த என்னைப் பார்த்து மயங்கி...மனசு மாறி..இப்ப என்னைக் கட்டிக்கறேன்!னு சொல்றியே?...இதே மாதிரி கல்யாணத்திற்குப் பிறகு என்னை விட அழகா வேற எவளையாச்சும் பார்த்தா அவ அழகுல மயங்கி மனசு மாறி...என்னை டைவர்ஸ் பண்ணிட்டு அவளைக் கட்டிக்குவியா?...சொல்லுடா நாயே!”
அவள் வார்த்தைகள் வரம்பு மீறுவதைக் கண்ட சக ஊழியர்கள் அவளைச் சமாதானப் படுத்தி, வெளியே அனுப்ப தீவிரமாக முயற்சிக்க,
“நீங்க யாரும் என்னைத் துரத்த வேண்டாம்!...நானே போயிடறேன்!...போறதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு சொல்லிட்டுப் போறேன்!...இதுவே கடைசியா இருக்கட்டும்!...இனிமே இந்த மாதிரி பெண்களைக் கிள்ளுக் கீரையா நெனச்சு மட்டமா பிஹேவ் பண்றதை நிறுத்திக்க!...இல்லே....பெரிய விளைவுகளைச் சந்திப்பே...ஜாக்கிரதை”
பட..படவெனப் பொரிந்து தள்ளிவிட்டு, வேக வேகமாக வெளியேறினாள் அர்ச்சனா.
அவள் சென்ற பின்னும், அவள் ஏற்படுத்தி விட்டுச் சென்ற அதிர்வு, மாப்பிள்ளைப் பையன் பிரபாகரின் பிடரிகளில் வியர்வையை விடாமல் சுரக்கச் செய்து கொண்டிருந்தது.
அதே நேரம், அந்த வங்கியின் இன்னொரு மூலையில் வேறொரு ஆத்மா கண்ணீர் சிந்துவதை யாருமே கவனிக்கவில்லை.
தொடரும்...
Next episode will be published on 12th Dec. This series is updated weekly on Saturdays.