தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 20 - முகில் தினகரன்
நகரின் இருதயப் பகுதியிலிருந்த அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் டீலக்ஸ் சூட்டில் ஏர்-கண்டிஷனர் அள்ளிக் கொட்டிய குளிரை ஒரு கேரள யுவதியின் உரசலில் உஷ்ணப்படுத்திக் கொண்டிருந்தார் என்.ஆர்.ஐ.சுப்ரமணியராஜா.
“என்ன ஒரு தைரியம் அந்த ஏ.சி.க்கு...என்னையே மிரட்டிப் பார்க்கிறான்!...இவனெல்லாம் குண்டுச் சட்டிக்குள்ளார குதிரையோட்டுற கோமாளி!...நான் இண்டர்நேஷனல் லெவல்ல ஃபிளைட் ஓட்டுற கோமான்!...என்கிட்டவே வந்து அவனோட வேலையைக் காட்டறான்...ஹூம்...நானெல்லாம் சிங்கப்பூர் கவர்ண்மெண்டுக்கு அல்வாவும்...சிங்கப்பூர் போலீஸுக்கு பால் கோவாவும் குடுக்கற ஆளு..என்கிட்ட...?..” விஸ்கியின் தாலாட்டலில் வீர வசனம் பேசினார்.
வெள்ளை வெளேரென்று வீங்கிப் போயிருந்த கேரளப் பெண் குட்டி “ப்ச்..நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப அதையே நெனச்சிட்டிருக்கீங்க?...அதான் சொல்லிட்டு வந்துட்டீங்கல்ல “உன்னால் முடிஞ்சா கேஸ் போட்டுக்க!”ன்னு அவ்வளவுதான் விட்டுடுங்க!” என்றாள் அப்பெண் நல்ல தமிழில் அழகாய். அவள் வாயிலும் விஸ்கி வாடை.
“நோ ரேஷ்மா!...அவனைப் பழி வாங்கணும்!...அவன் சொன்ன அந்தப் பேய்க் கதையெல்லாம் புருடான்னு இந்த உலகத்துக்கு புரூஃப் பண்ணனும்!”
“எப்படி முடியும் டார்லிங்?” கொஞ்சு குரலில் கேட்டாள்.
“ம்..நானே நேரடியா இன்னிக்கு ராத்திரி ஒன்றரை மணிக்கு அந்தக் காம்ப்ளக்ஸுக்குப் போகப் போறேன்!..போய் நேரடியாப் பார்த்திட்டு வரப் போறேன்!”
“அய்யய்யோ...வேண்டாம்...அது ரிஸ்க்!” அழகாய்ப் பயந்தாள் மலையாள மைனா.
“ஏய்...என்ன நீயும் பயப்படறியா?...நீயும் அந்த ஆவிகளை நம்பறியா?” அவள் தாடையைத் தொட்டுத் திருப்பியவாறே கேட்டார் சுப்ரமணியராஜா.
“நம்பலை...ஆனாலும் பயம்மாயிருக்கு!...உங்களுக்கு ஏதாச்சும் ஆயிடுமோ?ன்னு பயம்மாயிருக்கு!” சொல்லியபடியே அவள் அவரோடு இழைய
“கண்ணூ...நான் மட்டும் தனியா போறேன்னு நெனச்சியா?”
“அப்புறம்?” தன்னுடைய ஸ்ரீவித்யா கண்களை கவர்ச்சியாய் விரித்தாள்.
“என்னோட லாயர்...அவரோட ஜூனியர் ஒருத்தர்!...அப்புறம் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கற என்னுடைய நண்பர்கள் ரெண்டு பேரு!...ஆக மொத்தம் அஞ்சு பேரு போறோம்!...ஸோ...எனக்கு எதுவும் ஆயிடாது...போதுமா?”
“விதியை யாராலும் வெல்ல முடியாது என்.ஆர்.ஐ.” என்று எங்கிருந்தோ கேட்ட அசரீரி பாவம் அவருக்குக் கேட்கவில்லை.