தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 05 - முகில் தினகரன்
விஸ்வா டவர்ஸின் இரண்டாவது தளத்திலிருந்த அந்த புத்தக கடையின், கல்லாவில் அமர்ந்திருந்த அதன் உரிமையாளர், கடையில் வேலை பார்க்கும் பெண்ணை அழைத்தார். “இந்தாம்மா பாக்கியம்...இங்க வாம்மா!”
வந்து நின்றவளிடம் “நான் கொஞ்சம் வெளிய போறேன்!...வர எப்படியும் ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆகும்!...கவனமா கடையைப் பார்த்துக்க...என்ன?” சொல்லியபடியே எழுந்தவர்
மீண்டுமொருமுறை அமர்ந்து கல்லா மேஜையின் டிராயர் பூட்டப்பட்டிருக்கின்றதா? என்பதை இழுத்துப் பார்த்துச் சோதித்து விட்டு மீண்டும் எழுந்து வெளியேறினார்.
அந்த புத்தக கடையின் எதிரே இருந்த பேன்ஸி ஸ்டோர்ஸிலிருந்து, இந்தக் கடையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்த பேன்ஸி ஸ்டோர்ஸின் ஓனர் திவாகர் புத்தக கடை முதலாளி வெளியேறுவதை சந்தோஷமாய்ப் பார்த்து விட்டு, மெல்லத் தன் கடையை விட்டு வெளியே வந்தான்.
வந்தவன், புத்தக கடைக்கு முன்னால் நின்று “உள்ளே வரலாமா?” என்று கேட்க
“எப்படா எங்க ஓனர் வெளிய போவான்?...உடனே இங்க வந்திடலாம்னு காத்திட்டிருப்பியா திவாகர்?” பாக்கியம் சிரிப்புடன் கேட்டாள்.
“பின்னே?...அந்தாளு இருக்கும் போது நான் வந்து உன் கிட்டப் பேசினாலே முறைக்கிறானே?”
“சரி...சரி...இப்ப எதுக்கு வந்தே?...அதைச் சொல்லு முதல்ல!” என்றாள் பாக்கியம்.
“கீழே...காம்ப்ளக்ஸோட ஆபீஸ் ரூம்ல செக்யூரிட்டி வேலைக்கு இன்னிக்கு இண்டர்வியூ நடந்தது தெரியுமா?” திவாகர் கேட்டான்.
“ம்...தெரியும்...ஆனா அதுக்கும் நீ இப்ப இங்க வந்ததுக்கும் என்ன சம்மந்தம்?”
“சம்மந்தம் இருக்குது பாக்கியம்!...அதாவது...இன்னிக்குத்தான் செக்யூரிட்டி வேலைக்கு இன்டர்வியூவே நடக்குது...ஸோ...இன்னிக்கு ராத்திரி இந்தக் காம்ப்ளக்ஸுல செக்யூரிட்டின்னு யாருமே இருக்க மாட்டாங்க!...”
“சரி...அதுக்கென்ன?”
“என்ன இப்படி சாதாரணமாக் கேட்டுட்டே?...இந்த மாதிரி ஒரு பொன்னான வாய்ப்பு இனிமே நமக்குக் கிடைக்கவே கிடைக்காது...அதனால....” சொல்லிவிட்டு அவன் ஒருவித விஷமச் சிரிப்புடன் பாக்கியத்தை பார்த்தான்.
“சொல்லு...அதனால...”
“அதனால...நீ இன்னிக்கு ராத்திரி வீட்டுல எதையாவது ஒரு காரணத்தைச் சொல்லிட்டு