மனதில் ஏதோ விபரீதமாய்ப்பட்ட்து.
“ஏன்?...ஏன் சரிப்பட்டு வராது?” வண்டியின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு கேட்டான் தனசேகர்.
“அதாவது...உங்க வீட்டிலேயே நாம ரெண்டு பேரும்...ரொம்ப நட்பா பழகறதை விரும்ப மாட்டேங்கறாங்க!...ஏதோ நீ கொஞ்சம் பிடிவாதமாய் இருந்ததால்...கண்டுக்காம விட்டுட்டிருக்காங்க!...உங்க வருங்கால மாமனார் கெழக்குச் சீமை பண்ணையாரு...நான் உன் கூட பைக்ல வந்து இறங்கறதைப் பார்த்தா செமக் கோபமாயிடுவார்!...அதனால உன் மதிப்புதான் குறையும்!...என்னால உனக்குத்தான் அவமானம்!....அதனால....பேசாம வண்டியைத் திருப்பு...நாளைக்கு உங்க வீட்டுல நிற்குதே ஒரு கப்பல் காரு?...அதை எடுத்துக் கிட்டு...உன்னோட அப்பாவையும் அம்மாவையும் கூட்டிக்கிட்டுப் போய் அவங்களுக்கு பத்திரிக்கை வை!...அதுதான் மரியாதை!” என்றான் முரளி.
“க்ரீச்”சென்று பிரேக்கிட்டு வண்டியை நிறுத்திய தனசேகர்,
“டேய் முரளி!..நீ ஆயிரம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்!...நானும் நீயும்தான் போறோம்!...அந்தப் பொண்ணைப் பார்த்து பத்திரிக்கை குடுக்கறோம்!...அதை அவங்க ஏத்துக்கிட்டாலும் சரி...ஏத்துக்கலைன்னாலும் சரி!...எனக்குக் கவலையில்லை!...எனக்கும் உனக்கும் இடையிலான இந்த நட்பை மதிக்கறவங்கதான் எனக்கு வேணும்!...உண்மையைச் சொல்லணும்ன்னா...நம்மோட நட்பை அந்தப் பெண் எப்படிப் பார்க்கிறாள்?...என்பதைத் தெரிஞ்சுக்கத்தான் இந்த டிரிப்பே”” ஆணித்தரமாய்ச் சொன்னான்.
“தனசேகர்...வேண்டாம்!...“இது வாழ்க்கைப் பிரச்சினை!...இதுல பிடிவாதம் பிடிக்காதே!” என்று சொல்லி விட்டு சில நிமிடங்கள் யோசித்த முரளி, “வேணும்னா இப்படிச் செய்வோம்...நான் அங்க வந்து...வெளிய பைக் பக்கத்திலேயே நின்னுக்கறேன்!...நீ மட்டும் போயிட்டு வந்திடு...என்ன?” என்று முரளி பதிலளிக்க,
“த பாரு முரளி...வீணா என் கைல அடி வாங்கிக்காதே!...ஒழுங்கா என் பின்னாடியே வர்றே...நான் உட்காரும் போது என் பக்கத்திலேயே உட்கார்றே...அவ்வளவுதான்” சொல்லி விட்டு பைக்கைக் கிளப்பி, “விர்”ரென்று பறந்தான் தனசேகர்.
அடி வயிற்றில் அமிலம் சுரந்தது முரளிக்கு.
தொடரும்