ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி, அதன் மீதே ஸ்டைலாக அமர்ந்த தனசேகர் அந்த கிராமத்தின் விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரக் குடும்பங்கள் ஒன்றின் ஒரே வாரிசு. வசதியிலும், வசந்தத்திலும் ஊறித் திளைப்பவன். காசுக்கும் தண்ணீருக்கும் வித்தியாசம் தெரியாதவனாய் இரண்டையும் ஒரே மாதிரி இறைப்பவன். நிறத்திலும் அழகிலும் முரளியை விடக் கூடுதலாயிருந்த போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாய்ப் பழகுபவன்.
விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு, ஊருக்குள் மைனர் போல் திரிந்தாலும், ஏழையான முரளியிடம் அவன் கொண்டிருந்த நட்பு மட்டும் மாறாமலேயிருந்தது. காரணம்?...பள்ளி முதல் வகுப்பு முதல் இறுதி வகுப்பு வரை இருவரும் ஒன்றாகவே படித்தவர்கள்.
கிராமத்தில் பல பேருக்கு அவர்களுடைய நட்பு ஆச்சரியத்தைக் கொடுத்தாலும், சில பேருக்கு பொறாமையையும் கொடுத்திருந்தது. நட்புக்கு நிறமுமில்லை...ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசமும் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது.
தனசேகரின் குடும்பத்தார்க்கோ தங்கள் மகன் ஒரு ஏழை இளைஞனுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருப்பது சுத்தமாகவே பிடிக்கவில்லை. அதை கௌரவக் குறைவாகவே பார்த்தனர். பலமுறை கண்டித்தும், இணக்கமாய்ச் சொல்லிப் பார்த்தும், தனசேகர் முரளியின் நட்பை விடாமல் வஜ்ரம் போல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே இருந்ததால், “எக்கேடோ கெட்டுப் போ...எங்களுக்கென்ன?...நாளைக்கு ஒருத்தி வந்து அவள் பங்குக்குத் திட்டுவா...அப்ப அவளோட பேச்சைக் கேட்பே!” என்று விட்டுத் தொலைத்தனர்.
“இல்லை சேகர்...நான் இப்பத்தான் வந்தேன்...ஒரு அஞ்சு நிமிஷமிருக்கும்...அவ்வளவுதான்!” என்ற முரளி, கடைக்காரர் பக்கம் திரும்பி,
“விஸ்வநாதண்ணே...ரெண்டு எலுமிச்சம் பழ ஜூஸ் போடுங்க!..சேகருக்கு சக்கரை தூக்கலா!” என்றான்.
“ஆமாம் கடைக்காரரே...கொஞ்சம் ஐஸும் நெறைய போட்டு...சும்மா “குளு..குளு”ன்னு குடுங்க” என்றான் தனசேகர்.
“ஆமாம்...எதுக்கு என்னைய இங்க வெய்ட் பண்ணச் சொன்னே?...எங்காவது போக வேண்டியிருக்கா?” முரளி கேட்டான்.
அப்போது கடைக்காரர் இரண்டு கண்ணாடி டம்ளர்களில் ஜூஸ் நிரப்பிக் கொண்டு வந்து நீட்ட, இருவரும் வாங்கிக் கொண்டனர்.
முதல் வாய் பருகிய முரளி, “ஸ்ஸ்ஸ்ஆஆஆ.... பயங்கரமா ஜில்லுன்னு இருக்கு” என்று சொல்ல,