தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 04 - பிந்து வினோத்
மஞ்சு ஒரு வருடத்திற்கும் மேலே துர்காவின் கீழ் வேலை செய்திருக்கிறாள். எப்போதுமே துர்கா ஒரு நல்ல மேனேஜர் என்று சொல்லும் விதத்தில் தான் செயலாற்றி இருக்கிறாள்.
மனோஜ் ஆன்சைட்டில் இருந்தப் போதும் சரி, மஞ்சு லீவுக்கு விண்ணப்பம் கொடுத்தப் போதும் சரி, மேனேஜர் என்று மட்டும் இல்லாமல், புரிந்துக் கொள்ளும் ஒரு சக மனுஷியாக நடந்துக் கொண்டிருக்கிறாள்!
இப்போது என்ன?
“எனக்குப் புரியலை துர்கா?” என்று உண்மையாகவே புரியாமல் கேட்டாள் மஞ்சு.
“உன் வெகேஷன் முடிஞ்ச உடனே, நீ முதல்ல ஜாய்ன் செய்யனும் மஞ்சு. அதுக்கு அப்புறம் மீதியைப் பார்க்கலாம். என்னால இப்போ வேற எதைப் பத்தியும் கமன்ட்டும் செய்ய முடியாது, கமிட்மென்ட்டும் கொடுக்க முடியாது,” என்ற துர்காவின் பேச்சு இப்போதும் தொட்டும் தொடமலும், ‘மேலே எதுவும் பேசாதே’ என்ற விதத்திலேயே இருந்தது.
இருந்தாலும்,
“பட் துர்கா, எனக்கு வேற வழி இல்லை. நான் ரிசைன் செய்...” என மஞ்சு பேசிக் கொண்டிருக்கும் போதே துர்கா குறுக்கிட்டு பேசினாள்.
“மஞ்சு, இதுல நாம பேசவோ, நான் ஹெல்ப் செய்யவோ எதுவும் இல்லை. வேணும்னா ஹெச்.ஆர் கிட்ட பேசி பார். என்னோட நெக்ஸ்ட் மீட்டிங்குக்கு நான் ப்ரிபேர் செய்யனும். ஸோ, பை.”
குழப்பத்துடன், “பை...” என மஞ்சு சொல்லும் முன்பே துர்கா அழைப்பை துண்டித்திருந்தாள்.
துர்காவிற்கு என்ன ஆனது? அதுவும் முதலில் எப்போதும் போல நன்றாக தானே பேசினாள்??
மஞ்சுவால் என்ன என்று அறித்துக் கொள்ளும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. நிர்மலிடம் கேட்டுப் பார்க்கலாமா என்று யோசித்து விட்டு உடனே மனதை மாற்றிக் கொண்டாள்.
இது போன்ற விஷயங்களுக்கு அமுதா தான் சரியான ஆள்!
யோசித்த உடனேயே, காத்துக் கொண்டு இருக்காமல் அமுதாவின் இந்தியா நம்பரை காலிங் கார்ட் பயன்படுத்தி அழைத்தாள்.
“மஞ்சு!” என்ற அமுதாவின் குரலில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.
“எப்படி இருக்க? குட்டி பாப்பா எப்படி இருக்கா?”
“நாங்க நல்லா இருக்கோம். பாப்பாவும் சூப்பரா இருக்கா! நீ எப்படி இருக்க? உன்னுடைய எக்ஸ்டன்டட் ஹனிமூன் எப்படி போகுது?”
மஞ்சு வெட்கம் கலக்க சிரித்தாள்!
“சிரிப்பெல்லாம் களைக் கட்டுது! மனோஜ் உன்னை நல்லா கவனிக்குறார்ன்னு சொல்லு.”