தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 11 - விஜேஜி
சிறிது நேரத்தில் அவளுக்கு வலி அதிகமாகியது, "ஆது, அஜய், " என்று கூப்பிட்டாள் தனம்.
இருவரும் அங்கு வந்தனர்.
"ஆது இங்க வாயேன் எனக்கு கொஞ்சம் வலியா இருக்கு" என்று கூறினாள்
"என்ன வலியா?" என்று பயந்தான் அப்துல்.
"மாம் உனக்கு என்ன பண்றது? டாக்டர்கிட்ட போலாமா?" என்று கேட்டான் அஜய்.
"அம்மீ எங்க இருக்கீங்க? நீங்க உடனே வாங்க தனத்துக்கு வலிக்கிறதாம்." என்று அப்துல் கூப்பிட்டான்.
"டேட் பாட்டிம்மாவ ஏன் எழுப்பறீங்க அவங்க தூங்கிட்டு இருக்காங்க ,நாம அம்மாவை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போலாம் வாங்க."
"அதற்குள் நிக்கத் இறங்கி வந்தார். என்ன அபூ கூப்பிட்டியா?"
"ஆமாம் அம்மி தனத்துக்கு வலிக்குது என்றான். நானும் அஜயும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறோம், நீங்க குழந்தைகளை பார்த்துக்கறீங்களா வீட்டுல?"
"தனம் என்னம்மா தங்கம் உனக்கு ரொம்ப வலிக்குதா? இரு கொஞ்சம் கஷாயம் போட்டு தரேன் வலி குறையுதா பார்க்கலாம்."
"என்ன அம்மி நீங்க? அவளே வலின்னு சொல்லிண்டு இருக்கா நீங்க வந்து இப்ப கஷாயம் சாப்பிடுங்கறீங்க, நாங்க டாக்டரிடம் கூட்டிப் போறோம் அம்மீ! "
எனக்கு உன்னோட பதட்டம் புரியுது அபூ. கஷாயம் குடித்தால் சூட்டு வலின்னா , அது சரியாயிடும், உண்மையான வலி இருந்தால் அதிகமாகும் நீ கவலை படாதே அபூ."
"அம்மி, என்ன அம்மீ இது?"
"ஆது, ஆண்டீய ஒன்னும் சொல்லாத, அவங்க சொல்றது சரிதான்."
"சரி அம்மீ கஷாயம் போட்டுக் கொடுங்க சீக்கிரம்!” என்றான், அப்துல்
அஜய்க்கு அம்மா துடிப்பது கஷ்டமாக இருந்தது. அம்மாவை தன்னோடு அணைத்துக் கொண்டு அவளுக்கு எப்படியாவது வலி குறையாதா என்று பார்த்துக் கொண்டிருந்தான் தன் அப்பாவிடம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம் என்றான்.
"அம்மீ நாங்க ஹாஸ்பிடலுக்கு, கூட்டிட்டு போறோம்."
"ஆமாம் பாட்டிம்மா நாங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறோம். அம்மாக்கு லேபர் பெயின் தான்னு தோன்றது."
" சரி, அப்ப சீக்கிரமே கூட்டிட்டு போங்க, அப்பப்ப எனக்கு போன் பண்ணி எப்படி இருக்குன்னு சொல்லுங்க!"
" சரி அம்மீ!" என்று கூறி, கிளப்பினார்கள் இருவரும்.